வரலாறு - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் | 12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்காணும் அம்சங்களோடு அறிமுகமாதல்
• இந்திய சுதந்திரத்திற்கு முன் மதம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றம்
• தங்கள் ஏகாதிபத்திய நலன்களை மேம்படுத்துவதற்காக பிரிட்டிஷார்
கையாண்ட பிரித்தாளும் கொள்கை
• பிரிட்டிஷ் அரசு, முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகளை வழங்கியதன்
மூலம் முஸ்லிம் லீக்கும் ஜின்னாவும் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தக்
காரணமாக அமைதல்
• இந்திய அரசாங்கச் சட்டம், 1935இன் கீழ் காங்கிரஸ் பதவிகளை ஏற்றுக்கொண்டதன்
காரணமாக காங்கிரசுக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையே இடைவெளி அதிகரித்தல்
• நேரடி நடவடிக்கை நாளிற்கு ஜின்னா விடுத்த அழைப்பு மற்றும் அதன்
விளைவாக கல்கத்தாவில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை
• நாடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிவினை செய்யப்படுதல்
அறிமுகம்
பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பாக முகலாயர்கள்
மற்றும் அவர்களின் முகவர்கள் நாட்டின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர். ஆளும் வர்க்கங்களான
இறையாண்மையுள்ள அரசுகள், நிலப்பிரபுக்கள், படைத்தளபதிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர்
முஸ்லிம்களாக இருந்ததால் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் சில சலுகைகளை ஆளும் வர்க்கத்தினரிடமிருந்துப்
பெற்றனர். அலுவலக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் பாரசீகமொழி இருந்தது. ஆங்கிலேயர்
படிப்படியாக அவற்றை மாற்றி ஒரு புதிய நிர்வாக முறையை அறிமுகப்படுத்தினர். பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆங்கிலக் கல்வி முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. 1857ஆம்
ஆண்டுப் பெரும்புரட்சியே ஆளும் வர்க்கத்தினரின் இறுதி வாய்ப்பாக அமைந்தது. புரட்சியின்
கடுமையான அடக்குமுறைகளைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் தங்களது நிலம், வேலை உள்ளிட்ட வேறு
பல வாய்ப்புகளையும் இழந்ததோடு வறுமை நிலைக்கும் தள்ளப்பட்டனர். இத்தகைய நிலைக்குத்
தள்ளப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் நிலை
ஏற்பட்டது. மேலும் 1857ஆம் ஆண்டு பெரும்புரட்சிக்குப்பின் வாழ்ந்த முதல் தலைமுறையினர்
சிலர் ஆங்கிலேயரின் அனைத்து நடவடிக்கைகளையும் வெறுத்தனர். மேலும் அவர்கள் ஆங்கிலேய
காலனியக் கொள்கையால் ஏற்படுத்தப்பட்ட புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட இந்தியர்களோடு
போட்டியிட நேர்ந்ததால் சீற்றம் கொண்டனர். கல்வி கற்ற மேல்வகுப்பு இந்துக்கள் தேசிய
உணர்வு பெற்று எழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர்கள் நடுத்தர வர்க்க முஸ்லிம்களை காங்கிரஸின்
வளர்ச்சியை தடுத்து நிறுத்த ஒரு சக்தியாகப் பயன்படுத்தினர். அவர்கள் இத்தகைய சூழலைப்
புத்திசாலித்தனமாக தங்களுக்குச் சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டனர். இப்பாடத்தில் நாம்
மூன்று வகையான தேசியத்தின் போக்குகளை பற்றி அறிய உள்ளோம் அவையாவன: இந்திய தேசியம்,
இந்து தேசியம் மற்றும் முஸ்லிம் தேசியம் என்பவனவாகும்.