நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் | பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: எங்கள் தமிழ்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil
(இயல் 1 : கவிதைப் பேழை : எங்கள் தமிழ்)
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘நெறி' என்னும் சொல்லின் பொருள் ----------
அ) வழி
ஆ) குறிக்கோள்
இ) கொள்கை
ஈ) அறம்
[விடை : அ வழி]
2. ‘குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------
அ) குரல் + யாகும்
ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்
[விடை : ஆ. குரல் + ஆகும் ]
3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ----------
அ) வான்ஒலி
ஆ) வானொலி
இ) வாவொலி
ஈ) வானெலி
[விடை : ஆ. வானொலி ]
நயம் அறிக
1. 'எங்கள் தமிழ்' பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
எ.கா.
அருள்நெறி கொல்லா எல்லா
அதுவே கொள்கை என்றும்
2. 'எங்கள் தமிழ் பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
எ.கா.
அருள் கொல்லா அன்பும்
பொருள் எல்லா இன்பம்
3. ‘எங்கள் தமிழ் பாடலில் இறுதி எழுத்து ஒன்று போல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
எ.கா.
தரலாகும் புகழாது ஊக்கிவிடும்
குரலாகும் இகழாது போக்கிவிடும்
குறு வினா
1. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
❖ நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்.
❖ கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
❖ நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்.
2. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
❖ தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
❖ தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.
சிறு வினா
‘எங்கள் தமிழ்' பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
❖ நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தருகின்றது. அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
❖ தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.
❖ கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
❖ நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.
சிந்தனை வினா
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ். எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.
கற்பவை கற்றபின்
1. “எங்கள் தமிழ்” - பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
2. பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க.
கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!....(கத்தியின்றி...)
கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட!....(கத்தியின்றி...)