முன்றுறை அரையனார் | பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: விருந்தோம்பல் | 7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam
இயல் ஒன்று
கவிதைப்பேழை
விருந்தோம்பல்
நுழையும்முன்
தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் 'விருந்தோம்பல்' முதன்மையானதாகும். தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி. அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் பாடலை அறிவோம்.
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்
ஒன்றாகு முன்றிலோ இல்*
-- முன்றுறை அரையனார்
சொல்லும் பொருளும்
மாரி - மழை
வறந்திருந்த - வறண்டிருந்த
புகவா - உணவாக
மடமகள் - இளமகள்
நல்கினாள் - கொடுத்தாள்
முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
பாடலின் பொருள்
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல் என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.
நூல் வெளி
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.