இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி | 7th Social Science : History : Term 2 Unit 3 : Rise of Marathas and Peshwas
அலகு - 3
மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
கற்றலின் நோக்கங்கள்
• மராத்திய அரசின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும் முக்கியமாக அதை வலிமைப்படுத்தியதில் சிவாஜி வகித்த பாத்திரத்தையும் அறிந்து கொள்ளுதல்
• சிவாஜி அறிமுகம் செய்த நிர்வாகக் கட்டமைப்பைத் தெரிந்து கொள்ளுதல்
• முகலாயர்களின் வீழ்ச்சிக்கு, மராத்தியர்கள் எவ்வாறு காரணமாக இருந்தார்கள் என்பதைத் திறனாய்வு செய்தல்
• மராத்தியரின் அதிகாரத்தை நீடித்திருக்கச் செய்ததில் பேஷ்வாக்களின் பங்கை மதிப்பிடுதல்.
அறிமுகம்
தென்மேற்கே எழுச்சி பெற்ற மராத்தியரின் அதிகாரம் முகலாயப் பேரரசிற்கு உண்மையான ஆபத்தை முன் நிறுத்தியது. ஷாஜகானின் ஆட்சிக் காலத்திலேயே சிவாஜியின் தந்தையும் அகமதுநகர், பீஜப்பூர் ஆகிய அரசுகளில் அதிகாரியாகப் பணியாற்றியவருமான ஷாஜிபான்ஸ்லே பல இடையூறுகளைச் செய்தார். ஆனால், அவருடைய மகனான சிவாஜியே மராத்தியத்தியருக்குப் புகழ் சேர்த்தார். முகலாயரை அச்சமடைய வைத்தார். அவர் வீரம் செறிந்த போர் வீரராகவும் மிகச்சிறந்த தளபதியும், கொரில்லாப் போர்முறைகளுக்கு (மறைந்திருந்து தாக்குதல்) தலைவராகவும் இருந்தார். மனஉறுதி மிக்க மலைவாழ் மக்கள் அணியொன்றை உருவாக்கினார். அவ்வணி அவருக்கு விசுவாசமாக இருந்தது. அவர்களின் உதவியுடன் சிவாஜி பல கோட்டைகளைக் கைப்பற்றினார். ஔரங்கசீப்பின் தளபதிகளுக்குக் கடும்போட்டியாக விளங்கினார். மராத்தியர்களின் வலிமை பெருகியபோது முகலாயப் பேரரசு வலிமை குன்றியது தக்காணம் முழுவதிலும் மராத்தியர்கள் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை வசூலிக்கும் உரிமையை முகலாயர்கள் அங்கீகரிக்க வேண்டியதாயிற்று. போர்கள் திறமை மிக்க தளபதிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை தந்தன. அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மராத்திய அதிகாரத்தின் விறுவிறுப்பான விரிவாக்கத்திற்குப் பங்களிப்பு செய்தனர். பேஷ்வாக்கள் என்றழைக்கப்பட்ட மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் ஷாகுவின் காலம் முதல் உண்மையான அதிகாரம் உடையவர்களாயினர். அவர்களின் ஆதரவில் 1761 வரை மராத்தியர் தங்கள் மேலாதிக்கத்தைத் தொடர்ந்தனர்.