Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | நவீன இந்திய ஆதாரங்கள்

ஐரோப்பியர்களின் வருகை | அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நவீன இந்திய ஆதாரங்கள் | 8th Social Science : History : Chapter 1 : Advent of the Europeans

   Posted On :  07.06.2023 06:54 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை

நவீன இந்திய ஆதாரங்கள்

நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக - பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி - அறிய நமக்கு உதவுகின்றன.

நவீன இந்திய ஆதாரங்கள்

நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக - பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி - அறிய நமக்கு உதவுகின்றன. தொடக்ககாலத்திலிருந்தே போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டேனியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய அலுவலக செயல்பாடுகளை தங்களது அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர். பராமரிக்கப்பட்ட அவர்களது பதிவுகள் இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றி அறிய உதவும் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன. லிஸ்பன், கோவா, பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலை மதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும்.


சான்றுகளின் வகைகள்

நாம் வரலாற்றை எழுதுவதற்கு எழுதப்பட்ட மற்றும் பயன்பாட்டு பொருள் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

எழுதப்பட்ட ஆதாரங்கள்

அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பிற்குப் பின் பல்வேறு மொழிகளில் எண்ணற்ற புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. இதன் விளைவாக கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி மக்கள் எளிதாக அறிய முடிந்தது. இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி மார்க்கோபோலோ மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து ஐரோப்பியர்கள் அறிந்து கொண்டனர் இக் குறிப்புகள் ஐரோப்பியர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தது. தமிழ் வரலாற்றுக் குறிப்பு. ஆவணங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு பெயர் ஆனந்தரங்கம். இவர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக (Dubash) இருந்தார். 1736 லிருந்து 1760 வரை அவர் எழுதிய பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் அக்காலத்தைப் பற்றி அறிய உதவும் ஒரே எழுதப்பட்ட, சமய சார்பற்ற மதிப்பு மிக்க பதிவாக நமக்குக் கிடைத்துள்ளன. அவரது குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்றாதாரமாக உள்ளன. எழுதப்பட்ட ஆதாரங்கள் என்பவை இலக்கியங்கள், பயணக்குறிப்புகள், நாட்குறிப்புகள், சுயசரிதை, துண்டு பிரசுரங்கள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.



ஆவணக்காப்பகங்கள்

வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுடெல்லியில் அமைந்துள்ளது. இது இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகமாகும். இது கடந்த கால நிர்வாக முறைகளைப் புரிந்து கொள்வதற்கான அனைத்துத் தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு வழிகாட்டியாக இது விளங்குகிறது. இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரமற்றும் அறிவியல் ரீதியான வாழ்க்கை மற்றும் மக்கள் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வதற்கான உண்மையான சான்றுகள் இதில் அடங்கியுள்ளன. இது ஆசியாவில் உள்ள ஆவணக்காப்பகங்களிலேயே மிகவும் பெரியதாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் என்பவர் இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

தமிழ்நாடு ஆவணக்காப்பகம்

தற்போது தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் ‘சென்னை பதிப்பாசனம்’ சென்னையில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும். அங்குள்ள பெரும்பாலான ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. மேலும் அங்கு டச்சு, டேனிஷ், பாரசீக, மராத்திய நிர்வாக பதிவுகளின் தொகுப்புகள் பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, தமிழ், உருது போன்ற மொழிகளில் உள்ளன.


தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1642ஆம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன. இது கொச்சி மற்றும் சோழமண்டல கடற்கரையில் உள்ள இடங்களுடன் தொடர்புடையது. இந்த பதிவுகள் 1657-1845 காலப் பகுதியை உள்ளடக்கியது. டேனிஷ் பதிவுகள் 1777-1845 காலப்பகுதியை உள்ளடக்கியது. டாட்வெல் என்பவரின் பெரும் முயற்சியால் 1917ஆம் ஆண்டு 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' வெளியிடப்பட்டது. வரலாற்று ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் அவருக்கு இருந்த மிகுந்த ஆர்வத்தைக் இது காட்டுகிறது. தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பயன்பாட்டு பொருள் ஆதாரங்கள்


பல ஓவியங்கள் மற்றும் சிலைகள் நவீன இந்திய வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. அவை தேசியத்தலைவர்களின் சாதனைகளையும், வரலாற்றுப் பிரமுகர்கள் பற்றிய தகவல்களையும் நமக்கு நிறைய தருகின்றன. இந்தியக் கட்டடக் கலையின் கலை அம்சம் மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றாக புனித பிரான்சிஸ் ஆலயம் (கொச்சி), புனித லூயிஸ் கோட்டை (பாண்டிச்சேரி), புனித ஜார்ஜ் கோட்டை (சென்னை), புனித டேவிட் கோட்டை (கடலூர்), இந்தியா கேட், டெல்லி பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியன உள்ளன. சமய, கலாச்சார, வரலாற்று மதிப்புமிக்க பொருள் மூலங்கள் சேகரிக்கப்பட்டு அவை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்த உதவுகின்றன. டெல்லியிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகமாகும். இது 1949ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

நிர்வாக வரலாற்றை அறிய ஒரு சிறந்த ஆதாரமாக நாணயங்கள் திகழ்கின்றன. நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. 1862ஆம்  ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது. இராணி விக்டோரியாவுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர் ஏழாம் எட்வர்டு, தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார். ரிசர்வ் வங்கி 1935இல்முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது. மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு ஜனவரி, 1938இல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.

உங்களுக்குத் தெரியுமா? 

1690இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது
Tags : Advent of the Europeans | Chapter 1 | History | 8th Social Science ஐரோப்பியர்களின் வருகை | அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 1 : Advent of the Europeans : Sources of Modern India Advent of the Europeans | Chapter 1 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை : நவீன இந்திய ஆதாரங்கள் - ஐரோப்பியர்களின் வருகை | அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை