சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மாறாக் கருத்து | 6th Social Science : Civics : Term 1 Unit 2 : Achieving Equality
மாறாக் கருத்து
முன்முடிவு வலுவாக இருக்கும்போது மாறாக் கருத்து உருவாகிறது.
மாறாக் கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
எடுத்துக்காட்டாக, பெண்கள் விளையாட்டிற்கு உகந்தவர்கள் அல்ல என்பது முன்முடிவு கொள்வதாகும்.
மாறாக தன்மை பற்றிய தவறான எண்ணங்கள் சிறுவயதிலேயே கற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும்
குழந்தைகள் பொருட்கள், குழுக்கள், கருத்தியல்கள் போன்றவற்றில் வலுவான கருத்துக்களையும்
தவறான எண்ணங்களையும் இளம் பருவத்திலேயே வளர்த்துக் கொள்கின்றனர். குழந்தைகள் வளரும்
போது அவர்களுக்கு பொருள்கள், மனிதர்கள், நாகரிகம், நம்பிக்கை, மொழி இவற்றின் மீதான
விருப்பு வெறுப்புகள் ஒத்தக் கருத்தால் மேலோங்குகிறது.
எடுத்துக்காட்டாக
ரகுவின் கண்ணில் மென்பந்து தாக்கியதால், அவன்
அழத்தொடங்கினான். உடனே அவனைப் பார்த்து அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். ஆனால் ரகுவின்
கண்ணில் மென்பந்து தாக்கியபோது அவனது நண்பன் மணிக்கு உண்மையில் வருத்தமாக இருந்தது.
ஆனால் அவனும் மற்றவர்களுடன் இணைந்து சிரிக்கத்தான் செய்தான்.
மேற்கூறிய எடுத்துக்காட்டிலிருந்து பெண்கள் அழுவார்கள் என்றும்
ஆண்கள் அழக்கூடாது என்ற பொதுவான கருத்தை வலியுறுத்துகிறோம். ஆகையால்தான் ரகு வலியால்
அழுதபோது மற்ற அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தனர். இதுவே மாறாக் கருத்துள்ள எண்ணமாகும்.
இதிலிருந்து, நாம் ஒருவர் மீதான தவறான எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ளும் போது, அங்கு மாறாக்
கருத்து உருவாகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
பாலின அடிப்படையில் மாறாக் கருத்தினை பற்றி திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சித்தரிக்கப்படுவதை காணலாம். சலவைக்கட்டி, சலவை இயந்திரம், பாத்திரங்களை கழுவுதல் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும் பெண்களையே முன்னிறுத்துகின்றனர். இரு சக்கர வாகனம் போன்ற விளம்பரத்தில் ஆண்களையே முன்னிறுத்துகின்றனர். இவ்வாறு பாலின அடிப்படையில் மாறாக் கருத்து இருப்பதை காணலாம்.