அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் | அலகு 8 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 8 : Universe and Space Science
செயல்பாடு 1
எளிதில் கிடைக்கும் விலை மலிவான பொருள்களைக் கொண்டு ராக்கெட் ஒன்றின் மாதிரியை உருவாக்கவும். இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட ராக்கெட்டுகளின் படங்களைக் கொண்ட புகைப்படத் தொகுப்பைத் தயாரிக்கவும்.
செயல்பாடு 2
ஒரு பலூனில் காற்றை நிரப்பி கைகளால் இறுகப் பிடித்துக் கொள்ளவும். தற்போது, பிடியைத் தளர்த்தி காற்று வெளியேறுமாறு செய்யவும். என்ன காண்கிறாய்? காற்று வெளியேறும் திசைக்கு எதிர்திசையில் பலூன் நகர்வதை நீ காணலாம். ராக்கெட்டும் ஏறக்குறைய இதே முறையில்தான் இயங்குகின்றது.
செயல்பாடு 3
உனது ஆசிரியரின் உதவியுடன் இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் சாதனைகள் தொடர்பான புகைப்படங்களைச் சேகரிக்கவும். இந்தியாவின் செயற்கைக்கோள் திட்டம் பற்றிய ஒரு படத்தொகுப்பைத் தயாரிக்கவும்.
செயல்பாடு 4
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுக. சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களுக்கும் நாம் செல்ல முடியுமா? இதைக் குறித்து வகுப்பில் விவாதிக்கவும்.
கல்பனா சாவ்லா விண்வெளியில், பூமியின் சுற்று வட்டப்பாதைகளில் 10.4 மில்லியன் மைல்கள் பயணம் செய்துள்ளார். மேலும் 372 மணிநேரத்திற்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்துள்ளார்.
இந்தியா, சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து நடத்திய ஒரு விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் மூலம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் விமானி விண்வெளிக்குச் செல்ல ஷர்மா என்ற தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் நாள் இவர் பெற்றார்.
சூரியனிலிருந்து நான்காவதாக அமைந்துள்ள கோள் செவ்வாய் ஆகும். இதுவே சூரியக் குடும்பத்திலுள்ள இரண்டாவது சிறிய கோளாகும். இதன் சிவந்த நிறத்தின் காரணமாக இது சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுகிறது இக்கோளின் மேற்பரப்பில் உள்ள இரும்பு ஆக்சைடு மற்றும் அதன் வளிமண்டலத்தில் உள்ள தூசுகள் அதற்கு சிவப்பு நிறத்தைத் தருகின்றன. இது தன் அச்சில் 24 மணி 37 நிமிடங்களில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. மேலும், 687 நாட்களுக்கு ஒரு முறை சூரியனையும் சுற்றி வருகிறது. இதன் சுற்றுக்காலம் மற்றும் காலநிலை ஆகியவை பூமியை ஒத்திருப்பதால், வானியலாளர்கள் செவ்வாய்க் கோள் பற்றிய ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, அவர்கள் செவ்வாயின் மேற்பரப்பு, காலநிலை மற்றும் புவியியல் நிலை குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, பல்வேறு ஆளில்லா விண்கலங்களைஅனுப்பி வருகின்றனர்.
செயல்பாடு 5
நூலகத்திற்குச் சென்று, கல்பனா சாவ்லாவின் சாதனைகள் குறித்து கூடுதல் தகவல்களைத் திரட்டவும். மேலும், கல்பனா சாவ்லாவை நாம் ஏன் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும்.
கலாம்சாட் என்பது 64 கிராம் மட்டுமே எடை கொண்ட உலகின் மிகச் சிறிய செயற்கைக் கோள் ஆகும். இது தமிழகத்தின் கரூர் நகருக்கு அருகில் உள்ள பள்ளப்பட்டி என்ற சிற்றூரில் ரிபாத் ஷாருக் என்னும் 18 வயது பள்ளி மாணவனின் தலைமையில் உயர்நிலைப் மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இது 2017 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் நாள் நாசா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
அறிவியல் அறிஞரைத் தெரிந்து கொள்ளுங்கள்
முனைவர். அண்ண மயில்சாமி துரை கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கோதவாடி என்னும் சிற்றூரில் 1958 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள் பிறந்தார். இவர் தன் இளங்கலை பொறியியல் பட்டத்தை கோயமுத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றார். 1982 ஆம் ஆண்டு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றதுடன், அதே ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வாளராகப் பணியேற்றார். பிறகு, கோயம்புத்தூர், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். இவர் செயற்கைக்கோள் துறையில் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் சந்திரயான்-1ன் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். குறைந்த செலவில் சந்திராயனை வடிவமைத்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.