Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | துணைப்பாடம்: தண்ணீர்

கந்தர்வன் | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: தண்ணீர் | 9th Tamil : Chapter 2 : Uyirukku wer

   Posted On :  19.08.2023 04:25 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்

துணைப்பாடம்: தண்ணீர்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் : துணைப்பாடம்: தண்ணீர் - கந்தர்வன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயற்கை -

விரிவானம்

தண்ணீர்

- கந்தர்வன்



நுழையும்முன்

தண்ணீரின் இன்றியமையாமையையும் தேவையையும் பண்டைய காலத்திலிருந்து இலக்கியங்கள் வலியுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. இன்று நீர் நெருக்கடி உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாகச் சிற்றூர்களில் இந்த நெருக்கடி வாழ்க்கைச் சிக்கலாகவே மாறிவருகிறது. இதை உணர்த்துகிறது இச்சிறுகதை.


வெயில் குரூரமாய் அடித்து விட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்ல நேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள்.

திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது.

உள்ளே அம்மா 'பொட்டுத் தண்ணியில்லை' என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஐயாவுக்கு எப்போதும் கணக்குத்தான். ஆடு குட்டி போட... குட்டி பெருத்துக் குட்டிகள் போட்டுக் குபேரனாகும் கணக்கு.

இந்திரா குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு வாரியைத் தாண்டி ஓடினாள். மேட்டை எட்டும்போது ஏழெட்டுப் பெண்கள் இடுப்பில் குடங்களோடு ஓடிவந்து இந்திராவை முந்தப் பார்த்தார்கள். எல்லோரும் வாலிபப் பெண்கள். முந்துகிற பெண்களைப் பிந்துகிற பெண்கள் சடைகளைப் பிடித்து இழுத்தார்கள். கைகளைப் பிடித்து மடக்கினார்கள். அடுத்தவர் குடங்களைப் படபடவென்று கையால் அடித்தார்கள். சிரிப்பும் கனைப்புமாக ஓடினாலும் முந்துபவர்களைப் பார்த்து நொடிக்கொருமுறை கடுகடுவென்று கோபமானார்கள். அடுத்த நொடியில் முந்தும்போது சிரித்துக் கொண்டார்கள்.

இரண்டு மூன்று குடங்களைத் தூக்கிக்கொண்டு புயல் நுழைவது போல் ரயில் நிலையத்துக்குள் பாய்ந்தார்கள்.

இந்திரா இதில் படுகெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல், பதற்றமேயில்லாமல் அலட்சியமாக நிற்கிற அழகைப் பார்த்தால் ஐந்தாறு வருசங்களாக அதே இடத்தில் நிற்பது போல இருந்தது. இடம்பிடிக்க முடியாத பெண்கள் சுவர்களில் சாய்ந்துகொண்டு எகத்தாளம் பேசினார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளை உடைகளோடும் பச்சைக் கொடியோடும் வந்தவர் இந்தச் சச்சரவைப் பார்த்துவிட்டு, ஒரு நாளைக்கு ஸ்குவார்டை வரச்சொல்லி எல்லோரையும் அள்ளிக்கிட்டுப் போயி ஜெயில்ல போடுறேன்' என்றார். பெண்கள் இடுப்புக் குடங்களுக்குள் முகங்களைக் கவிழ்த்து வக்கணையாகச் சிரித்தார்கள்.

ரயில், காட்டுயானை பிளிறிக்கொண்டு வருவதுபோல் நிலையத்துக்குள் நுழைந்தது.

பயணிகள் யாரும் இறங்கும் முன்பாக இந்திரா குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேகம் வேகமாக அரைச்செம்பும் கால் செம்புமாகப் பிடித்துக் குடத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள். இந்தக் குழாயில் தண்ணீர்ச் சனியனும் விறுவிறுவென்று வந்துவிடாது; இந்தப் பீடைக் குடமும் நிறைந்து தொலைக்காது.

இதுதான் நாளை சாயந்திரம் வரை வீட்டுக்குக் குடிதண்ணீர். இதுவும் கிடையாதென்றால், பிலாப்பட்டிக்குப் போக வேண்டும் நல்ல தண்ணீருக்கு. இந்த ஊரும் அக்கம்பக்கத்து ஊர்களும் உவடு அரித்துப் போய்விட்டன. ஊருக்குள் நாலு இடங்களில் கிணறு வெட்டிப் பார்த்தார்கள். உப்பென்றால் குடலை வாய்க்குக் கொண்டுவருகிற உப்பு. கடல் தண்ணீரைவிட ஒருமடங்கு கூடுதலான உப்பு. கிணற்றுத் தண்ணீரில் உப்பளம் போடலாம் என்றார்கள்.

எல்லா ஊர்களும் தீய்ந்து போய்விட்டன. எல்லா ஊரிலும் பருவகாலத்தில் மழை பெய்யும். புயல் வந்தால்தான் இந்தப் பக்கம் பூராவுக்கும் மழை. மழை பெய்வதில்லை... பெய்தால் பேய் மழை. கண்மாய், ஊருணி எல்லாம் உடைப்பெடுத்து வெள்ளம் போய் மூன்றாம் நாள் மறுபடி நீரில்லாப் பூமியாகக் கிடக்கும். ஆகாயத்துக்கும் பூமிக்கும் இந்த ஊர்ப்பக்கம் நிரந்தரப் பகை. ஐயா காலத்தில் உலகம்மாள் கோயில் கிணறு மட்டும் நல்ல தண்ணீர்க் கிணறாக இருந்தது. ஏற்றம் வைத்து அதிகாலை முதல் டின் கட்டி நாலைந்து இளவட்டங்கள் இறைத்துக்கொண்டே இருந்தார்கள். பெண்கள் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமென்று எடுத்துவந்தார்கள். ஜனங்கள் இலுப்பை மரத்துக்காய், கண்மாய்க் கரம்பை என்று தலை தேய்த்து ஜன்னி வருகிற மாதிரி சுகமாகக் குளித்தார்கள். சனிக்கிழமைகளில் வான வில்லாக எண்ணெயும் வாசனையாகச் சீயக்காயும் மிதக்கும், நந்தவனத்துக்குப் பாயும் தண்ணீரில்.

இப்போது எல்லாமே பூண்டற்றுப் போய் விட்டன. முல்லை மணந்த

நந்தவனம் குட்டிச்சுவர்களில் சின்ன அடையாளங்களோடு பாழடைந்து கிடக்கிறது. கிணற்றில் முள்ளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். மழை பெய்து குண்டுக்கால் நிறையும் வரை குடிக்கத் தண்ணீர் வேண்டிப் பெண்கள் குடங்களோடு பிலாப்பட்டிக்குப் போகிறார்கள்.

மூணு மைல் தூரம் நடக்கவேண்டும் பிலாப்பட்டிக்கு . ஊருணிக்குப் பக்கமாயிருக்கிறது அந்த நல்ல தண்ணீர்க் கிணறு. ஊற ஊறத்தான் இறைக்கவேண்டும். மதியம் வரை பிலாப்பட்டி ஜனம் மட்டும் இறைத்துக்கொள்ளும். மதியத்துக்குமேல் வெளியூர் ஆள்களுக்கு விடுவார்கள். காய்ந்து கருவாடாகக் கிடந்து, ஒரு சொட்டுச் சிந்தாமல் நடந்து ஊர் திரும்பி, வீட்டுப் படியேறினால் பொழுது சாய்ந்துகொண்டிருக்கும்.

அம்மாதான் தினமும் பிலாப்பட்டிக்குப்போய் வந்து கொண்டிருந்தது. வயிற்றில் கட்டி வந்ததிலிருந்து இந்திரா குடத்தை எடுத்தாள். நாலு மாசத்துக்கு முன்தான் ரயில் நிலைய ஓரத்து வீடுகளில் இந்தப் பேச்சு வந்தது. 'ஒலகம் பூராவும் தண்ணியில்லைன்னாலும் சரி, நாள் தவறாம ரயிலுக்கு மட்டும் எங்கிருந்தாவது கொண்டு வந்து ஊத்திவிட்டுருறான் பாரு'. இப்படிப் பேசிப்பேசியே மூன்று மணிக்கு வரும் பாசஞ்சர் ரயிலைக் குறிவைத்துத் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

மூன்று மணி ரயிலுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கே பெண்கள் வந்தார்கள். இந்திரா இந்த நேரங்களில் அதிகமாகக் கனவு கண்டாள். உள்ளூரில் எவனுக்கும் கழுத்தை நீட்டிவிடக் கூடாதென்றும் பிலாப்பட்டி மாதிரி தண்ணீருள்ள ஊர்களிலிருந்து பெண்கேட்டு வருவது மாதிரியும் கனவு காண்பாள். பிலாப்பட்டிக்கு நடந்து போய்த் தண்ணீர் தூக்கிவந்த ராத்திரிகளில், கால் வலியோடு விடிய விடியக் கிடந்திருக்கிறாள்.

நோவோ நோக்காடோ, பொம்பிளை பிலாப்பட்டி போயாக வேண்டும். தண்ணீர் கொண்டுவந்து சோறு பொங்க வேண்டும். குடிக்கக் கொடுக்கவேண்டும்.


இந்திரா மாதிரி அமைதியாக மற்ற பெண்கள் கனவு காணாமல் இடம்பிடிக்க அடிதடிச் சண்டைகளில் இறங்குவதையும் ரயில் நிலையமே அவர்கள் ஆதிக்கத்துக்குப் போய்க் கொண்டிருப்பதையும் ஸ்டேஷன் மாஸ்டர் விரும்பவில்லை. சிப்பந்திகளைக் கொண்டு ஒருநாள் வீடுவரை விரட்டினார். அன்று ஒரு பொட்டுத் தண்ணீர் கூட ரயிலிலிருந்து யாராலும் கொண்டு போக முடியவில்லை. பாய்ண்ட்ஸ்மேன் பக்கத்து ஊர்க்காரர். அவரை வைத்துப் பேசித்தான் இந்த ஏற்பாடு. ரயில் வரும்போதுதான் வரவேண்டும். வந்து சத்தம் போடக்கூடாது. தண்ணீர் கொஞ்சம்தான் பிடிக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பட்டு வருவதாகப் பேர்; சண்டை இன்னும் நாறிக்கொண்டுதானிருக்கிறது. எந்தச் சண்டை எப்படி நடந்தாலும் இந்தப் பெண்களுக்கு ஆறாத ஆச்சரியம் ஒன்று உண்டு. நம் ஊர்த் தண்ணீரைவிட ஒசத்தியான தண்ணீர் ரயில் குழாயில் வரும்போது, ஏன் சில ரயில் பயணிகள் வெள்ளை வெள்ளை பாட்டில்களில் தண்ணீரைப் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வாங்கி வைத்துக்கொண்டு திரிகிறார்களென்று.

இந்திரா உள்ளங்கையை இன்னும் அழுத்திக் கொண்டிருந்தாள். தண்ணீர் சன்னமாக வந்தது குழாயில். பாதிக்குடம் கூட நிறையவில்லை. இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தது. அம்மா 'சொட்டுத் தண்ணியில்லை' என்று முனகியது ஞாபகத்துக்கு வந்தது. சில நேரங்களில் இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தாலும் புறப்படத் தாமதமாகும். ரயில் நகர்கிற மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் மட்டிலும் பிடித்துக் குடத்தில் ஊற்றிவிட்டுக் குதித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டே உள்ளங்கையை மேலும் அழுத்தினாள்.

ரயில் வேகம் அதிகரித்து பிளாட்பார முனை வருவது போலிருந்தது. படபடவென்று செம்பை எடுத்துக் குடத்தைப் பாதையில் வைத்துவிட்டுக் குதிக்கப் போனாள். முழங்கை வரை கண்ணாடி வளையல்கள் அணிந்த ஒரு வடக்கத்திப் பெண் ஓடிவந்து இவளை இழுத்து வண்டிக்குள் தள்ளிவிட்டுக் கோபமாகக் கத்தினாள். மொழி புரியவில்லையென்றாலும், 'தற்கொலை பண்ணிக் கொள்ளவா பார்த்தாய்?' என்கிற மாதிரி ஒலித்தது.

சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த ஐயா காலாறக் கடைத் தெருவுக்குப் போனபோது சின்னவன் ஓடிவந்து இரைந்துகொண்டே சொன்னான், 'ரயில் போயிருச்சு... அக்கா இன்னும் வரலை.'

ஐயா ரொம்ப சாதாரணமாகச் சொன்னார், 'எங்கெயாவது வாயளந்துகிட்டிருக்கும். போய் நல்லாப் பாருலெ.'

'நல்லாப் பாத்துட்டுத்தான் அம்மா சொல்லச் சொன்னுச்சு.

லேசான பதற்றத்துடன் வீடு வந்தவரிடம் அம்மா படபடவென்று சொன்னாள். 'ஓடுங்க... அந்த ரயிலைப் பிடிங்க. எம்மக அதிலெதான் போயிட்டா. அடுத்த டேசன்ல பிடிங்க போங்க.'

அண்ணன் வீடு, தம்பிவீடு, மச்சினன் வீடுகளிலிருந்து ஆட்கள் ஓடி வந்தார்கள். இரண்டு பஸ்கள் போய் மூன்றாவதாக வந்த ராமநாதபுரம் பஸ்ஸில் ஏறியும் ஏறாமலுமாக கண்டக்டரிடம் கத்தினார்கள். 'பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பா...' டிக்கெட் கொடுப்பதில் மும்முரமாயிருந்த கண்டக்டர், அதைச் சாதாரண முறையில் கேட்டுக்கொண்டு பதறாமலுமிருக்கவே ஐயாவின் மைத்துனர் பாய்ந்தார்....

'பொண்ணு ரயிலோட போயிருச்சுனு நாங்க ஈரக்குலையைப் பிடிச்சுக்கிட்டுக் கத்துறோம். சிணுங்காமக் கேட்டுக்கிட்டு நிக்கிறீரு. டிரைவர்ட்ட சொல்லுமய்யா, வேகமா ஓட்டச் சொல்லி...' விவகாரம் வேண்டாமென்று கண்டக்டரும், 'வேகமாப் போங்கண்ணே ' என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.

கும்பல், டிரைவரிடம் போய்க் கத்தியது. டிரைவர் விரட்டிக் கொண்டுபோய்ச் சேர்ந்தார்.

இவர்கள் போய்ச் சேர்ந்தபோது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஈ எறும்புகூட இல்லை. ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து ஒவ்வொருவரிடமாக விசாரித்தார்கள்.

'குடத்தோட ஒரு பொண்ணு எறங்குச்சா...?' என்று. யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. போன ஆட்களில் குயுக்தியான ஒருவர் சொன்னார், 'புள்ளைட்ட டிக்கெட் இல்லைங்கிறதனாலெ யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளியே போயிருக்கும்யா.'

ரயில் நிலையத்துக்கு வெளியே எல்லா இடங்களிலும் கேட்டார்கள். ராமநாதபுரம் வடக்குத் தெருவில், அத்தை வண்டிக்காரத் தெருவில், சின்னம்மா வீடு, தெரிந்தவீடு அறிந்தவீடு பூராவும் தேடி விட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போனார்கள். பால்கடை, பழக்கடையென்று ராமநாதபுரத்தையே சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்துவிட்டுக் கவலையும் அசதியுமாக ஆட்கள் ஊர் திரும்பினார்கள்.

வீட்டு வாசலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கூட்டத்தில் ஒருவர் 'மெட்ராசுக்கே போயிருச்சோ புள்ளை' என்று சந்தேகம் எழுப்ப.... ஐயா கத்தினார், ஒன் கழுத்தைக் கடிச்சு மென்னுபுருவேன்; பேசாம இரு ஐயா கூடப் போய்த் திரும்பிய ஆள்களில் ஒருவர் கூட்டத்தின் கவலையைக் கவனித்துவிட்டுச் சொன்னார். 'நாம அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்குப் போய்ப் பார்த்திருக்கணும் எங்கெயாவது புள்ளை எறங்கித் தெரியாம நிக்குதான்னு... இங்கெ உக்காந்து என்ன செய்யிறது.

அம்மாவுக்கு இந்தப் பேச்சுகளைக் கேட்டுக் குமட்டலும் மயக்கமுமாய் வந்தது. இந்தக் கூட்டத்தில் யாரும் எட்ட முடியாத யோசனைக்குப் போய், பொருமிக்கொண்டும் வாயில் முந்தானையை அழுத்திக்கொண்டும் சொன்னாள், 'எம்புள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கெடக்கோ' அவளால் அடக்கமுடியவில்லை . அவளை யாரும் பிடித்து அடக்கவும் முடியவில்லை .

ஆவேசம் வந்தவள் போல் ரயில் நிலையத்துக்கு ஓடினாள். பின்னாலேயே ஐயாவும் ஊர் ஜனமும் ஓடியது. பொழுது இருட்டிக்கொண்டு வந்தது. அம்மா தண்டவாளத்தின் ஓரத்திலேயே ஓட ஆரம்பித்தாள். பத்தடி ஓடியதும் ஐயா, அம்மாவைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டுக் கூர்ந்து பார்த்தார். தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது.

நெருங்க நெருங்க அம்மாதான் முதலில் கத்தினாள். 'அந்தா, இந்திரா வருது. இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு இந்திரா கூட்டத்தருகில் வந்தாள். அம்மா நிறை பூரிப்பில் விம்மிக்கொண்டு போய்க் குடத்தை வாங்கினாள். நிறைகுடம், சொட்டுச் சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள்.

மகள் வந்து சேர்ந்ததில் மலர்ந்துபோய் ஐயா கேட்டார்... 'பயமகளே... இதையும் சொமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும்?' இந்திரா சொன்னாள்... 'ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது?'


நூல் வெளி 

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர். கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலியவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்புகள்.

Tags : by Kantharvan | Chapter 2 | 9th Tamil கந்தர்வன் | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 2 : Uyirukku wer : Supplementary: Tanneer by Kantharvan | Chapter 2 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் : துணைப்பாடம்: தண்ணீர் - கந்தர்வன் | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்