முகலாயப் பேரரசு | இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - அக்பர் (1556-1605) | 7th Social Science : History : Term 2 Unit 2 : The Mughal Empire
அக்பர் (1556-1605)
அரியணை ஏறுதல்
1556 இல் ஹூமாயூன் இயற்கை எய்திய பின்னர், அவருடைய பதினான்கு வயது மகன் அக்பர் அரசராக முடிசூட்டப் பெற்றார். அக்பர் சிறுவனாக இருந்ததால், பைராம்கான் பகர ஆளுநர் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார். ஆனால், சூர் வம்சத்தைச் சேர்ந்த ஹெமு என்னும் தளபதி 1556 இல் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றிக் கொண்டார். அதே ஆண்டில் பைராம்கான் பானிப்பட் போர்க்களத்தில் (இரண்டாம் பானிப்பட் போர் 1556) ஹெமுவைத் தோற்கடித்துக் கொன்றார். நாட்டின் அன்றாட ஆட்சி விவகாரங்களில் பைராம்கானின் மேலாதிக்கத்தை அக்பரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. அவருடைய தூண்டுதலின் காரணமாக பைராம்கான் குஜராத்தில் கொல்லப்பட்டார். இதனால், அக்பரால் அரசை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது. படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
பெண் ஆட்சியாளர்கள் மீது படையெடுப்பு
அக்பர் மாளவத்தையும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளையும் கைப்பற்றினார். மத்திய இந்தியப் பகுதியைச் சேர்ந்த ராணி துர்க்காவதியை பாபர் தோற்கடித்தார். இதனை, மற்றவர்கள் விரும்பவில்லை . ஏனெனில், அவர் அக்பருக்குத் தீங்கேதும் செய்யவில்லை இருந்தபோதிலும் பேரரசை உருவாக்கும் ஆசையால் உந்தப்பட்ட அக்பர், ராணியாரின் நல்லியல்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதைப்போலவே, தென்னிந்தியாவில் அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி சந்த் பீவியின் மீதும் அக்பர் படையெடுத்தார். ராணியார் காட்டிய வலுவான எதிர்ப்பால் பெரிதும் வியந்துபோன முகலாயப்படை, அவ்வம்மையார்க்குச் சாதகமாக அமைதி உடன்படிக்கை செய்து கொண்டது.
ஹால்டிகாட் போர்
மேவார் அரசரான ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து 1568 இல் சித்தூரையும் 1589 இல் ராந்தம்பூரையும் கைப்பற்றினார். 1576 இல் உதய் சிங்கின் மகனான ராணா பிரதாப்பை ஹால்டிகாட் போரில் வெற்றி கொண்டார். தோல்வியுற்ற போதிலும் சேத்தக் என்னும் தமது குதிரையில் தப்பிய பிரதாப்சிங் காட்டில் இருந்தவாறே போரைத் தொடர்ந்தார்.
துணிச்சல் மிகுந்த இந்த ரஜபுத்திரர்களின் நினைவுகள் ராஜபுதனத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது அவரைப் பற்றிப் பல கதைகள் உள்ளன.
அரேபியா, தென்கிழக்காசியா, சீனாவுடன் வாணிகத் தொடர்பு
குஜராத்தை அக்பர் கைப்பற்றிய நிகழ்வு, குஜராத் கடல்பகுதியில் வாணிகம் மேற்கொண்டிருந்த அரேபியரையும், ஐரோப்பியரையும் தமது கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவர உதவியது. கிழக்கே வங்காளம், பீகார், ஒடிசா ஆகியவை மீது அக்பர் மேற்கொண்ட படையெடுப்புகள் தென்கிழக்கு ஆசியாவுடனும் சீனாவுடனும் தொடர்பு ஏற்பட உதவியது.