முகலாயப் பேரரசு | இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஜஹாங்கீர் (1605-1627) | 7th Social Science : History : Term 2 Unit 2 : The Mughal Empire
ஜஹாங்கீர் (1605-1627)
அக்பருக்குப் பின்னர், அவருடைய ரஜபுத்திர மனைவிக்குப் பிறந்த இளவரசர் சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர் (உலகத்தைக் கைப்பற்றியவர்) என்ற பெயரில் மகுடம் சூடினார். அரசாட்சியைக் காட்டிலும் கலைகள், ஓவியம், தோட்டங்கள், மலர்கள் ஆகியவற்றின் மீது அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் ஜஹாங்கீரின் மனைவியார், நூர்ஜகான் என அறியப்பட்ட மெகருன்னிசா உண்மையான அதிகாரத்தைப் பெற்றவராகத் திகழ்ந்தார். தந்தையாரின் மரபுகளை ஓரளவு ஜஹாங்கீர் பின்பற்றினார். அக்பர் காலத்துச் சமய சகிப்புத் தன்மை ஜஹாங்கீர் காலத்திலும் தொடர்ந்தது.
ஆனாலும், தமக்கு எதிராக அரியணையைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு கலகம் விளைவித்த தமது மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூன் சிங்கைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார். இதன் விளைவாக முகலாயருக்கும் சீக்கியருக்கும் இடையே நெடுநாள் போர்கள் நடைபெற்றன. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான், பாரசீகம், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளுக்கான வணிகப் பாதைகளின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை முகலாயர் இழக்க நேர்ந்தது. காண்டகாரை முகலாயர் இழந்தது வடமேற்கிலிருந்து வரும் படையெடுப்புகளுக்கு இந்தியாவைத் திறந்து வைத்தது போன்றதாகியது. ஜஹாங்கீர் அகமதுநகரைக் கைப்பற்றிய போதிலும், அது அவருடைய ஆட்சிக்காலம் முழுவதும் பிரச்சனைக்குரியதாகவே இருந்தது.
ஜஹாங்கீர் போர்த்துகீசியருக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் வணிக உரிமைகளை வழங்கினார். இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதியான தாமஸ்ரோ ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்தார். மேலும், அவரின் அனுமதி பெற்றும் தங்கள் முதல் வணிக மையத்தை சூரத்தில் நிறுவினார்.