Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பிரிவினையின் விளைவுகள்

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு - பிரிவினையின் விளைவுகள் | 12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India

   Posted On :  09.07.2022 10:10 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

பிரிவினையின் விளைவுகள்

முஸ்லிம் லீக், இந்து - முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை லாகூர் மாநாடு (மார்ச் 1940) முதலே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

பிரிவினையின் விளைவுகள்

சுதந்திர இந்தியாவின் முன்னின்ற சவால்கள் பலவாகும். அவற்றுள் பிரிவினையைச் சமாளித்தல், பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கல்வி முறையைச் சீரமைத்தல், (அடுத்த பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது) இந்திய விடுதலைப் போராட்டத்தால் கிளர்ந்தெழுந்த உயர்ந்த இலட்சியங்களை எதிரொளிக்கும் அரசமைப்பை உருவாக்குதல், 500க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த சுதேச அரசுகளை இந்தியாவோடு ஒருங்கிணைத்தல், தேசிய அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற , மக்களால் பேசப்படும் மொழிகள் அடிப்படையிலான வேறுபாட்டைத் தீர்த்து வைத்தல் போன்ற நாட்டின் தேவைகள் உள்ளடங்கும். மேலும், மக்களாட்சி , இறையாண்மை , சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு இசைவான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டிய சவாலும் அடங்கும்.

முஸ்லிம் லீக், இந்து - முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை லாகூர் மாநாடு (மார்ச் 1940) முதலே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அந்தக் கோரிக்கைக்கான வடிவமும் செயலாக்கமும் 1947 ஜூன் 3இல் வெளியிடப்பட்ட மௌண்ட்பேட்டன் திட்டத்தில் இடம் பெற்றது. மெளண்ட்பேட்டன் அதிகார மாற்றத்திற்கான நாளை ஆகஸ்ட் 15, 1947 என்று அறிவித்ததால், மௌண்ட்பேட்டன் திட்ட வெளியீடு, இந்திய விடுதலை ஆகியவற்றுக்கான கால இடைவெளி வெறும் நாட்கள் மட்டுமே.


இந்திய வரைப்படத்தைப் பிரிவினைக்கேற்றவாறு மாற்றி வரைவதற்கு லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட வழக்கறிஞரான சர் சிரில் ராட்க்ளிஃப் இந்தியாவைப் பற்றிய எந்த முன் அனுபவமும் இல்லாதவராகவும் இந்திய நிலைமை புரியாதவராகவும் இருந்தார். அவர் உருவாக்கிய வரைப்படத்தின் அடிப்படையில் எல்லைகளை வரையறுத்துக்கொள்ளும் பொறுப்பு 1947 ஆகஸ்ட் 15க்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் என்ற இரண்டு அரசமைப்பு நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

1947 ஜூலை 8இல் சர் சிரில் ராட்க்ளிஃப் இந்தியா வந்தடைந்தார். பஞ்சாப்-வங்காளம் ஆகிய இரண்டு எல்லை ஆணையங்களுக்கும் அவர் தலைமைப் பொறுப்பு வகித்தார். அவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில் முஸ்லிம் சமூகம் மற்றும் இந்து சமூகத்தைச் சேர்ந்த தலா இரண்டு நீதியரசர்கள் இணைந்து பணியாற்றினர். இந்து மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையினர் வாழும் கிராமங்களை 1941ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் கண்டறிய எல்லை ஆணையத்திற்கு ஐந்து வார கால அவகாசம் மட்டுமே இருந்தது. 1941ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் உலகப்போரின் நடுவில் பரபரப்பாக நடத்தப்பட்டதால் பல தவறுகளை உள்ளடக்கியது என்ற கருத்து பரவலாக நிலவியது.

சீக்கிய சமூகத்தின் கோரிக்கைகளின் காரணமாக மேற்கு பஞ்சாபில் இருந்த கிராமங்களைச் சேர்ந்த சீக்கியர்களின் மக்கள் தொகையைப் பொருட்படுத்தாமல் சீக்கிய குருத்துவாரா இருந்த கிராமங்கள் இந்திய எல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு ஆணையங்களும் தங்கள் அறிக்கை மூலம் 1947 ஆகஸ்ட் 9இல் வெளியிட்டன. ராட்க்ளிஃப் எல்லைக்கோட்டின் அடிப்படையில் எல்லைகளை வரையறுக்கும் பணியைச் சுதந்திரம் வழங்கப்பட்டபின் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளலாம் என்று மௌண்ட்பேட்டன் தீர்மானித்தார். நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கான நில வரையறையோடு, 1947 ஆகஸ்ட் 14-15இல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் இருநாட்டு மக்களுக்கும் அவர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாளில் புதிய வரைபட விவரம் தெரிவிக்கப்படவில்லை .

ராட்க்ளிஃப் அறிவிப்பு பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தது. மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானோடு இணையும் என்ற தீர்மானத்தை பஞ்சாப் மாகாணச் சட்டமன்றம் நிறைவேற்றியது. பாகிஸ்தானோடு நிலத்தொடர்ச்சியைக் கொண்டிருந்த மாகாணங்களான சிந்து, பலுசிஸ்தான், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவையும் இதைப் பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றின. அதேபோல், வங்காள சட்டமன்றம் அந்த மாகாணத்தின் கிழக்குப்பகுதி பாகிஸ்தானில் சேரும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது.

1947 ஆகஸ்ட் 9இல் ராட்க்ளிஃப் அளித்த திட்டத்தின்படி அதுவரையில் பஞ்சாபின் பகுதியாக இருந்து வந்த 62,000 சதுர மைல்கள் கொண்ட நிலம் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது. இந்தப் பகுதியின் மொத்த மக்கள் தொகை (1941ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) 1.58 கோடியாகும். அவர்களில் 1.18 கோடி மக்கள் முஸ்லிம்கள் ஆவர். மேற்கு பஞ்சாபின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு முஸ்லிம் அல்லாதோர் ஆவர். சர். ராட்கிளிஃப் செயல்படுத்திய மௌண்ட்பேட்டன் திட்டத்தின்படி அவர்கள் தொடர்ந்து பாகிஸ்தானின் சிறுபான்மையினராக இருப்பர். அதே போல் இந்தியாவின் பகுதியாக வரையறை செய்யப்பட்ட கிழக்கு பஞ்சாப் 37,000 சதுரடி நிலப்பரப்பும் 1.26 கோடி மக்கள் தொகையும் உடையதாக இருந்தது. இவர்களில் 43.75 இலட்சம் பேர் முஸ்லிம்கள் ஆவர். வேறுவிதமாக சொல்வதெனில் கிழக்கு பஞ்சாப் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் ஆவர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்த வங்காளப் பகுதியில் இனவாரியான மக்கள் தொகையும் சிக்கலாகவே இருந்தது. இந்தியாவின் பகுதியாக இருந்த மேற்கு வங்காளம் பரப்பளவில் 28,000 சதுரமைலுடன் 21,20,000 மக்கள் தொகை கொண்டதாக இருந்தது. அதில் 5,30,000 முஸ்லிம்கள் ஆவார். வேறுவிதமாக சொல்வதானால் பழைய வங்காள மாகாணத்தின் இந்தியப் பகுதி வங்காளத்தின் மொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் கால் பகுதி (1/4 பங்கை ) கொண்டிருந்தது எனலாம். சர். ராட்கிளிஃப் ஆணையம் பழைய வங்காள மாநிலத்தின் 49,400 சதுரமைல்களும் 3,91,00,000 மக்கள் தொகை கொண்ட பகுதியை பாகிஸ்தானுக்கு வழங்கியது. 1941ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 2,77,00,000 பேர் முஸ்லிம்கள் ஆவர். வேறுவிதமாக சொல்வதெனில் 29% பேர் இந்துக்கள். கிழக்குப் பாகிஸ்தான் (இதுவே 1971 டிசம்பரில் பங்களாதேஷ் ஆகியது) என்பது வங்காள மாகாணத்தின் பிரிக்கப்பட்ட கிழக்குப் பகுதி அஸ்ஸாமின் சில்கட் மாவட்டம், அப்பகுதியிலிருந்த குல்நா மாவட்டம், சிட்டகாங் குன்று பகுதி ஆகியவற்றைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. இந்தச் செயல்திட்டம் சரியான மாதிரி இல்லாமல் உருவாக்கப்பட்டது என்பதற்கு உதாரணமாக வங்காளத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக இருந்த முர்ஸிதாபாத், மால்டா, நாடியா ஆகிய மாவட்டங்களை சர். ராட்கிளிஃப் இந்தியாவிற்கு வழங்கியதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

Partition: A poem by W.H. Auden

Unbiased at least he was when he arrived on his mission,

Having never set eyes on the land he was called to partition

Between two peoples fanatically at odds,

With their different diets and incompatible gods.

Time, they had briefed him in London, is short. It's too late

For mutual reconciliation or rational debate:

The only solution now lies in separation.

The Viceroy thinks, as you will see from his letter,

That the less you are seen in his company the better,

So we've arranged to provide you with other accommodation.

We can give you four judges, two Moslem and two Hindu,

To consult with, but the final decision must rest with you.

Shut up in a lonely mansion, with police night and day

Patrolling the gardens to keep the assassins away,

He got down to work, to the task of settling the fate of millions.

The maps at his disposal were out of date

And the Census Returns almost certainly incorrect,

But there was no time to check them, no time to inspect Contested areas.

The weather was frightfully hot,

And a bout of dysentery kept him constantly on the trot,

But in seven weeks it was done, the frontiers decided,

A continent for better or worse divided.

The next day he sailed for England, where he could quickly forget

The case, as a good lawyer must. Return he would not,

Afraid, as he told his Club, that he might get shot.

 

பிரிவினை: W.H. ஆடன் எழுதிய கவிதை

எல்லை வகுக்க வந்தபோது ராட்கிளிஃப் நடுநிலைதான்

என்றாலும் அவருக்குப் புதிது இந்த நாட்டுநிலைதான்

வெறிகொண்ட இரு இனத்திற்குமிடையே விலகியது ஒற்றுமை

இவர்களின் இரையிலும், இறையிலும் எவ்வளவோ வேற்றுமை

பணியை முடிக்க இலண்டன் விதித்திருந்த காலமோ கொஞ்சம்

சமரச முயற்சிக்கும், விவாத பயிற்சிக்கும் அதில் நேரமெங்கே எஞ்சும் இப்போதைக்கு ஒரே வழி – அதுதான் "பிரிவினை" எனும் வலி

கோடுபோட வந்தவரிடமிருந்து கொஞ்சம் விலகி நிற்பதே உசிதம் என்றெண்ணிய வைஸ்ராயின் ஏற்பாடுகளை விளக்கி நிற்குது கடிதம்

இரு முஸ்லிம், இரு இந்து என நீதிபதிகள் நால்வர்

இவர் கேட்டால் தக்க ஆலோசனைகள் சொல்வர்

ராட்கிளிஃப் முடிவே இறுதி – அதன்படி எல்லைக்கோடு உறுதி

அவர் தனியாய் தங்கிய வீட்டில் இரவும் பகலும் போலீஸ் பாதுகாப்பு கொலைகாரர் நெருங்காமல் தோட்டமும், ஓட்டமுமாய் கண்காணிப்பு

அவர் வேலை செய்ய எழுந்தார் - மக்களின் விதியை எழுதத் துணிந்தார் காலாவதியான தோராய வரைபடம் - ஆராய நேரமில்லை ,

பாடாவதியான பழங்கணக்கெடுப்பு - சரிபார்க்க சமயமில்லை இடங்களுக்கோ போட்டி - வானிலையோ வதைத்தது வாட்டி

வேலை செய்ய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை

என்றாலும், ஏழு வாரத்தில் வகுத்திட்டார் எல்லை

இங்கிருந்து இங்கிலாந்திற்கு அடுத்த நாள் கப்பலில் பயணமானார்

இங்கே நடந்ததை, அதைவிட வேகமாய் மறந்து போனார்

முடிந்த வழக்கை மறப்பதுதானே வழக்கறிஞர் வழக்கம்.

நன்றோ! தீதோ! பிரித்திட்டார் இந்தியத் துணைக் கண்டத்தை அன்று. திரும்பிய பின் இங்கிலாந்து நண்பர்களிடம் சொல்லியது உண்டு

மீண்டும் இந்தியா சென்றால் தனக்குத் துப்பாக்கியில் கண்டம் என்று.

வரலாற்று அறிஞர் ஞானேந்திர பாண்டே கூற்றுப்படி, 1947-48இல் 5 இலட்சம் முஸ்லிம் அல்லாத அகதிகள் (இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்) பஞ்சாப் மற்றும் தில்லிக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தில்லியில் வசித்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அவர்களது வீடுகளிலிருந்து காலி செய்யப்பட்டனர். வன்முறைக் கும்பலின் தாக்குதலிலிருந்து தப்ப செங்கோட்டை மற்றும் புராணஹிலா கோட்டைகளிலிருந்த முகாம்களில் மக்கள் தஞ்சம் புகுந்தனர். அகதி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவற்றில் போதுமான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லை . 

காலனி ஆட்சியாளர்கள் இந்திய வரைபடத்தை மறுவரைவு செய்து இரண்டு சுதந்திர அரசாங்கங்களை விட்டுச் சென்றனர். சரியான எல்லைகளைத் அவர்களே வகுத்துக்கொள்ளும்படி அந்த இரு அரசாங்கங்களிடமும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இரு நாடுகளிலும் (கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் இந்தியர்கள்; மேற்கு வங்காளம், கிழக்கு பஞ்சாப், ஐக்கிய மாகாணம் ஆகியவற்றில் முஸ்லிம்கள்) வாழ்ந்த சமயச் சிறுபான்மையினர் அந்தந்த நாடுகளில் தொடர்ந்து சமயச் சிறுபான்மையினராகவும் குடிமக்களாகவும் வாழவேண்டும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே இந்தியா பிரிவினை செய்யப்பட்டது.

பிரிவினைக்குப் பின் இந்தியாவில் 42 மில்லியன் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் 20 மில்லியன் முஸ்லிம் அல்லாதோரும் (இந்துக்கள், சிந்தியர்கள் மற்றும் சீக்கியர்கள்) இருந்தனர். இந்து - முஸ்லிம் வன்முறைக்கு இடையே ஏற்பட்ட உயிர்க் கொலைகள், அதிகாரப் பரிமாற்றம் எதிர்பார்த்தது போல் மென்மையாக நடைபெறாது என்பதை உணர்த்தியது. இந்திய இராயல் கப்பற்படைக்கலகம், ஐ.என்.ஏ. வழக்குகள் (முந்தைய பாடத்தைப்பார்க்கவும்) ஆகியவற்றின் போது நிலவிய இந்து - முஸ்லிம் ஒற்றுமை தற்போது குலைந்து வெடிக்கும் எரிமலை போல் மாறியிருந்தது. வகுப்புவாதக் கலவரங்கள் இந்தியாவெங்கும் நடைபெற்றன. குறிப்பாக, வங்காளம் மற்றும் பஞ்சாபில் அவை அதிகமாக இருந்தன.

இரண்டு தேசங்கள் உருவான பின்னும் பிரிந்தப்பகுதிகள் இரு பக்கமும் வாழ்ந்த சிறுபான்மையின மக்களை பயமும் பாதுகாப்பின்மையும் ஆட்கொண்டிருந்தன. இந்திய விடுதலைப் போரட்டத்தை முன்னின்று வழி நடத்தியவரும் காலனிய ஆட்சியாளர்களால் புறக்கணிக்க இயலாதவருமான காந்தியடிகள் இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்டு 15 அன்று பிரிவினை வன்முறைகளுக்கு தன் எதிர்ப்பை உணர்த்தும் விதத்தில் புது தில்லிக்கு வெகுதொலைவில் உண்ணாவிரதம் இருந்தார். பிரிவினை ஏற்படுத்திய அச்சம் இரு பக்கத்திலும் இருந்த சிறுபான்மையினரை மறுபக்கத்திற்கு குடிபெயராலாமா என்று பயத்தோடு எண்ண வைத்தது.

வன்முறை பரவியபோது காவல்துறை வேடிக்கை பார்த்தது. இது இரு தேச சிறுபான்மையினரிடமும் இடம்பெயரும் எண்ண த்தை ஏற்படுத்தியது. ஆகஸ்டு 1947 முதல் நவம்பர் 1947 வரையிலான 4 மாத காலத்தில் 4.5 மில்லியன் மக்கள் மேற்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குக் குறிப்பாக கிழக்கு பஞ்சாப்நகரங்கள் மற்றும் புது தில்லிக்கு இடம் பெயர்ந்தனர். அதே நேரத்தில், 5.5 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கள் வீட்டை விட்டு (கிழக்கு பஞ்சாப் ஐக்கிய மாகாணம் மற்றும் தில்லி ஆகியவற்றிலிருந்து) இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்குச் சென்றனர். நிலைமை சீரான பின் மீண்டும் தங்களது இடங்களுக்கே திரும்பி விடலாம் என்று நினைத்த மக்களும் பின்னால் திரும்ப முடியவில்லை . வங்காளத்தில் இரண்டு எல்லைகளிலும் கூட இந்த இடம்பெயர்வு நடைபெற்றது.

இரண்டு நாடுகளிலும் குடிபெயர்ந்த குடும்பங்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. எல்லையைக் கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்ட வரிசை கஃபிலா (Kafila) எனப்பட்டது. நடந்து சென்ற அகதிகள் மாற்று வகுப்பைச் சார்ந்த வன்முறைக் கும்பலின் பழிவாங்கலுக்கு இலக்காயினர். பஞ்சாப்பின் புதிய எல்லையின் இருபுறத்திலும் ஓடிய இரயில்களில் பயணம் செய்தோர் கொலைகார கும்பலின் வெறிக்குப் பலியாயினர். வன்முறையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலாக இருக்க வேண்டும் என்றும் 15 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 1950இல் கூட இருநாடுகளின் அரசியல் தலைமைகளும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்றும் தங்கள் வீடுகளைத் துறந்து வந்த இரு பக்கத்தினரும் அவர்கள் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டுமென்றும் விரும்பினர். 1950, ஏப்ரல் 8இல் நேரு மற்றும் லியாகத் அலி கான் கையெழுத்திட்ட தில்லி ஒப்பந்தம் இரு தரப்பிலும் உள்ள சிறுபான்மையினரின் நம்பிக்கையை மீட்டெடுப்பது பற்றி குறிப்பிட்டது. ஆனால், அதற்கேற்றாற்போல் நிலைமை சுமூகமாக இல்லை. ஒப்பந்தம் கையெழுத்தான போதே மேற்கு பஞ்சாபிலிருந்து சென்றவர்களை கிழக்கு பஞ்சாபிலும், தில்லியிலும் தங்க வைத்து மறுவாழ்வு அளிப்பதற்கும் தொழிற்திறன் பயிற்சி அளிப்பதற்கும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்தது. பிரிவினையின் போதான வன்முறை ஏற்படுத்திய காயங்கள் பல பதிற்றாண்டுகள் கழிந்தும் ஆறவில்லை . பல்வேறு இலக்கியப் படைப்புகள் பிரிவினை அதிர்ச்சியை விளக்கும் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன.

நேருவுக்கும் இந்த தேசத்தின் அடிப்படைச் சட்டத்தை உருவாக்குவதில் முனைந்திருந்த அரசமைப்பு நிர்ணய சபைக்கும் பிரிவினை பெரும் சவாலாக நின்றது. பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசாக முடிவெடுத்த நிலையில் இந்தியா சமயச்சார்பற்ற மக்களாட்சிக் குடியரசுக்கான அரசமைப்பை உருவாக்கியது.

Tags : Reconstruction of Post-colonial India | History காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு.
12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India : Consequences of Partition Reconstruction of Post-colonial India | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு : பிரிவினையின் விளைவுகள் - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு