பொருளாதாரம் - நுகர்வுச் சார்பின் பொருள் | 12th Economics : Chapter 4 : Consumption and Investment Functions
நுகர்வுச் சார்பு
1. நுகர்வுச் சார்பின் பொருள்
வருவாய்க்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பையே "நுகர்வு சார்பு" அல்லது "நுகர்வு நாட்டம்" என்கிறோம். இது "மொத்த நுகர்வு மற்றும் மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டு மொத்தத்திற்கிடேயேயான சார்பு தொடர்பாகும்"
இதனை C= f (Y) எனலாம்.
இதில் C = நுகர்வு
Y = வருமானம்
f = சார்பு
எனவே நுகர்வுச் சார்பு நுகர்வு மற்றும் வருமானத்திற்கிடையேயான சார்புத் தொடர்பை விளக்குகிறது. C = சார்பு மாறி, y = சாரா மாறியாகவும் உள்ளது.
இங்கு வருவாய் மற்றும் நுகர்வு மட்டுமே பேசப்படுகின்றன. இவற்றைப் பாதிக்ககூடிய எத்தனையோ மாறிகள் இருக்கலாம். அவை அனைத்திலும் மாற்றம் இல்லை என அனுமானித்தே இந்த சார்பு விளக்கப்படுகிறது.
நுகர்வுச் சார்பு அட்டவணை பல்வேறு வருமான நிலைகளில் உள்ள பல்வேறு நுகர்வுச் செலவினைக் காட்டுவதாகும். கீழ்க்காணும் ஒரு கற்பனை அட்டவணை நுகர்வுச் சார்பை விளக்குகிறது.
அட்டவணை 1 : வருமானம் – நுகர்வு அட்டவணை (₹ கோடிகளில்)
C = 100 + 0.8Y என்று கொள்ளும் போது MPC = 0.8
வருமானம் பூஜ்யம் (Y = 0) ஆனாலும் நுகர்வுச் செலவு 100 ஆக (C =100) இருக்கும். வருமானம் 100 (Y=100) எனில் நுகர்வுச் செலவு 180 (C=180) ஆகவும். வருமானம் 200(Y=200) எனில் நுகர்வுச் செலவு 260 (C = 260)ஆகவும், வருமானம் 300 (Y = 300) எனில் நுகர்வுச் செலவு 340 (C = 340) ஆகவும் இருக்கும்.
Y = 300 எனில்
C = 340 ஆக இருக்கும் போது
(MPC = ∆C / ∆y = 0.8)
கணிதரீதியாக
C = a + b Y or c = 20 + 0.8Y
இதில் a > 0 மற்றும் b < 1
C = நுகர்வு, a = 20 = நிலையானது
Y = வருமானம்
b = MPC (இறுதிநிலை நுகர்வு நாட்டம்) = 0.8 = ∆C / ∆y
தரப்பட்டுள்ள அட்டவணையில் நுகர்வு செலவு அதிகரிப்பதானது என்பது அதிகரிக்கும் வருமானத்தைச் சார்ந்து உள்ளது. இங்கு வருமானம் பூஜ்யமாக இருந்தாலும் மக்கள் ஏற்கனவே உள்ள சேமிப்பை சாப்பிடுவதற்கு செலவு செய்யவர் அப்பொழுதுதான் உயிர்வாழ முடியும் (தன்னாட்சி நுகர்வு).
இந்த வரைபடத்தில் வருமானம் M = 120 ஆக இருக்கும் போது நுகர்வும் (C) 120 ஆக உள்ளது (B - என்னும் புள்ளியில்).
வருவாய் Y = 180 ஆக அதிகரிக்கும் போது நுகர்வு C = 170 ஆக உயர்கிறது. (S என்னும் புள்ளியில்) Y360 ஆக உயர்ந்தால், C = 320, S = 40
மேற்காண் வரைபடத்தில் வருமானம் படுகிடைக் கோட்டிலும், நுகர்வு செங்குத்துக் கோட்டிலும் விளக்கப்படுகிறது. 45-டிகிரி கோட்டின் எல்லா புள்ளியிலும் நுகர்வும் வருமானமும் சமமாக உள்ளது. வருமான மாற்றத்திற்கு சமமான அளவில் நுகர்வும் மாறும் என்ற எடுகோளைக் கொண்டுள்ளதாதல் நேர்கோட்டு நுகர்வுச் சார்பாக உள்ளது.
நுகர்வுச் சார்பானது நுகர்வுக்காக செலவிடும் தொகையை மட்டும் அளவிடாமல், சேமிக்கப்பட்ட தொகையை யும் சேர்த்து மதிப்பிடுகிறது. 45° கோடு என்பது பூஜ்ய சேமிப்பையையும், C என்னும் கோடு நுகர்வு மற்றும் சேமிப்பின் பகிர்வைக் காட்டுகிறது.
2. முக்கிய கருத்துருக்கள்
(i) சராசரி நுகர்வு நாட்டம் = c / y = நுகர்வு / வருவாய்
(ii) இறுதிநிலை நுகர்வு நாட்டம் = ∆c / ∆y = நுகர்வு மாற்றம் / வருவாய் மாற்றம்
(iii) சராசரி சேமிப்பு நாட்டம் = s / y சேமிப்பு / வருவாய்
(iv) இறுதிநிலை சேமிப்பு நாட்டம்
= ∆s / ∆y சேமிப்பு மாற்றம் / வருவாய் மாற்றம்
(1) சராசரி நுகர்வு நாட்டம்
வருமானத்திற்கும் நுகர்வுக்குமான வீதமே சராசரி நுகர்வு நாட்டமாகும். கணிதரீதியாக
APC = C / Y
இங்கு
C - நுகர்வு
Y - வருமானம்
(2) இறுதி நிலை நுகர்வு நாட்டம்
வருமான மாற்றத்திற்கும் நுகர்வு மாற்றத்திற்கிடையேயான வீதமே இறுதிநிலை நுகர்வு நாட்டம் என வரையறை செய்யப்படுகிறது. கணித ரீதியாக
MPC = ∆C / ∆Y
இங்கு
∆C = நுகர்வு மாற்றம்
∆Y = வருமான மாற்றம்
MPC - நேர்மறை எண் ஆனால் ஒன்றுக்கும் குறைவானது.
0 < ∆C / ∆Y < 1
(3) சராசரி சேமிப்பு நாட்டம் (APS)
வருமானத்திற்கும், சேமிப்பிற்குமிடையேயான வீதமே சேமிப்பு நாட்டம் எனப்படும். சராசரி சேமிப்பு நாட்டம் என்பது மொத்த சேமிப்பை மொத்த வருவாய் வகுத்தால் கிடைக்கக்கூடியதாகும். வேறுவகையில் கூறினால் மொத்த வருவாய்க்கும், மொத்த சேமிப்பிற்கிடையேயான வீதமாகும். கணித ரீதியாக
APS = S / Y
இங்கு
S = சேமிப்பு
Y = வருமானம்
(4) இறுதிநிலை சேமிப்பு நாட்டம்
வருமான மாற்றத்திற்கும் சேமிப்பு மாற்றத்திற்கும் இடையேயுள்ள வீதமே இறுதிநிலை சேமிப்பு நாட்டமாகும்.
இறுதிநிலை சேமிப்பு நாட்டத்தை அறிய சேமிப்பு மாற்றத்தை, வருமான மாற்றத்தினால் வகுத்தால் கிடைக்கும். கணித ரீதியாக
MPS = ∆S / ∆Y
இங்கு
∆S = சேமிப்பு மாற்றம்
∆Y = வருமான மாற்றம்
மேலும் MPC + MPS = 1
MPS = 1 - MPC மற்றும் MPC = 1 - MPS
பொதுவாக சராசரி நுகர்வு நாட்டம் சதவீதமாகவும், இறுதிநிலை நுகர்வு நாட்டம் பின்னமாகவும் இருக்கும்.
அட்டவணை . 2 APC, MPC, APS மற்றும் MPS யை கணக்கிடுதல்
3. கீன்ஸின் நுகர்வு பற்றிய உளவியல் விதி (Keyne's Psychological Law of Consumption)
கீன்ஸ் நுகர்வு பற்றிய உளவியல் (மனஇயல்) விதி ஒன்றை முன்மொழிந்தார். அதனடிப்படையில் நுகர்வுச் சார்பை உருவாக்கினார். "உளவியல் விதியின் அடிப்படையாக மனிதன் தன் முன் அறிவு அனுபவம் மற்றும் விரிவான உண்மை அகியவற்றின் அடிப்படையில் பெரும் நம்பிக்கையுடன் வருவாய் உயரும்போது நுகர்வை அதிகமாக்குவார்கள்; ஆனால் வருவாய் கூடிய அளவுக்கு நுகர்வு அதிகரிக்காது". இந்த விதி மனிதன் வருமானம் உயர்ந்த முழு அளவிற்கும் செலவு செய்யமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது.
அனுமானங்கள்
கீன்ஸின் விதி கீழ்காணும் அனுமானங்களை உள்ளடக்கியது.
1. மற்றவை மாறாது
வருமான பகிர்வு, சுவை, பழக்கவழக்கம், சமூக காரணிகள், விலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் போன்றவை மாறாமல் நிலையாக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் நுகர்வு வருமானத்தை மட்டும் சார்ந்ததாகும்.
2. சுமூகமான சூழல் நிலவுகிறது
இந்த விதி நாட்டில் இயல்பான நிலை நிலவும்போது மட்டும் பொருத்தமானதாக அமையும். அபரிமிதமான மற்றும் அசாதாராண சூழ்நிலைகளான போர், புரட்சி , மிக வேக பணவீக்கம் போன்றவற்றின் போது இந்த விதி செயல்படாது. மக்கள் அதிகரித்த மொத்த பணத்தையும் நுகர்விற்கே செலவிடுவர்.
3. முதலாளித்துவ பொருளாதாரத்தில் தலையிடாக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது
அரசு தலையிடாது. மக்கள் சுதந்திரமாக நுகர்வு பற்றிய முடிவினை எடுப்பார்கள். நாடு செல்வமிக்கது; முதலாளித்துவம் நிலவுகிறது.
விதியின் கருத்துக்கள்
இவ்விதி மூன்று கருத்துக்களைக் கொண்டது.
(1) வருமானம் உயரும் போது, நுகர்வு செலவும் அதிகரிக்கும். ஆனால் சிறிய அளவாக இருக்கும். காரணம் வருமனம் அதிகரிக்கும் போது, பகுதி பகுதியாக நம் விருப்பமும் நிறைவேறும், ஆதலால் நுகர்வு பொருட்களின் மீது செய்கின்ற செலவு குறைகிறது. எனவே நுகர்வு செலவு ஆனது வருமானம் அதிகரிக்கும் போது அதிகரிக்கும், ஆனால் குறைந்த அளவே அதிகரிக்கும்.
(2) அதிகரித்த வருமானம் நுகர்வு செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகின்றது. இது முதல் கருத்துரையின் படி தொடர்கிறது. ஏனெனில் முழுவதுமான அதிகரித்த வருமானம் நுகர்வில் முழுவதுமாக செயல்படவில்லை , மீதம் சேமிக்கப்படும் இதன் வழியில் நுகர்வும், சேமிப்பும் ஒன்றோடு ஒன்று நகர்கின்றது.
(3) அதிகரிகின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வு மற்றும் சேமிப்பை இரண்டை அதிகரிக்க செய்யும். இது அதிகரித்த வருமானம் ஒன்று நுகர்வுகோ அல்லது சேமிப்பிற்கோ கொண்டு செல்லும். ஆதலால் அதிகரிகின்ற வருமானம், நுகர்வு மற்றும் சேமிப்பை இரண்டையும் அதிகரிக்கும்.
இவ்விதியின் மூன்று கருத்துரைகள் பின்வரும் அட்டவணை 3-ன் உதவியுடன் விளக்கப்படுகிறது.
அட்டவணை 3
விதியின் மூன்று கருத்துரைகள்.
கருத்துரை (1)
வருமானம் ₹60 கோடிகளாக அதிகரிக்கின்றது மற்றும் நுகர்வு ₹50 கோடிகளாக அதிகரிக்கிறது.
கருத்துரை (2)
அதிகரித்த ₹60 கோடி வருமானம் இரண்டாக, நுகர்விற்கும், சேமிப்பிற்கும் இடையே முறையே பிரிக்கின்றது. (அதாவது ₹50 கோடிகளில் மற்றும் ₹10 கோடிகளில்)
கருத்துரை (3)
வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வு மற்றும் சேமிப்பு அதிகரிக்கின்றது. நுகர்வோ அல்லது சேமிப்போகுறையவில்லை.
இந்த மூன்று கருத்துரைகளும் வரைபடமாக 4.2ல் விளக்கப்பட்டுள்ளது. இங்கே வருமானம் படுகிடையாகவும் மற்றும் நுகர்வு சேமிப்பு செங்குத்து அச்சிலும் அளவிடப்படுகிறது. C- என்பது நுகர்வு சார்வு வளைகோடு, 45- டிகிரி கோடு வருமானம் மற்றும் நுகர்வை அளவு சமமாக இருப்பதைக் காட்டுகிறது.
கருத்துரை (1)
120 லிருந்து 180 ஆக வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வும் 120லிருந்து 170ஆக அதிகரிக்கின்றது. ஆனால் அதிகரித்த நுகர்வு அதிகரித்த வருமானத்தை காட்டிலும் 10 குறைவு. அது சேமிக்கப்படுகிறது.
கருத்துரை (2)
180 லிருந்து 240 ஆக வருமானம் அதிகரிக்கும் பொழுது இது இரண்டு பகுதிகளாக நுகர்வு 170 லிருந்து 220 ஆகவும், சேமிப்பாக 10 லிருந்து 20 ஆகவும் முறையே பிரிகின்றது.
கருத்துரை (3)
வருமானம் 180 லிருந்து 240 உயரும்போது நுகர்வை 170 லிருந்து 220 ஆகவும், சேமிப்பை 10 லிருந்து 20ஆகவும் அதிகரிக்க செய்கிறது. C கோட்டிற்கும் 45° கோட்டிற்கும் இடையேயுள்ள அகன்ற பகுதி சேமிப்பைக் காட்டுகிறது.
4. நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற காரணிகள் (அகவய மற்றும் புறவய காரணிகள்)
நுகர்வு சார்பை தூண்டுகின்ற காரணிகளை ஜே.எம்.கீன்ஸ் இரண்டாக பிரிக்கின்றார். அதாவது அகவய காரணிகள் மற்றும் புறவய காரணிகள்.
அ) அகவய காரணிகள்
அகவய காரணிகள் உளவியல் சிந்தனைகளுடன் தொடர்புடையது. நுகர்வு சார்பை தூண்டுகின்ற முக்கிய அகவய காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கீன்ஸ் எட்டு நோக்கங்களை பட்டியலிட்டு உள்ளார். இவை தனி நபர்களை செலவு செய்வது இருந்து விலக்களிக்கிறது. அவையாவன:
1. முன்னெச்சரிக்கை நோக்கம் : எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்விற்காக கையில் ரொக்கமாக வைப்பது. எ.கா. விபத்து, உடல் நலனின்மை
2. எதிர்பார்க்கும் நோக்கம் : எதிர்கால தேவைக்கான விருப்பம். எ.கா. வயதான காலம்
3. கணிக்கும் நோக்கம் : விருப்பம் மற்றும் பாராட்டை அனுபவிப்பதற்கான விருப்பம்.
4. முன்னேறும் நோக்கம் : வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற விரும்புதல் சார்ந்த விருப்பம்
5. பணவியல் சுதந்திர நோக்கம்
6. வாணிப நோக்கம் (வியாபாரத்தை முன்னேற்றுவதற்கான நோக்கம்) 7. கர்வ நோக்கம் (விட்டுச் செல்வதற்கான விருப்பம்)
8. பேராசை நோக்கம் (முற்றிலும் மோசமான உள்ளுணர்வு)
கீன்ஸ் : முன்னெச்சரிக்கை, எதிர்பார்த்தல் கணித்தல், முன்னேறுதல், பணவியல் சுதந்திரம், வாணிபம், கர்வம், பேராசை ஆகியவை நுகர்ச்சியைப் புறக்கணிக்கும் நோக்கங்களாகக் கூறியுள்ளார்.
அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் வாணிப கழகங்கள், தொழிற்சாலைகளும் பின்வரும் நான்கு நோக்கங்களுக்காக முக்கியமாக சேமிக்கும்.
1. வாணிப நோக்கம் : கடன் இல்லாமல் மூலதன முதலீடு மேற்கொள்வதற்காக வளங்களை பெறும் விருப்பம்.
2. நீர்மைதன்மை நோக்கம் : அவசரகாலம், சிக்கல்களை சந்திப்பதற்காக நீர்மை வளங்களை பாதுகாக்கும் நோக்கம்.
3. முன்னேறும் நோக்கம் : வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், வெற்றி பெறும் மேலாண்மையை நிரூபிக்க வேண்டியதற்கான நோக்கம்.
4. நிதி விவேக நோக்கம் : கடனை செலுத்த, தேய்மானம் மற்றும் பழங்கால தொழில் நுட்பத்தை மாற்றும் நோக்கம் போன்றவற்றிற்கு தேவையான நிதி ஆதாரங்களை உறுதிப் படுத்தும் விருப்பம்.
கீன்ஸ் அகவயக் காரணிகள் குறுகிய காலத்தில் மாறாது என்றும் எனவே, நுகர்வுச் சார்பு குறுகிய காலத்தில் நிலையானது என்கிறார்.
ஆ) புறவயக் காரணிகள்
புறவயக்காரணிகள் உண்மையான மற்றும் அளவிடக் கூடியது. நீண்ட காலங்களில் இந்த காரணிகள் எளிதாக மாற்றம் அடையும். பெரும்பான்மையான புறகாரணிகள் நுகர்வு சார்பை தீர்மானிக்கின்றவைகளாகும்.
1) வருமான பகிர்வு
செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், நுகர்வு குறைவாக இருக்கும். காரணம் செல்வந்தர்கள் குறைவான நுகர்வு விருப்பமும், அதிகப்படியான சேமிப்பு விருப்பமும் கொண்டு இருப்பர். சமநிலை வருமான பகிர்வுடைய சமூகத்தில் அதிகமான நுகர்வு விருப்பம் இருக்கும். V.K.R.V. ராவ் அவர்களால் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது.
2) விலை அளவு
நுகர்வு சார்பை மிக முக்கியமான தீர்மானிக்கின்ற காரணியாக இருப்பது விலை அளவே ஆகும். விலை வீழ்ச்சி அடையும் போது, உண்மை வருமானம் அதிகரிக்கும், மக்கள் அதிகமாக நுகர்வார்கள் மற்றும் சமூகத்தில் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும்.
3) கூலி அளவு
நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற முக்கியமானதாக கூலி அளவு இருக்கின்றது. நுகர்விற்கும், கூலிக்கும் இடையே நேர்மறையான தொடர்பை கொண்டு இருக்கும். கூலி அதிகரிக்கும் போது நுகர்வுச் செலவும் அதிகரிக்கும். மேலும் எதிர்பாராத லாபம் ஏற்படும் போது இதே மாதிரி விளைவு ஏற்படும்.
4) வட்டி விகிதம்
வட்டி விகிதமும் நுகர்வுச் சார்பை தீர்மானிக்கின்ற முக்கிய காரணியாகும்.. அதிக வட்டி விகிதம் மக்களை அதிக அளவில் பணத்தை சேமிக்க ஊக்கம் அளிக்கும் மற்றும் நுகர்வை குறைக்கும்.
5) நிதி கொள்கை
அரசாங்கம் வரியை குறைக்கும் போது, செலவிடத்தக்க வருமானம் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும். வளர்வீத வரிக் கொள்கையானது ஏழைகளுக்கு சாதகமான வருமான பகிர்வை தருவதால், ஏழைகளின் நுகர்வு விருப்பம் மாறும்.
6) நுகர்வோர் கடன்
சுலப தவணைகளாக நுகர்வுக் கடன் அளிக்கும் போது அவர்கள் நுகர்வோர் பொருட்களான கனரக வாகனங்கள், பிரிட்ஜ், கம்யூட்டர் போன்றவற்றினை வாங்குவார்கள். இது நுகர்வை அதிகப்படுத்தும்.
7) மக்கள் தொகை காரணிகள்
மற்றவை மாறாமல் இருக்கும் போது குடும்ப அளவு அதிகமாக இருந்தால், நுகர்வு அதிகமாக இருக்கும். மேலும் குடும்ப அளவு, குடும்ப வாழ்கை சுழற்சி நிலை, இருப்பிடம் மற்றும் வேலைவாய்ப்பு நுகர்வுச் சார்பை பாதிக்கும். ஆரம்பநிலை கல்வி பயிலும் மாணவர்களை விட குடும்பத்தில் கல்லூரி கல்வி பயிலும் மாணவர்கள் அதிகமாக செலவு செய்வார்கள் கிராமப்புற குடும்பங்களை விட நகர்ப்புற குடும்பங்கள் அதிகமாக செலவு செய்யும்.
8) ஆசன் பெரியின் அனுமானம்
நுகர்வு சார்பை பாதிக்கும் இரண்டு உற்று நோக்குதலை ஆசன் பெரி ஏற்படுத்தியுள்ளார்.
அ) நுகர்வு செலவானது தற்போதைய வருமானத்தை மட்டும் சார்ந்து இல்லாமல் முந்தைய வருமானத்தையும், வாழ்க்கை தரத்தையும் சார்ந்து இருக்கும். தனி நபர்கள் குறிப்பிட்ட வாழ்க்கை தரத்துடன் வாழ்ந்து பழக்கப்பட்டு இருப்பதால்,தற்போதைய வருமானம் குறைந்தாலும் தொடர்ந்து ஒரே மாதிரியாக நுகர்வு செலவு மேற்கொள்வார்கள்.
ஆ) வெளிக்காட்டும் விளைவின் காரணமாகவும் நுகர்வு தீர்மானிக்கப்படுகிறது. குறைவான வருமான உடைய மக்களும், அதிக வருமான உடைய மக்களின் நுகர்வு தரத்தால் துண்டப்படுவார்கள். மற்றொரு வகையில் ஏழை மக்கள் செல்வந்தர்களின் நுகர்வே போன்றே செலவு செய்வார்கள். இது அவர்களின் வருமானத்தையும் தாண்டி செலவு செய்ய வைக்கும்.
9) எதிர்பாராத லாபம் அல்லது நஷ்டம்
பங்குச் சந்தையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றம் லாபத்தையோ அல்லது நஷ்டத்தையே ஏற்படச் செய்து நுகர்வு சார்பை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ நகரச் செய்யும்.