Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | இலக்கணம்: பொருள் மயக்கம்

இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: பொருள் மயக்கம் | 12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula

   Posted On :  01.08.2022 05:46 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள

இலக்கணம்: பொருள் மயக்கம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : இலக்கணம்: பொருள் மயக்கம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இனிக்கும் இலக்கணம்

பண்பாடு – ங

பொருள் மயக்கம்


தமிழ்மொழியை எழுதும்போதும் படிக்கும்போதும் பேசும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் சில உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மாணவர்கள் பொருள்மயக்கம் இல்லாமல் மொழிப்புலமை பெறுவர்.

எழுதும்போதோ பேசும்போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும் தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போர்க்கும் கேட்போருக்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

இடைவெளியும் பொருள் வேறுபாடும்

எம் மொழி யார்க்கும் எளிது : எம்மொழியார்க்கும் எளிது

அப் பாவின் நலங் காண்க : அப்பாவின் நலங்காண்க

ஐந்து மாடிவீடு : ஐந்துமாடி வீடு

அன்றுமுதல் பாடம் கற்றோம் : அன்று முதல்பாடம் கற்றோம்

இவ்வாறு சொற்களைச் சேர்த்தும் பொருள் பிரித்தும் எழுதுவதால் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.

வல்லின மெய்களும் பொருள் வேறுபாடும்

பிட்டுத் தின்றான் - பிட்டு தின்றான்

உள்ளக் கருத்து - உள்ள கருத்து

ஈட்டிக் கொண்டு வந்தான் - ஈட்டி கொண்டு வந்தான்

போன்ற தொடர்களில் வல்லின மெய்களால் ஏற்படும் பொருள் வேறுபாடுகளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.


காற்புள்ளியும் பொருள் மயக்கமும்

இயல்பாக உரையாடும்போது பொருள் நிலையில் பெரும்பாலும் எந்தக் குழப்பமும் ஏற்படுவதில்லை. குரலில் ஏற்றம் - இறக்கம், சொற்களில் அழுத்தம் - குழைவு, இறுதிச் சொல் மூலம் வினாவா உணர்ச்சியா என்பதையெல்லாம் உணர்ந்து பொருளை நாம் சரியாக விளங்கிக் கொள்கிறோம். ஆனால் எழுதும்போது காற்புள்ளியிடாமல் எழுதினாலோ இடம் மாற்றிக் காற்புள்ளி இட்டாலோ தொடரில் உள்ள சொற்கள், அத்தொடருக்குரிய முழுமையான பொருளைத் தராமல் வேறுபொருளைத் தந்துவிடும். 

அவள், அக்காள் வீட்டிற்குச் சென்றாள்.

இப்படிக் காற்புள்ளியிட்டு எழுதும்போது அந்தப் பெண் தன் அக்காள் வீட்டிற்குச் சென்றாள் எனப் பொருள்படுகிறது,

அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்.

எனவே, நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டும் இடாமலும் எழுதிப் பொருள் மயக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 


இடைச் சொற்களும் விகுதிகளும் சொல்லுருபுகளும்

தமிழில் உள்ள சில இடைச்சொற்கள், சொல்லுருபுகள், விகுதிகள் ஆகியவற்றைத் தொடர்களில், சொற்களில் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதால் பொருள் வேறுபாடு தோன்றுகிறது.

விடும்

தன் தவற்றினை உணர்ந்துவிடுவானாயின் நன்று

தன் தவற்றினை உணர்ந்து விடுவானாயின் நன்று

தன்

பாண்டியன்தன் கவிதையைப் படித்தான் 

பாண்டியன் தன் கவிதையைப் படித்தான் 

தான்

கண்ணன்தான் எழுதுவதாகச் சொன்னான் 

கண்ணன் தான் எழுதுவதாகச் சொன்னான்.

பற்றி 

குகன் இராமனைப்பற்றிக் கூறினான்

குகன் இராமனைப் பற்றிக் கூறினான்

முன்

சில குறைகளை மக்கள் முன்வைத்தனர் 

சில குறைகளை மக்கள்முன் வைத்தனர்

முதல்

அன்றுமுதல் அமைச்சர் வந்தார் 

அன்று முதல்அமைச்சர் வந்தார் 

பால்

அவன்பால் கொண்டு சென்றான் 

அவன் பால்கொண்டு சென்றான்

கண்

அவன்கண் பெற்று மகிழ்ந்தான் 

அவன் கண்பெற்று மகிழ்ந்தான்

படி

அளக்கும்படி வேண்டினான் 

அளக்கும் படி வேண்டினான் 

மூலம்

அதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது 

அதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

கூட

அவன்கூடக் கொடுத்தான் 

அவன் கூடக் கொடுத்தான்

சொல்லுருபுகள்

வீட்டிலிருந்து சென்றான் - வீட்டில் இருந்து சென்றான்

இத்தொடரில் அமைந்துள்ள வீட்டிலிருந்து என்ற சொல்லைச் சேர்த்தும் பிரித்தும் எழுதும்போது இருவேறு பொருள் உணர்த்துவதைக் காணலாம்.


சொற்களை மாற்றி எழுதும்போது ஏற்படும். பொருட்குழப்பம்

தொடர்கள் அமைக்கும்போது தேர்ந்தெடுத்த சொற்களையும் சொற்களுக்குரிய தெளிவான பொருளையும் தொடரமைப்பு மாறாமல் அமைத்தல் வேண்டும்.

“ஆண்டுதோறும் மறைந்த தி.ஜானகிராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும்"

இத்தொடரில் உள்ள பொருட்பிழையை அறிய முடிகிறதா? தி. ஜானகிராமன் ஆண்டுதோறும் மறைந்தார் என்னும் தவறான பொருள் அமையும்படி வந்துள்ளது.

“மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்"

என்றே அமைந்திருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு தொடரிலும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவை அமைந்திருக்கும். சில தொடர்களில் எழுவாய் மறைந்து வருவதும் உண்டு. கீழ்க்காணும் இத்தொடர்களைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்.

பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.

காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்.

இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்

இத்தொடர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு பொருளை தருகின்றன. நான்காம் தொடர் தவிர்த்துப் பிற தொடர்கள் உணர்த்தும் பொருள் முழுமையாக வெளிப்படவில்லை.

முதல் தொடர் 'காட்டிற்குப்’ பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் சென்றான் என்னும் பொருளையும் இரண்டாம் தொடர் 'யாரோ ஒருவருக்குப் பணி விடை செய்ய இராமனுடன் இலக்குவனும் சென்றான்' என்னும் பொருளையும் மூன்றாம் தொடர் 'காட்டில் உள்ள இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்' என்னும் பொருளையும் தருகின்றன.


நினைவில் கொள்ள வேண்டியவை

1. பண்புத்தொகை, வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒருசொல் என்னும் தன்மை கொண்டவை. எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது. 

செங்கடல் (சரி) - செங் கடல் (தவறு)

கத்துகடல் (சரி) - கத்து கடல் (தவறு)

2. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

அணங்குகொல் (சரி) அணங்கு கொல் (தவறு) 

3. இடைச்சொல்லுடன் சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.

பேசியபடி பணம் கொடுத்தான் ( பேசியவாறு ) 

பேசிய படி பணம் கொடுத்தான் ( படியளவு )

4. உடம்படுமெய்கள் அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுத வேண்டும். 

மணியடித்துச் சென்றான் (ஒலி எழுப்புதல்) 

மணி அடித்துச் சென்றான் (மணி என்பவன் யாரையோ அறைதல்)

5. பன்மையை உணர்த்தும் 'கள்' விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும். 

ஈக்கள் மொய்த்தன - ஈக் கள் மொய்த்தன 

குரங்குகள் உண்டன - குரங்கு கள் உண்டன

6. இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்

படபடவெனச் சிறகை அடித்தது (சரி) 

பட பட எனச் சிறகை அடித்தது (தவறு)

7. சொற்புணர்ச்சியில் நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாகவும் வருமொழி முதலெழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவற்றைச் சேர்த்தே எழுத வேண்டும்.

சுடராழி - சுடர் + ஆழி

8. உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும்போது சேர்த்தே எழுத வேண்டும்.

கடிமணம் - கடி மணம்

9. உம்மைத்தொகைச் சொற்களையும் நேரிணைச் சொற்களையும் எதிரிணைச் சொற்களையும் சேர்த்தே எழுத வேண்டும்.

உற்றாருறவினர் (சரி ) - உம்மைத்தொகை

உற்றார் உறவினர் (தவறு)

சீரும்சிறப்பும் (சரி ) - நேரிணைச்சொற்கள்

சீரும் சிறப்பும் (தவறு)

மேடுபள்ளம் (சரி) - எதிரிணைச்சொற்கள்

மேடு பள்ளம் (தவறு)


சொற்றொடர்ப்பிழை

திணை, பால், எண், இடம், காலம் முதலிய பிழைகள் ஏற்படாவண்ணம் தொடர் எழுதப் பழகுதல் சாலச்சிறந்தது. கீழுள்ள தொடர்கள் பிழையானவை அல்லவா? சிந்தியுங்கள்.

• கோவலன் மதுரைக்குச் சென்றது. 

• பறவைகள் நெல்மணிகளை வேகமாக் கொத்தித் தின்றது.

• குதிரையும் யானையும் வேகமாக ஓடியது.

• அவன் வெண்மதியிடம் பேசினாய்.

• சென்னையிலிருந்து நேற்று வருகிறான்.

அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்ல என்பனவற்றைத் திணை, பால் எண், இடம் அறிந்து ஆளுதல் வேண்டும். (அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், நாய் அன்று, நாய்கள் அல்ல)

அது என்னும் வேற்றுமை உருபு அஃறிணைக்கு உரியது. வரும் சொல் உயர்திணையாயின் அது என்னும் உருபினைப் பயன்படுத்துதல் கூடாது. எனது வீடு, அரசரது மாளிகை என்று எழுதலாம். ஆனால், எனது மனைவி, அரசரது மகன் என்றெழுதுதல் பிழை (மனைவி, மகன் - உயர்திணை ).

தொடர் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் அமைக்கப்பட வேண்டும். இரண்டாவது குழந்தையிடம் கேள்வி கேட்டான் / குழந்தையிடம் இரண்டாவது கேள்வி கேட்டான். முதலிரண்டு சொற்கள் இடம் மாறியதால் தொடருக்கான பொருள் மாறுகிறது. அவன் அருகில் இருந்தான் அவன் அருகாமையில் இருந்தான். அருகில் என்பதற்கு எதிர்ச்சொல் அருகாமை . இவ்வேறுபாடு தெரியாவிடின் தொடரின் பொருள் மாறிவிடும்.

பேருந்து மோதி மிதிவண்டியில் சென்றவர் காயம் என்னும் தொடரும் பிழையானது. பேருந்து மோதியா மிதிவண்டியில் சென்றார்? மிதிவண்டியில் சென்றவர் பேருந்து மோதி காயம் என்று எழுதவேண்டும்.

பொதுவான பிழைகள்

சுடுதண்ணீர் என்று எழுதுவதும் பிழையே. தண்ணீர் - குளிர்ந்த நீர். சூடும் குளிருமாக நீர் எப்படி இருக்க முடியும்? நடுசென்டரில் நின்றான் - நடு என்பது தமிழ். சென்டர் என்பது ஆங்கிலம். இரண்டிற்கும் ஒரே பொருள். நடுவில் நின்றான் என்று எழுதினாலே போதும்.

ஒரு வரியின் இறுதியிலுள்ள சொல்லைப் பிரித்து எழுதுவதாக இருந்தால் பொருள் கெடாதபடி பிரிக்கவேண்டும். நம்பியார் கூடச் சென்றார் என்பதற்கும், நம்பி யார் கூடச் சென்றார் என்பதற்கும் பொருள் வேறுபாடு உண்டு

வினைத்தொகைச் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகக்கூடாது.

  சரி  

திருவளர்செல்வன் / செல்வி

திருநிறைசெல்வன் / செல்வி

தவறு  

திருவளர்ச்செல்வன் / செல்வி

திருநிறைச்செல்வன் / செல்வி

பிழை தவிர்க்கச் சில குறிப்புகள்

• ஒருவர் சொல்லச் சொல்லக் கேட்டு எழுதிப் பழகுதலும் உதவும்.

• சொல்லுக்கான பொருளை நினைவில் கொள்ளுதல் சிறந்த பயிற்சியாகும்.

• மரபுச்சொற்களைக் கற்றல் இன்றியமையாத ஒன்றாகும். (யானை - கன்று ; குதிரை - கனைக்கும்)

• இலக்கண விதிகளை மனத்துள் பதித்து வைப்பதும் நமது கடமை.

• எழுதியதை மீளப் படித்துப் பார்த்துப் பிழையிருப்பின் திருத்துதலும் கடமையாகும்.


Tags : Chapter 3 | 12th Tamil இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula : Grammar: Porul mayakkam Chapter 3 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : இலக்கணம்: பொருள் மயக்கம் - இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள