உள்ளாட்சி அமைப்புகள் | குடிமையியல் - வரலாற்றுப் பின்னணி | 9th Social Science : Civics: Local Self Government
வரலாற்றுப் பின்னணி
உள்ளாட்சி அமைப்பு இந்தியாவில் தொன்றுதொட்டு காணப்படும் கருத்துரு ஆகும். இது பிற்காலச் சோழர்கள் அல்லது தஞ்சை சோழப்பேரரசு காலத்தில் உச்சநிலையை அடைந்தது. மௌரியப் பேரரசு காலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றிய ஆவணக் குறிப்புகள் உள்ளன. பண்டைய இந்தியா முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் பல் வேறுபட்ட அம்சங்களுடன் காணப்பட்டன. இடைக்காலத்தில் நிலபிரபுவத்துவத்தின் முறையின் தாக்கத்தால்,
உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் குறைந்தது. ரிப்பன் பிரபுவின் 1882ஆம் ஆண்டு தீர்மானத்தின்படி, மேற்கத்திய நாடுகளின் மக்களாட்சி முறையின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டின் கால் இறுதியில் இவ்வமைப்புகள் இந்தியாவில் புத்துயிர் பெற்றன. நவீன உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளமிட்டதால் ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1935 இந்திய அரசு சட்டம்,
மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் 1937இல் நடைமுறைக்கு வந்தது. காங்கிரஸ் ஆட்சி அமைத்த மாகாணங்களில், ஊரக வளர்ச்சிக்குச் சிறப்பு கவனம் அளிக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது காந்தியடிகளின் திட்டங்களின் ஒரு முக்கியக் கூறாக இருந்தது.
இந்திய விடுதலைக்குப் பின்பு இந்திய அரசமைப்பினை உருவாக்கியவர்கள் காந்தியடிகளின் கிராம தன்னாட்சிக் கொள்கையினைப் பெரிதும் கவனத்தில் கொண்டு செயலாற்றினர். கிராமங்கள் நிறைந்த இந்தியாவில்,
கிராம ஊராட்சிகளின் உருவாக்கம் ஒரு சமூக இயக்கமாகவே அமைந்தது. விடுதலைப் போராட்டத்தின்போது பஞ்சாயத்து மறுசீரமைப்பு என்பது மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது.
உள்ளாட்சி அமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சில தடைகளை 1982 ஆம் ஆண்டு அவர் இயற்றிய தீர்மானத்தின் மூலம் அகற்ற முயன்றார். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிக அதிகாரங்களையுடைய உள்ளாட்சி நிர்வாக உரிமைகளை வழங்கும் விதமாக ரிப்பன் தொடர்ச்சியான பல சட்டங்களை ஏற்படுத்தினார்.
ரிப்பன் பிரபு
1882ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர் ரிப்பன் பிரபு ஆவார்
இந்தியாவில் நிர்வாகத்தை தாராளமயம் ஆக்கும் சில நடவடிக்கைகளை ரிப்பன் மேற்கொண்டார். நிர்வாகத்தை பரவலாக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சி அமைப்புகளை அவர் முறைப்படுத்தினார்.