வரலாறு - உலகின் தோற்றம் மற்றும் கடந்த காலம் குறித்த மனிதர்களின் ஆய்வு | 9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period
உலகின் தோற்றம் மற்றும் கடந்த
காலம் குறித்த மனிதர்களின் ஆய்வு
இப்புவியில், உலகம் மற்றும் பேரண்டம் குறித்து
புரிந்துகொள்ளவும், அதைக் குறித்த அறிவைச் சேகரித்து விளக்கவும்
முயற்சி செய்யும் ஒரே உயிரினம் மானுட இனம் மட்டும் தான். பரிணாம வளர்ச்சிப்
போக்கில் மனிதர்கள் உணர்தல் நிலையையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாறினார்கள்.
அவர்கள் இயற்கை, தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் உலகம் குறித்துச் சிந்திக்கவும், கேள்வி
எழுப்பவும் தொடங்கினர். முதலில் அவர்கள் இயற்கையைக் கடவுளாகக் கருதினார்கள்.
சூரியன், சந்திரன் முதலான
பல இயற்கை ஆற்றல்கள் குறித்துத் தமது சுய புரிதல்களை உருவாக்கி வழிபட்டனர்.
அவற்றில் சில அறிவியல்பூர்வமானவை அல்ல. அவர்களுடைய பண்டைய எழுத்துகளிலும், சமய
இலக்கியங்களிலும் உலகின் தோற்றம் குறித்த அறிவியல் அறிவின் போதாமை வெளிப்படுகிறது.
கி. பி. (BC)/பொ.ஆ.மு
.(BCE) - பொது ஆண்டுக்கு
முன் (Before Common
Era)
கி. பி. (AD)/பொ.ஆ. (CE) - பொது ஆண்டு (Common Era)
மி. ஆ.
மு. (MYA) - மில்லியன் (10இலட்சம்)
ஆண்டுகளுக்கு முன்
வரலாறு எழுதுவது பண்டைய கிரேக்கர்கள் காலத்தில்
தொடங்கியது என்று சொல்லலாம். கிரேக்கத்தின் ஹெரோடோடஸ் (கி.மு. (பொ.ஆ.மு.) 484-425) வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். ஏனெனில், அவர் எழுதிய
வரலாறு மனிதத்தன்மையுடனும், பகுத்தறிவுடனும் காணப்படுகிறது. மனிதர்களின்
தோற்றம் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகள் கீழ் தரப்பட்டுள்ள காரணிகளால்
சாத்தியமாகின.
● ஐரோப்பாவின் மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் பிறகு
ஏற்பட்ட தொல்பொருள் சேகரிப்பின் மீதான ஆர்வம் மற்றும் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டமை
● பாறை அடுக்கியல், நிலவியல் சார்ந்த கருத்துகள் ஆகியவற்றின்
வளர்ச்சி உயிரியல் பரிணாமம் குறித்த டார்வினின் கொள்கை
● மனிதன் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள், பண்டைய
நாகரிகங்களின் கற்கருவிகள், செய்பொருள்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டமை.
● தொடக்ககால எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியமை.
மண்ணடுக்கியல்
– Stratigraphy - இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண்
அடுக்குகளின் தோற்றம், தன்மை , உறவுமுறைகள் குறித்து ஆராயும் இயல்.
உலகின்
மிகத் தொன்மையான அருங்காட்சியகம் - என்னிகால்டி-நன்னா அருங்காட்சியகம் மெசபடோமியாவில் கி.மு.
(பொ.ஆ.மு.) 530இல் அமைக்கப்பட்டது. இளவரசி என்னிகால்டி, நவீன பாபிலோனிய அரசரான நபோனிடசின் மகள் ஆவார்.
பொ.ஆ. 1471இல் இத்தாலியில்
அமைக்கப்பட்ட கேபிடோலைன் அருங்காட்சியகம்தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும்
மிகப் பழமையான அருங்காட்சியகமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகமே
உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம். இது பொ.ஆ. 1677ல்
உருவாக்கப்பட்டதாகும்.
மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் பூர்வமாகப்
புரிந்துகொள்ள ஹெர்பர்ட் ஸ்பென்சரின் (பொ.ஆ.1820-1903) உயிரியல் பரிணாமக் கொள்கையும், சார்லஸ்
டார்வினின் (பொ.ஆ.1809 - 1882) இயற்கைத் தேர்வு மற்றும் தகவமைப்பு
(தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்) என்ற கருத்துகளும் பங்காற்றுகின்றன. சார்லஸ்
டார்வின் "உயிரினங்களின் தோற்றம் குறித்து" (On the Origin of Species) என்ற நூலை 1859லும், "மனிதனின் தோற்றம்" (The Descent of Man) என்ற நூலை 1871லும் வெளியிட்டார்.
இயற்கைத்
தேர்வு - தங்களது
சூழ்நிலைக்கு சிறந்த முறையில் தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் பிழைத்து, அதிகமாக இனப்
பெருக்கம் செய்து பல்கிப் பெருகும் செயல்முறை இயற்கைத் தேர்வு எனப்படும்.
தகுதியுள்ளது
தப்பிப் பிழைக்கும் - என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் தனது சந்ததியை அதிக எண்ணிக்கையில்
விட்டுச் செல்லும் ஓர் இனம் பிழைத்து நீண்டு வாழ்வதைக் குறிக்கிறது.
புதை
படிவங்கள் (Fossils) - கடந்த காலத்தில்
வாழ்ந்த விலங்குகள், தாவரங்களின் எச்சங்கள், தடங்கள், அடையாளங்கள்
அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது புதைபடிவங்கள் (fossils)
எனப்படும். கனிமமாக்கல் (Mineralization) காரணமாக விலங்கின் எலும்புகள் அப்படியே பாதுகாக்கப்பட்டுவிடும். புதைபடிவுகள்
குறித்த ஆய்வு புதைபடிவ ஆய்வியல் (Palaeontology) என்று அழைக்கப்படுகிறது.
கற்காலம் - கருவிகள் செய்வதற்கு கற்கள்
பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்ட காலம்.
வெண்கலக்
காலம் - வெண்கல
உலோகவியல்(தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுத்தல்) வளர்ச்சி பெற்று வெண்கலக் கருவிகள், பொருள்கள்
செய்யப்பட்ட காலம்.
இரும்புக்
காலம் - கருவிகள்
செய்ய இரும்பு உருக்கிப் பிரித்தெடுக்கப்பட்ட காலம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து அறிவியல் உத்திகளைப் பயன்படுத்தியும், முறையான ஆய்வுகளை மேற்கொண்டும் அறிஞர்கள் தொல்பழங்கால மனித குலத்தின் தோற்றம், பண்டைய நாகரிகங்கள் ஆகியன குறித்து ஆய்வுகள் செய்தனர். இதன்மூலம் இன்று உருவாக்கப்பட்டுள்ள அறிவுக்கருத்துகள் உருவாக மாபெரும் பங்களித்துள்ளார்கள். இன்று மனிதனின் பரிணாமம் (படிநிலை வளர்ச்சி) குறித்த கோட்பாடு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.