வரலாறு - தொல்பழங்காலம்: ஆஸ்ட்ரோலோபித்திகஸிலிருந்து ஹோமோ எரக்டஸ் வழியாக ஹோமோ சேப்பியனின் வளர்ச்சி | 9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period
தொல்பழங்காலம்:
ஆஸ்ட்ரோலோபித்திகஸிலிருந்து ஹோமோ
எரக்டஸ் வழியாக ஹோமோ சேப்பியனின் வளர்ச்சி
நாம் யார்? நமது இனத்திற்கு என்ன பெயர்?
நாம் "ஹோமோ சேப்பியன்ஸ்" என்ற
இனத்தைச் சேர்ந்தவர்களாவோம்.
மனிதர்களுடன் சிம்பன்சி, கொரில்லா, உராங்உட்டான்
ஆகிய உயிரினங்களை கிரேட் ஏப்ஸ் (GreatApes) என அழைக்கப்படும் பெருங்குரங்குகள் வகை என்று
குறிப்பிடுகிறார்கள். இவற்றில், சிம்பன்சி மரபணு ரீதியாக மனிதர்களுக்கு மிக
நெருக்கமானது.
உங்களுக்குத் தெரியுமா?
சிம்பன்சி இனத்தின் மரபணுவை
(டி.என்.ஏ) எடுத்து ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் 98% ஒத்து உள்ளதாம்!
மனிதர்களின் மூதாதையர்கள் ஹோமினின்
என்றழைக்கப்படுகின்றனர், இவர்கள் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியவர்கள்
ஆவர். பின்னர் பரிணாம வளர்ச்சி அடைந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவினார்கள்
என்ற கருத்து அறிஞர்களால் ஏற்கப்பட்டுள்ளது. இந்த ஹோமோனின்கள் இனம் சுமார் 7 முதல் 5 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இந்தக் குழுவின் மிகத் தொடக்க இனமான
ஆஸ்ட்ரோலாபித்திகஸின் எலும்புக்கூட்டுச் சான்றுகள் ஆப்பிரிக்காவில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவின் கிரேட் ரிஃப்ட் (பெரும்
பிளவுப்) பள்ளத்தாக்கில் பல இடங்களில் தொல்பழங்காலம் குறித்த சான்றுகள்
கிடைத்துள்ளன.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு சிரியாவின்
வடபகுதியிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் மத்திய மொசாம்பிக் வரை சுமார் 6,400 கிமீ தூரம்
பரவியுள்ள பள்ளத்தாக்கு போன்ற நிலப்பரப்பாகும். வான் வெளியிலிருந்து
பார்க்கும்போதும் இப் புவியியல் அமைப்பானது புலப்படுகிறது. மேலும் பல வரலாற்றுக்கு
முற்பட்ட இடங்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகின்றன
உடற்கூறு அடிப்படையில் மனித மூதாதையர்கள்
பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்படுகிறார்கள்
ஹோமினிட்: நவீன மற்றும் அழிந்து போன அனைத்து
பெருங்குரங்கு இனங்களும் (கிரேட் ஏப்ஸ்) ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன. இது
மனிதர்களையும் உள்ளடக்கிய வகையாகும்.
ஹோமினின் எனப்படும் விலங்கியல் பழங்குடி இனம் மனித
மூதாதையர்களின் உறவினர்களையும் அதன் தொடர்புடைய நவீன மனிதர்களையும் (ஹோமோ
சேப்பியன்ஸ்) குறிக்கும். இதில் நியாண்டர்தால் இனம், ஹோமோ எரக்டஸ், ஹோமோ ஹெபிலிஸ், ஆஸ்ட்ரோலோபித்திசின்கள் ஆகியன அடங்கும்.
இப்பழங்குடி இனத்தில் மனித இனம் மட்டுமே இன்றளவும் வாழ்கின்றது. இந்த இனம்
நிமிர்ந்து இரண்டு கால்களால் நடப்பதாகும். இந்த இனத்திற்கு பெரிய மூளை உண்டு. இவை
கருவிகளைப் பயன்படுத்தும். இவற்றில் சில ஆஸ்ட்ரலோபித்திசைன்கள் தகவல் பரிமாறும்
திறன்பெற்றவை. கொரில்லா எனப்படும் மனிதக் குரங்குகள் இப்பழங்குடியில் அடங்காது.
ஆப்பிரிக்காவில் சுமார் 2.6 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ ஹெபிலிஸ் என்ற இனம்தான் முதன்முதலில் கருவிகள்
செய்த மனித மூதாதையர் இனமாகும். சுமார் 2மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ்
எர்காஸ்டர் என்ற இனம் உருவானது. இந்த இனம் கைக்கோடரிகளைச் செய்தது. சுமார் 2 மற்றும் 1 மில்லியன்
ஆண்டுகளுக்கு இடையில் இந்த இனம் ஆப்பிரிக்கா, ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.
உடற்கூறு ரீதியாக ஹோமோ சேப்பியன்ஸ்
என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில்
சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால்
பரவியதாக நம்பப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
சிம்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி
(போனோபோ) வகை இனங்கள் நமக்கு நெருக்கமான, தற்போதும் உயிர்வாழும் உயிரினங்களாகும்.
தொல்பழங்காலப் பண்பாடுகள்
மனித மூதாதையரின் புதைபடிவ எலும்புகள் ஹோமோ
எபிலிஸ், ஹோமோ எரக்டஸ், நியாண்டர்தாலென்சிஸ்
என்று பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்படும் அதே சமயத்தில், கற்கருவிகளின்
பண்பாடுகள் அடிப்படையில் தொடக்க கால கற்கருவிகள் சேர்க்கை , ஓல்டோவான்
தொழில்நுட்பம், கீழ் (Lower), இடை (Middle), மேல் (Upper) பழங்க ற்கால (Palaeolithic)
பண்பாடுகள் என்றும் இடைக்கற்காலப்(Mesolithic) பண்பாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
மனித மூதாதையரின் தொடக்ககாலக் கற்கருவிகள் சேர்க்கை
மனித மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட தொடக்ககாலக்
கற்கருவிகள் கென்யாவின் லோமிக்குவி என்ற இடத்தில் கிடைத்துள்ளன. இவை 3.3 மில்லியன்
ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஓல்டோவான் கருவிகள் ஆப்பிரிக்காவின் ஓல்டுவாய்
பள்ளத்தாக்கில் கிடைத்துள்ளன. இவை 2 முதல் 2.6 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.
மனித மூதாதையர்கள் (ஆஸ்ட்ரோலோ பித்திசின்கள்)
சுத்தியல் கற்களை பயன்படுத்தினர், மேலும் "பிளேக்ஸ்"(flakes) எனப்படும் கற்செதில்களை உருவாக்கிக் கருவிகளாகப் பயன்படுத்தினார்கள்.
இக்கருவிகள் உணவை வெட்டவும், துண்டு போடவும், பக்குவப்படுத்தவும்
பயன்படுத்தப்பட்டன.
ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ் ஆகிய மனித மூதாதையர்களின் பண்பாடு
கீழ்ப் பழங்காலப் பண்பாடு என்று குறிக்கப்படுகிறது. இவர்கள் பெரிய கற்களைச்
செதில்களாகச் சீவி கைக்கோடரி உள்ளிட்ட பல வகைக் கருவிகளை வடிவமைத்தார்கள். இந்தக்
கருவிகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை சுமார் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று
கணக்கிடப்பட்டுள்ளன. இவர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக, கைக்கோடரி, வெட்டுக்கருவி
உள்ளிட்ட பல்வேறு கருவிகளைச் செய்தார்கள். இந்தக் கருவிகள் (biface) இருமுகக் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சமபங்கு உருவ அமைப்பைப் (symmetry) பெற்றுள்ளன. மேலும், இவை நமது மனித மூதாதையரின் அறிவுணர் ஆற்றலை
வெளிப்படுத்துகின்றன. இந்தப் பண்பாடு கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு
என்றழைக்கப்படுகிறது. கைக்கோடரிக் கருவிகள் அச்சூலியன் கருவிகள் என்று
அழைக்கப்படுகின்றன. இந்தக் கருவிகள் கி.மு. 250,000 –
60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை
தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.
அச்சூலியன் (Acheulian) - இவ்வகைக் கைக்கோடரிகள் முதன்முதலில் பிரான்சில்
உள்ள செயின்ட் அச்சூல் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. எனவே இவை அச்சூலியன்
கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.
இருமுகக்
கருவி (bi-faces) - இரு புறமும் செதுக்கப்பட்டதால் இக்கருவிகளுக்கு இப்பெயர் இடப்பட்டது.
உயிர்வாழ்வதற்கான
நிலையான தேவைகள் தொல்பழங்கால மக்களது நிலையான தேவைகளில் உணவும் நீரும்தான் முதன்மையானதாக
இருந்தன.
மனித மூதாதையர்களிடம் இன்று நாம் பெற்றுள்ளது
போன்ற உயர் மொழியாற்றல் இருந்திருக்காது. ஒருவேளை அவர்கள் சில ஒலிகளையோ சொற்களையோ
பயன்படுத்தியிருக்கலாம். பெரிதும் அவர்கள் சைகை மொழியையே
பயன்படுத்தியிருக்கக்கூடும். கருவிகள் செய்வதற்கானகற்களைத் தேர்ந்தெடுக்கவும்,சுத்தியல்
கற்களைக் கொண்டு பாறைகளை உடைத்துச் செதுக்கவும், கருவிகளை வடிவமைக்கவும் கூடிய அளவிற்கு அவர்கள்
அறிவுக் கூர்மை உள்ளவர்களாக இருந்தனர். வேட்டையாடியும், வேட்டையாடும்
விலங்குகள் தின்று விட்டுப் போட்ட விலங்குகளின் இறைச்சியையும் உண்டனர். கிழங்குகள், விதைகள், பழங்கள் போன்ற
தாவர உணவுகளைச் சேகரித்து உண்டனர்.
இந்தியாவில் அச்சூலியன் கருவிகள் சென்னைக்கு
அருகிலும், கர்நாடகாவின் இசாம்பூர், மத்தியப் பிரதேசத்தின் பிம்பேத்கா போன்ற பல
இடங்களிலும் கிடைத்துள்ளன.
மூலக்
கற்கள் (raw material) - என்பவை கற்கருவிகள் செய்யப்பயன்படும் கற்கள் ஆகும்.
கருக்கல் (core) - என்பது ஒரு கல்லின் முதன்மைப் பாளம் ஆகும்.
கற்சுத்தியலால் செதில்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன.
செதில் - பெரிய கற்பாளத்திலிருந்து அல்லது
கருங்கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட ஒரு சிறு கற்துண்டு.
தற்காலத்திற்கு சுமார் 3,98,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் கற்கருவித் தொழில்நுட்பத்தில் மேலும்
மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தக் காலகட்டத்தில் ஹோமோ எரக்டஸ் இனம் வாழ்ந்து வந்தது.
உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்கள் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக்
கூறப்படுகிறது.
கல் ('Lith') தொழில்நுட்பம்
(Technology): கற்கருவிகள்
உருவாக்கத்தில் ஈடுபடுத்தப்படும் முறைமைகளும் நுட்பங்களும் கற்கருவி (Lithic) தொழில்நுட்பம் எனப்படுகிறது.
இக்காலத்தில் கைக்கோடரிகள் மேலும் அழகுற
வடிவமைக்கப்பட்டன. பல சிறு கருவிகளும் உருவாக்கப்பட்டன. கருக்கல்லை நன்கு தயார்
செய்து, பின்னர்
அதிலிருந்து செதில்கள் எடுக்கப்பட்டு கருவிகள் உருவாக்கப்பட்டன. கூர்முனைக்
கருவிகளும், சுரண்டும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. சிறுஅறுக்கும் தகடுகளும் (blades) கத்திகளும் தயாரிக்கப்பட்டன. லெவலாய்சியன் (லெவலவா பிரெஞ்சு மொழி உச்சரிப்பு) கற்கருவி செய்யும் மரபு இக்கால கட்டத்தைச்
சேர்ந்ததுதான். இக்காலகட்ட கற்கருவிகள் ஐரோப்பாவிலும் மத்திய மற்றும் மேற்கு
ஆசியப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
லெவலாய்சியன் (லெவலவா) கருவிகள் - கருக்கல்லை நன்கு தயார்
செய்து உருவாக்கப்பட்ட கருவிகள். இவை முதலில் கண்டெடுக்கப்பட்ட பிரான்சில் உள்ள
லெவலவா (லெவலாய்ஸ்) என்ற இடத்தின் பெயரை ஒட்டி இப்பெயர் பெற்றன.
இடைப் பழங்கற்காலப் பண்பாடு தற்காலத்திற்கு முன், 3,85,000 முதல் 1,98,000 ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பாவிலும் ஆசியாவின் மேற்குப்
பகுதியிலும் உருவானது. இக்கருவிகள் 28,000 வரை பயன்படுத்தப்பட்டன.
இக்காலகட்டத்தின் மக்கள் இனம் நியாண்டர்தால்
என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் இறந்தவர்களை முறையாகப்புதைத்தனர்.
இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து வந்த
பண்பாடு, மேல்
பழங்கற்காலப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. கற்கருவித் தொழில்நுட்பத்தில்
ஏற்பட்ட புதிய நுட்பங்கள் இந்தப் பண்பாட்டின் சிறப்பான கூறுகளில் ஒன்றாகும்.
கற்களாலான நீண்ட அறுக்கும் தகடுகளும், பியூரின் எனப்படும் உளிகளும் உருவாக்கப்பட்டன.
இவர்கள் சிலிகா அதிகமுள்ள பல்வேறு கல் வகைகளைக் கருவிகள் செய்யப்
பயன்படுத்தினார்கள். பல்வேறு ஓவியங்களும் கலைப் பொருட்களும் இக்காலத்தில்
உருவாக்கப்பட்டன. இவர்கள் தயாரித்த பல்வேறு செய்பொருள்கள் இவர்களது அறிவுசார் திறனில்
ஏற்பட்ட முன்னேற்றத்தையும், மொழிகள் உருவானதையும் காட்டுகின்றன. இந்தக் கால
கட்டத்தில் நுண்கற்கருவிகள் எனப்படும் குறுங் கற்கருவிகளும் (Microliths) பயன்பாட்டிற்கு வந்தன.
பியூரின் - கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி
மனிதப் பரிணாம வளர்ச்சியின்விளைவாகத் தோன்றிய
முதல் நவீன மனிதர்கள் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில்
சப்சஹாரா பகுதி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப்
பகுதியில் தோன்றினர். இந்த இனம் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவின் பல்வேறு
பகுதிகளுக்குப் பரவியது. ஒருவேளை அங்கு ஏற்கெனவே வசித்தவர்களை இவர்கள்
விரட்டியிருக்கலாம். இக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் குரோ-மக்னான்கள்
என்றழைக்கப்படும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.
கருவிகளையும் கலைப் பொருட்களையும் செய்யக்
கொம்புகளும் தந்தங்களும் பயன்படுத்தப்பட்டன. எலும்பாலான ஊசிகள், தூண்டில்
முட்கள், குத்தீட்டிகள், ஈட்டிகள் ஆகியவை
படைப்பாக்கத்துடன் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் ஆடைகளை அணிந்தனர். சமைத்த உணவை
உண்டனர். இறந்தவர்கள், மார்பின் மீது கைகளை வைத்த நிலையில்
புதைக்கப்பட்டார்கள். பதக்கங்களும், வேலைப்பாடு மிகுந்த கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.
இக்கால களிமண் சிற்பங்கள், ஓவியங்கள், செதுக்குவேலைகள் சான்றுகளாக
நமக்குக்கிடைத்துள்ளன. வீனஸ் என்றழைக்கப்படும் கல்லிலும் எலும்பிலும்
செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள் ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில
பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன.
பனிக்
காலம் -
தற்காலத்திற்கு 8,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பாகங்கள்
பனியாலும் பனிப்பாளங்களாலும் மூடப்பட்டிருந்த காலம் பனிக்காலம் ஆகும்.
இடைக்கற்காலப் பண்பாடு
பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும்
இடைப்பட்ட காலப் பண்பாடு இடைக் கற்காலம் என்று அறியப்படுகிறது. மக்கள்
பெரும்பாலும் மைக்ரோலித்திக் என்று சொல்லப்படும் சிறு நுண் கற்கருவிகளைப்
பயன்படுத்தினர். பனிக்காலத்திற்குப் பிறகு புவி வெப்பமடைந்ததைத் தொடர்ந்து, வேட்டையாடுவோராகவும்
உணவு சேகரிப்போராகவும் இருந்த மக்கள் பல்வேறு சூழலியல் பகுதிகளுக்கும் (கடற்கரை, மலைப் பகுதி, ஆற்றுப்படுகை, வறண்ட நிலம்)
பரவ ஆரம்பித்தனர்.
இடைக்கற்கால மக்கள் நுண்கற்கருவித்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இவர்கள் சுமார் 5 செமீ அளவிற்கும் குறைவான அளவுள்ள சிறு சிறு
செய்பொருள்களை உருவாக்கினர். இவர்கள் கூர்முனைகள், சுரண்டும் கருவி, அம்பு முனைகள் ஆகியவற்றைச் செய்தனர். இவர்கள்
பிறை வடிவ (Lunate), முக்கோணம் சரிவகம் (Trapeze) போன்ற கணிதவடிவியல் அடிப்படையிலான கருவிகளையும்
செய்தனர். இந்தக் கருவிகள் மரத்தாலும் எலும்பாலுமான பிடிகள் அமைத்துப்
பயன்படுத்தப்பட்டன.
மைக்ரோலித்: நுண்கற்கருவிகள்
மிகச் சிறிய கற்களில் உருவாக்கப்பட்ட செய்பொருட்கள் ஆகும்.
வேளாண்மை, விலங்குகளைப் பழக்குதல் ஆகியவை புதிய
கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாகும். வளமான பிறை நிலப்பகுதி என்று
அழைக்கப்படும் எகிப்து மற்றும் மெஸபடோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி, சீனாவின் செழுமையான பகுதிகள் ஆகியனவற்றில் புதிய
கற்காலத்துக்கான தொடக்க காலச் சான்றுகள் காணப்படுகின்றன. சுமார் கி.மு. (பொ.ஆ.மு.)
10,000லிருந்து கி.மு. (பொ.ஆ.மு.) 5,000ற்குள் இப்பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள்
தொடங்கிவிட்டன.
உங்களுக்குத்
தெரியுமா?
கோதுமை, பார்லி, பட்டாணி
ஆகியவை 10000 ஆண்டுகளுக்கும் முன்பே பயிரிடத்
தொடங்கப்பட்டுவிட்டன. காய்-கனி மற்றும் கொட்டை தரும் மரங்க ள் கி.மு. (பொ.ஆ.மு.) 4000
ஆண்டுகளிலேயே விளைச்சலுக்காகப் பயிரிடப்பட்டுள்ளன. அத்தி, ஆலிவ், பேரீச்சை, மாதுளை, திராட்சை
அவற்றில் அடங்கும்.
பிறை
நிலப்பகுதி
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை
அடங்கிய பகுதி பிறை நிலவின் வடிவத்தில் உள்ளது. இது பிறை நிலப்பகுதி (Fertile Crescent Region) எனப்படுகிறது.
கற்கருவிகள் செய்வதற்கு வழவழப்பாக்கும், மெருகூட்டும்
புதிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதால் இது புதியகற்காலம் என்று அழைக்கப்படுகிறது. புதிய
கற்கால மக்கள், பழங்கற்காலச் செதுக்கப்பட்ட கற்கருவிளையும் பயன்படுத்தினர். இடைக்கற்காலம்
வரையிலும் மக்கள் தாம் நிலைத்திருப்பதற்காக வேட்டையாடுவதையும் உணவு
சேகரிப்பதையும்தான் நம்பியிருந்தார்கள். வேட்டையிலும் உணவு சேகரிப்பிலும் மிகவும்
குறைந்த அளவு உணவுதான் கிடைத்தது. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மிகச் சிறிய
எண்ணிக்கையிலான மக்கள்தான் வாழ முடிந்தது.
பிறகு பயிர் விளைவித்தலும். விலங்குகளைப் பழக்கப்படுத்துதலும் அறிமுகமானது. இது ஏராளமான அளவில்தானியமற்றும் விலங்கு உணவை உற்பத்தி செய்வதற்கு இட்டுச் சென்றது. ஆறுகள் படிய வைத்த வளமான வண்டல் மண் வேளாண்மை அதிகரிக்க உதவியது. இது, சிறந்த இயற்கைத் தகவமைப்பாக இருந்ததால், மக்கள் நதிக்கரைகளில் வாழ்வதை விரும்பினர். இப்புதிய செயல்பாடுகள் உணவு உபரிக்கு இட்டுச் சென்றது. இந்த உணவு உபரிதான் பண்டைய நாகரிகங்களின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கியமான கூறு ஆகும். இக்காலத்தில் நிரந்தரமான வீடுகள் கட்டப்பட்டன. பெரிய ஊர்கள் உருவாகின. எனவே, இவை புதிய கற்காலப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.