இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா | வரலாறு - ஜப்பான் | 9th Social Science : History: The Middle Ages
ஜப்பான்
ஜப்பானியரின் மூதாதையர் பலர், கொரியாவிலிருந்தும் சிலர் மலேசியாவிலிருந்தும் வந்தவர்களாவர். கொரியாவின் மூலமாக சீன நாகரிகம் யமட்டோவில் பரவியது (ஜப்பானின் முன்னாள் பெயர் 'யமட்டோ '
ஆகும்).
இந்நாட்டின் பூர்வ குடிகள் 'அய்னஸ்' (அபாரிஜின்கள்) என அழைக்கப்படுகின்றனர். ஜப்பானியர்களின் பூர்வீக மதம் ஷின்டோ ஆகும். ஷின்டோ என்பது இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாடு ஆகிய இரண்டும் கலந்ததாகும்.
பல நூற்றாண்டுகளாக ஜப்பான் தனிமைப்பட்டே இருந்தது. இதனால் அயலவர் படையெடுப்புகளுக்கு ஆளாகாமல் சுதந்திரத்தின் பயனை அனுபவித்து வந்தது. பௌத்த மதம் கொரியாவின் மூலம் ஜப்பானில் அறிமுகமாகியது. 'சோடுகு-தாய்சி இறந்தபின்னர் அவருடையகுடும்பம் ஃபுஜிவாரா குடும்பத்தை உருவாக்கிய நகடோம்நோ-காமதாரி என்பவரால் விரட்டப்பட்டது. அவர் பல சீன வழிமுறைகளைப் பின்பற்றி மைய அரசை மேலும் வலிமையானதாக மாற்றினார். நாரா என்னும் நகரை தலைநகரமாக்கினார். கி.பி (பொ.ஆ) 794 முதல் தொடர்ந்து வந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு கியாட்டோ ஜப்பானின் தலைநகரமாகச் செயல்பட்டது. பின்னர் டோக்கியோதலைநகரானது. ஃபுஜிவாரா குடும்பத்தைச் சேர்ந்த அரசர்கள் தங்கள் இறுதிக் காலங்களில் மடங்களுக்குச் சென்று துறவு வாழ்க்கை மேற்கொண்டனர். இருந்தபோதிலும் தங்கள் அதிகாரத்தைத் தொடர்ந்து செயல்படுத்தினர்.
ஃபுஜிவாரா குடும்பத்தினரின் இருநூறு ஆண்டுகால ஆட்சியின்போது பெருவாரியான நிலங்களை சொந்தமாகக் கொண்ட புதிய வர்க்கம் உருவானது. இவர்கள் போர் வீரர்களுமாவர். இவர்கள் டய்ம்யாஸ் (பெரும்பெயர் அல்லது பிரபு) என அழைக்கப்பட்டனர். நாளடைவில் டய்ம்யாஸ்கள் தங்கள் இராணுவ பலத்தால் அதிகாரமிக்கவர்களாக மாறினர். இறுதியில் தாரா,
மினமோட்டா எனும் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போரில் யோரிடோமோ என்பவர் வெற்றி பெற்றார். கி.பி. (பொ.ஆ)1192இல் பேரரசர் இவருக்கு செ-ய்-தாய்சோகன் (பண்பாடற்றவர்களை அடக்கிய மாபெரும் தளபதி) என்னும் பட்டத்தைச் சூட்டினார். இப்பட்டம் பரம்பரை பரம்பரையாக ஆட்சி நடத்தும் உரிமையை உட்பொருளாகக் கொண்டிருந்தது. காலப்போக்கில் சோகன் உண்மையான ஆட்சியாளரானார். இவ்வாறான வழியில் சோகுனேட்டுகளின் ஆட்சி உருவானது.
யோரிடோமோ தனது இராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினர். இதனால் முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது. பேரரசர் ஓர் அலங்காரத் தலைமையாக மட்டுமே இருந்தார். நிலப்பிரபுத்துவ இராணுவத்தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப்பட்டது. ஆசிய வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மற்றும் ஐரோப்பாவை பயமுறுத்திய மங்கோலியரை சோகுனேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது. இருந்தபோதிலும் இவ்வம்சத்தின் சரிவு தொடங்கியது. கி.பி. (பொ.ஆ) -1338இல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது. சோகுனேட்டுகளில் வேறொரு பிரிவைச் சேர்ந்த 'அஷிக்காகா' சோகுனேட்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்களின் ஆட்சி 235 ஆண்டுகள் நீடித்தது. இக்காலகட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது.
இறுதியில் மூவர் ஜப்பானை நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர். அவர்கள் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் அல்லது ஹிடயோஷி எனப்பட்ட விவசாயி, தொகுகவா இய்யாசு என்ற அக்காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரபுஆகியோராவர்.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பான் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது.