அறிமுகம் - இடைக்காலம் | 9th Social Science : History: The Middle Ages
பாடம் 6
இடைக்காலம்
கற்றல் நோக்கங்கள்
❖ தாங், சுங்,
யுவான் ஆகிய அரச வம்ச ஆட்சிக் காலங்களில் சீனப்பேரரசு நிலை பற்றி அறிதல்
❖ ஃபுஜிவாரா குடும்பம் மற்றும் கம்பகாரா சோகுனேட்டின் கீழ் ஜப்பானிய சமூகத்தின் எழுச்சியைப் புரிந்து கொள்ளல்
❖ இஸ்லாம் தோன்றியதன் பின்னணியைக் கண்டறிதல்
❖ அராபிய மற்றும் உதுமானியப் பேரரசுகள் குறித்தும், இஸ்லாம் பரவுவதற்கு அவர்களின் பங்களிப்பு பற்றியும் அறிதல்
❖ இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவத்தின் தன்மைகளை ஆராய்தல்
❖ இடைக்காலத்தில் அரசுக்கும் திருச்சபைக்கும் இடையேயான உறவைப் புரிந்து கொள்ளுதல்
அறிமுகம்
ரோமானியப் பேரரசு கி.பி.
(பொ.ஆ) -476 இல் வீழ்ச்சியடைந்தது. கி.பி. (பொ.ஆ)-1453இல் கான்ஸ்டாண்டிநோபிள் நகரைத் துருக்கியர் கைப்பற்றினர். இவ்விரு முக்கிய நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியை வரலாற்று அறிஞர்கள் இடைக்காலம் என அழைக்கின்றனர். இந்த இடைக்காலமானது தொடக்க இடைக்காலம்,
மைய அல்லது உயர் இடைக்காலம், பின் இடைக்காலம் என மேலும் பகுக்கப்பட்டுள்ளது. தொடக்க இடைக்காலத்தில் (ஏறத்தாழ ஐந்து முதல் பத்தாம் நூற்றாண்டு) கிறித்தவமும் அதைத் தொடர்ந்து இஸ்லாமும் ஐரோப்பியக் கண்டத்தில் தங்களை வலுவான மதங்களாக நிலை நிறுத்தத் தொடங்கின. மைய அல்லது உயர் இடைக்காலத்தில் பிரதேச விரிவாக்கம்,
மக்கள் தொகைப் பெருக்கம், நகரங்களின் வளர்ச்சி, சமயம்சாரா மற்றும் சமயம் சார்ந்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறின.
பைசாண்டியப் பேரரசின் வரலாற்றுக்கு சிறிது காலம் கழித்துத் தொடங்கும் அராபிய நாகரிகத்தின் காலம் ஏறத்தாழ கி.பி.
(பொ.ஆ) 630 முதல் 1300 வரையாகும். சாரசனிக் நாகரிகம் என்றறியப்பட்ட இந்நாகரிகம் ஒரு புதிய மதத்தை மையமாகக் கொண்டு உருவானதாகும். கிறித்தவ ஐரோப்பாவில் அது ஏற்படுத்திய தாக்கம் புரட்சிகரமான சமூக மற்றும் அறிவுலக மாற்றங்களுக்குக் காரணமாயிற்று.
செல்ஜுக் துருக்கியர்கள் மத்திய ஆசியாவைச் சேர்ந்த தார்த்தாரியர் என்னும் நாடோடியினர் ஆவர். அவர்கள் பாரசீகத்தில் ஒரு வலுவான பேரரசை நிறுவினர். இவர்களின் ஆட்சிக்காலத்தில் இலக்கியம், கலை, கட்டடக்கலை ஆகிய துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. இதைப் போலவே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அனடோலியாவிற்குச் (ஆசியாமைனர்) சென்றுசுதந்திரமானபேரரசை நிறுவிய உதுமானிய துருக்கியர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும்.