பருவம் 1 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - நிலப்பரப்பும் பெருங்கடல்களும் | 6th Social Science : Geography : Term 1 Unit 2 : Land and Oceans
அலகு 2
நிலப்பரப்பும் பெருங்கடல்களும்
கற்றலின் நோக்கங்கள்
❖ கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களைப்
பற்றி புரிந்துகொள்ளுதல்.
❖ பல்வேறு வகையான நிலத்தோற்றங்கள் மற்றும்
பெருங்கடல்கள் ஆகியவற்றின் பண்புகளைப் பற்றி கற்றல்.
❖ நிலத் தோற்றங்களின் வகைகளைப் பற்றி
அறிந்து கொள்ளுதல்.
❖ பெருங்கடல்களைப் பற்றியும் அதன் சிறப்புக்
கூறுகளையும் புரிந்து கொள்ளுதல்.
நுழையுமுன்
இப்பாடம்,
புவியில் காணப்படும் நிலப்பரப்பினைப் பற்றியும், பெருங்கடல்களைப் பற்றியும் விளக்குகின்றது.
முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நிலத் தோற்றங்கள் பற்றியும் விரிவாக
எடுத்துரைக்கின்றது.
ஆசிரியர் மிகப் பெரிய அளவிலான உறைகளுடன் வகுப்பறையில் நுழைகிறார்.
ஆசிரியர் கொண்டு வந்த உறையினுள் உள்ளதைப் பற்றி அறிந்து கொள்ள மாணவர்கள் ஆவல் கொண்டனர்.
ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமரச் சொல்லி செய்யவிருக்கும் செயல்பாட்டினை விளக்குகிறார்.
ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு உறையினை வழங்குகிறார். அவ்வுறையினுள் ஏழு புதிர்
துண்டுகள் (jigsaw) மற்றும் அட்டை (chart) வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் புதிர் துண்டுகளை
இடைவெளி இல்லாமல் நெருக்கமாக அட்டையின் மீது பொருத்தி ஒட்டுமாறு கூறுகிறார். பொருத்தியப்
பிறகு அப்படத்தைச் சுற்றியுள்ளப் பகுதிகளுக்கு நீல வண்ணம் கொண்டு வண்ணமிடக் கூறுகிறார்.
இதில் ஒரு குழு, மற்ற குழுக்களைக் காட்டிலும் சரியாகப் பொருத்தி
முதல் இடத்தைப் பிடித்தது. ஆசிரியர் அப்படத்தை பலகையின் மீது ஒட்டுகிறார். மாணவர்களும்
கைத்தட்டிப் பாராட்டினர். "இது என்ன படம்? இது போன்று ஒரு படத்தை ஏற்கனவே நான்
நிலவரைப்படத்தில் பார்த்திருக்கிறேனே!" என்றாள் யாழினி. "சரியாகக் கூறினாய்,
இது தான் பாஞ்சியா, இது பெருங்கண்டம் எனப்படும். இப்பெருங்கண்டத்தைச் சுற்றியுள்ள நீர்பரப்பு
பான்தலாசா ஆகும். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்நிலப்பரப்பு மெதுவாக நகரத்
தொடங்கியது. நாளடைவில் கண்டங்களும், பெருங்கடல்களும் தற்போதுள்ள நிலையை அடைந்தன"
என்று ஆசிரியர் கூறினார்.
"இந்நகர்வு எவ்வாறு நடந்தது ? ' என்று வினவினாள் நிலா.
"இதற்குக் காரணம் புவியினுள் உள்ள வெப்பம் தான்" எனக்
கூறிய ஆசிரியர் மேலும் கண்டங்கள் பெருங்கடல்கள் பற்றி இப்பாடத்தில் அறிந்து கொள்வோம்
என்றார்.
புவியின் மேற்பரப்பு 71 சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது. எஞ்சிய
29 சதவிகிதம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், புவியின் மேற்பரப்பு சீராக காணப்படுவதில்லை.
புவியில் உயர்ந்த மலைகள், ஆழ்கடல்கள் மற்றும் பல்வேறு வகையான நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன.
இந்நிலத்தோற்றங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.