குடிமையியல் - மக்கள் குழுவும் பங்கேற்பும் | 9th Social Science : Civics : Election, Political Parties and Pressure Groups
மக்கள் குழுவும் பங்கேற்பும்
மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் சமூக ரீதியிலான ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை நோக்கி மக்கள் குழுவை திரட்டுவது அவசியமே. சில நேரங்களில் நில நடுக்கம், சுனாமி, வெள்ளப்பெருக்கு மற்றும் பிற இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போது மீட்டி நிவாரணம் போன்ற அவசரப் பணிகளுக்கு உடனடியாக மக்களைத் திரட்ட நேரிடும்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் பெருவாரியாகப் பங்கேற்கும் போதே மக்களாட்சி அமைப்பு வெற்றிகரமாக இயங்க முடியும். அதே சமயத்தில் வரி மற்றும் வருவாய் வசூலிக்கும் முறையிலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு சுத்தம் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் மற்றும் போலியோ சொட்டுமருந்து அளித்தல் போன்ற சிறப்புத் திட்டங்களிலும் ஒவ்வொரு குடிமகனும் சிறிய உள்ளூர் குழுக்களும் பங்கு பெறும் போது மட்டுமே மக்களாட்சி வெற்றி பெற முடியும்.
எனவே, மக்களாட்சி அரசாங்கத்தை விட சிறந்த அரசாங்கம் இல்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சிறந்த சமூகத்தையும் நாட்டையும் உருவாக்க, இந்திய மக்களாகிய நாம் மத்திய மற்றும் மாநில அரசாங்கத்துடன் இணைந்து மனித வாழ்க்கையின் துன்பங்களை ஒழித்திட ஒற்றுமையுடன் போராட வேண்டும்