இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: யசோதர காவியம் | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane
அறம் - அ
கவிதைப் பேழை
யசோதர காவியம்
நுழையும்முன்
படித்து இன்புற மட்டுமன்றி வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்த உதவுவனவும் இலக்கியங்களே! உலகப் பொதுமறையாம் திருக்குறள் தொடங்கி அறம் சார்ந்த தனித்துவ இலக்கியங்கள் தமிழில் உள்ளன. அவ்விலக்கியங்கள் காட்டும் வாழ்க்கைப்பாதை உயர்வானது; அப்பாதையில் பயணித்தால் வாழ்க்கையை வளமாக்கலாம். வாருங்கள் அறத்தேரின் வடம் பிடிப்போம்!
ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.* 1405
சொல்லும் பொருளும்
அறம் - நற்செயல்;
வெகுளி- சினம்;
ஞானம் - அறிவு;
விரதம் – மேற்கொண்ட நன்னெறி.
பாடலின்பொருள்
நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்; நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்கிட வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்கவேண்டும்; ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்; இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால் தாம் கொண்ட நன்னெறியினைக் காக்க வேண்டும்.
இலக்கணக் குறிப்பு
ஆக்குக, போக்குக, நோக்குக, - வியங்கோள் வினைமுற்றுகள்
பகுபத உறுப்பிலக்கணம்
போக்குக = போக்கு+க
போக்கு - பகுதி
க - வியங்கோள் வினைமுற்று விகுதி
நூல் வெளி
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம். இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும். இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை . இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர். யசோதர காவியம், யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது. இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது; பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.