Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | உரைநடை: பெரியாரின் சிந்தனைகள்

இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: பெரியாரின் சிந்தனைகள் | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane

   Posted On :  19.08.2023 09:12 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

உரைநடை: பெரியாரின் சிந்தனைகள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : உரைநடை: பெரியாரின் சிந்தனைகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அறம்

உரைநடை உலகம் 

பெரியாரின் சிந்தனைகள்



நுழையும்முன் 

சமூகம், செம்மாந்து சீர்மையுடன் திகழப் பாகுபாடுகளற்ற மனவுறுதி படைத்த மக்கள் தேவை.அத்தகைய மக்களை உருவாக்கப் பகுத்தறிவு இன்றியமையாதது.  பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்களைத் தம் பகுத்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர்; இருபதாம் நூற்றாண்டில் ஈரோட்டில் தோன்றிப் பகுத்தறிவு, தன்மதிப்பு (சுயமரியாதை) ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர். யார் அவர்?


தந்தை பெரியார்


வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம் என்றெல்லாம் பலவாறு சிறப்பிக்கப்படுபவர் தந்தை பெரியார்; மூடப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்; அடிமையாய் உறங்கிக் கிடந்த சமூகம் விழிப்பதற்குச் சுயமரியாதைப் பூபாளம் இசைத்தவர்; மானமும் அறிவும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழவேண்டும் என்று அரும்பாடுபட்டவர்; தானே முயன்று கற்று, தானாகவே சிந்தித்து அறிவார்ந்த கருத்துகளை வெளியிட்டவர்.


பகுத்தறிவு

'பெரியார்' என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது, அவரின் பகுத்தறிவுக் கொள்கை. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.


முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காகவே ஒரு செயலை அப்படியே பின்பற்றி இன்றும் கடைப்பிடித்தல் கூடாது. அக்காலத்திற்கு ஏற்ற வகையில் அப்படிச் செய்திருப்பார்கள்; இன்று காலம் மாறிவிட்டது. இக்கால வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு நிலையில், நடைமுறைக்கேற்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனே பெரியார் சிந்தித்தார். சமூகம், மொழி, கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அவரின் சிந்தனை புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.

சமூகம்

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் சாதி சமயப் பிரிவுகள் மேலோங்கி இருந்தன. பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகள் இருந்தன. சாதி என்னும் பெயரால் ஒருவரை ஒருவர் இழிவு செய்யும் கொடுமை இருந்தது. இந்த இழிநிலை கண்டு தந்தை பெரியார் கொதித்தெழுந்தார். "சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்" என்றார் அவர்.

சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. அதனால் வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகின்றன. அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தினார்.

மதம்

'மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று மதத்தின் நிலை என்ன? நன்கு சிந்தித்துப் பாருங்கள் ; மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா?' எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை எழுப்பினார்; கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.

கல்வி

சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார். 'கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்' என்றார். 'அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது. தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்' என்று பெரியார் கூறினார்.

சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கல்வி உரிமையானது எனவும் சில பிரிவினர்க்குக் கல்வி கற்க உரிமை இல்லை எனவும் கூறப்பட்ட கருத்துகளைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு புகட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் என்று பெரியார் நம்பினார்.

பெரியார் எதிர்த்தவை...

இந்தித் திணிப்பு

குலக்கல்வித் திட்டம்

தேவதாசி முறை

கள்ளுண்ணல்

குழந்தைத் திருமணம்

மணக்கொடை

மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

மொழி, இலக்கியம்

'ஒரு மொழியின் தேவை என்பது, அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்' என்று கூறினார்.

'மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்' என்று கருதி மொழி, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி குறித்தும் பெரியார் ஆழ்ந்து சிந்தித்தார்.

மதம், கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடைய முடியும்; அத்துடன் அவற்றைப் பயன்படுத்தும் மக்களும் அறிவுடையவராக உயர்வர் என்று பெரியார் கூறினார்.

திருக்குறளில் அறிவியல் கருத்துகளும் தத்துவக்கருத்துகளும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால் அதை மதிப்பு மிக்க நூலாகப் பெரியார் கருதினார். இந்நூலில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன இதை பன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார்.

எழுத்துச் சீர்திருத்தம்

மொழியின் பெருமையும் எழுத்துகளில் மேன்மையும் அவை எனிதில் கற்றுக் கொள்ளடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. எனவே, காலவளர்ச்சிக்கேற்பத் தமிழ் எழுத்துகளைச் சீரமைக்கத் தயங்கக் கூடாது என்று பெரியார் கருதினார். "மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்: அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்றார். அம்மாற்றக்கிற்கான முயற்சியையும் பெரியார் மேற்கொண்டார்.

உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'மன' என்பதனை அல் எனவும் சீரமைக்கார் (ஐயா - அய்யா, ஔளை - அல்வை). அதுபோலவே மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளை கரைப்பதன் வாயிலாகத் தமிழ் எமத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்; அவ்வாறு குறைப்பதால் தமிழ்மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும் எனக் கருதினார்.


இச்சீரமைப்புக்கான மாற்று எழுத்துருக்களையும் (வரி வடிவம்) உருவாக்கினார். கால வளர்ச்சிக்கு இத்தகு மொழிச் சீரமைப்புகள் தேவை என்று கருதினார். பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

பெண்கள் நலம்

அக்காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்டிருந்தனர். எனவே, நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறினார் பெரியார்.

'கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆண்களுக்கு நிகரான உரிமை, பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்; வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும்; பொருளாதாரத்தில் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் இருக்கக்கூடாது; நன்கு கல்வி கற்று, சுய உழைப்பில் பொருளீட்ட வேண்டும். தெளிந்த அறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் திகழ வேண்டும்' என்றார் பெரியார்.

இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது; கைம்பெண்களுக்கு மறுமணம் செய்ய வழிவகை காணவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார். குடும்பத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும்; பெண்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்;

தெரியுமா?

பெரியார் விதைத்த விதைகள்:

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு

பெண்களுக்கான இட ஒதுக்கீடு

பெண்களுக்கான சொத்துரிமை

குடும்ப நலத்திட்டம்

கலப்புத் திருமணம்,

சீர்திருத்தத் திருமணம் ஏற்பு

குடும்பச் சொத்தில் ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும்; குடும்பப் பணிகளில் ஆண்களுக்கென்று தனிப் பணிகள் எதுவுமில்லை. ஆண்களும் குடும்பப் பணிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற கருத்துகளை எடுத்துரைத்தார் பெரியார்.

சிக்கனம்

சிக்கனம் என்னும் அருங்குணத்தைப் பெரியார் பெரிதும் வலியுறுத்தினார். அதற்கேற்பத் தானும் வாழ்ந்து காட்டினார். பொருளாதாரத் தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார் பெரியார். விழாக்களாலும் சடங்குகளாலும் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண்செலவும் ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாக்களையும் தவிர்க்கவேண்டும் என்றார்  அவர்; திருமணம் போன்ற விழாக்களைப் பகட்டின்றி மிக எளிமையாகவும் சீர்திருத்த முறையிலும் நடத்த வேண்டும் என்றார். 

தெரியுமா?

1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் 'பெரியார்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

27. 06. 1970 இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரைத் 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

சிந்தனைச் சிறப்புகள்

பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை; அறிவியல் அடிப்படையில் அமைந்தவை; மனிதநேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை . மேலும், தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்தார்; சமுதாயம் மூடப்பழக்கங்களிலிருந்து மீண்டெழ அரும்பாடுபட்டார்; அதற்காகப் பலமுறை சிறை சென்றார்; பலரின் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். இறுதி மூச்சுவரை சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தார்.

தெரிந்து தெளிவோம்

பெரியார் இயக்கமும் இதழ்களும்

தோற்றுவித்த இயக்கம் - சுயமரியாதை இயக்கம்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு -1925

நடத்திய இதழ்கள் - குடியரசு, விடுதலை, உண்மை , ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

'பெரியாரின் சிந்தனைகள் அறிவுலகின் திறவு கோல்; பகுத்தறிவுப் பாதைக்கு வழிகாட்டி; மனித நேயத்தின் அழைப்பு மணி; ஆதிக்கசக்திகளுக்கு எச்சரிக்கை ஒலி; சமூகச் சீர்கேடுகளைக் களைவதற்கு மாமருந்து' என்று அறிஞர்கள் மதிப்பிடுவர்.


Tags : Chapter 8 | 9th Tamil இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 8 : Enthalai kadane : Prose: Periyarin sindhanaigal Chapter 8 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : உரைநடை: பெரியாரின் சிந்தனைகள் - இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே