உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene
செயல்பாடு 3
நோக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள உணவில் ஸ்டார்ச் வடிவில் கார்போஹைட்ரேட் உள்ளதாஎன சோதனை மூலம் அறிதல்.
உனக்கு என்ன தேவை?
வேக வைத்த உருளைக் கிழங்கு, சொட்டுக் குழாய், நீர்த்த அயோடின் கரைசல்.
எப்படி செய்வாய்?
வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்துக் கொள்ளவும். மசித்த உருளைக் கிழங்கின் மீது இரண்டு அல்லது மூன்று துளிகள் நீர்த்த அயோடின் கரைசலைச் சேர்க்கவும்.
நீ என்ன பார்க்கிறாய்?
உருளைக் கிழங்கு கருநீல நிறமாக மாறுகிறது.
நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?
அயோடின், ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து ஸ்டார்ச் அயோடின் கூட்டுப் பொருளாக, அதாவது நீலம் கலந்த கருப்பு நிறமாக மாறுகிறது, இந்த கருநீல நிற உருவாக்கம் உணவில் ஸ்டார்ச் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.
செயல்பாடு 4
நோக்கம்
கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருளில் கொழுப்பு உள்ளதா என சோதனை மூலம் அறிதல்.
உனக்கு என்ன தேவை?
தேங்காய் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் மற்றும் ஏதாவது ஒரு காகிதம்.
எப்படிச் செய்வாய்?
தாளின் மேல் சிலதுளி தேங்காய் எண்ணெய்யை விடவும். பின்பு உனது விரலால் மெதுவாகத் தேய்க்கவும்.
நிலக்கடலையாக இருந்தால், அதை உடைத்து காகிதத்தின் மேல் தேய்க்கவும்.
என்ன பார்க்கிறாய்?
அந்தக் காகிதம் பிசுபிசுப்பாகவும், மறுபுறம் மங்கலாகத் தெரிவதாகவும் மாறுகிறது.
நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?
கொடுக்கப்பட்டுள்ள உணவு மாதிரி, கொழுப்பைக் கொண்டுள்ளது.
செயல்பாடு 5
நோக்கம்
கொடுக்கப்பட்ட உணவில் புரதம் உள்ளதா என்று சோதித்து அறிதல்.
உனக்கு என்ன தேவை?
முட்டையின் வெள்ளைக் கரு, தாமிர சல்பேட் கரைசல், சோடியம் ஹைட்ராக்சைடு, சோதனைக் குழாய், புன்சன் அடுப்பு.
எப்படி செய்வது?
உணவு மாதிரியை சிறிதளவு (முட்டையின் வெள்ளைக் கரு) எடுத்து சோதனைக் குழாயில் போடவும்.
சோதனைக் குழாயில் சிறிதளவு நீரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்ததாக சோதனைக் குழாயை சுமார் ஒரு நிமிடம் சூடுபடுத்தவும்.
சோதனைக் குழாய் குளிர்ந்தவுடன் இரண்டு துளிகள் தாமிர சல்பேட் கரைசலையும், சோடியம் ஹைட்ராக்சைடையும் சேர்க்கவும்.
நீ என்ன காண்கின்றாய்?
கொடுக்கப்பட்ட உணவு மாதிரி ஊதா நிறமாக மாறுகிறது.
நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?
கொடுக்கப்பட்ட உணவு மாதிரி ஊதா நிறமாக மாறுவது, அதில் புரதம் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.
நெல்லிக்கனிகளில் ஆரஞ்சுப் பழங்களைவிட 20 மடங்கு, அதிக வைட்டமின் C காணப்படுகிறது.
சற்று யோசியுங்கள்
ஒரு பள்ளியில் மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்தனர். ஒருசில மாணவர்களுக்கு உடல் நலக்குறைபாடு இருந்தது.
பிரியாவுக்கு பல் ஈறுகளில் இரத்தக் கசிவு இருந்தது.
ராஜாவால் குறைந்த ஒளியில் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
அருணின் கால்கள் வளைந்திருந்தன. இவற்றிற்கு என்ன காரணம் என்று உன்னால் யூகிக்க முடிகிறதா?
உண்மைக் கோப்பு
சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் களிம்புகள் (Sun Screen Lotion) தோலின் வைட்டமின் D உற்பத்தியை 95% குறைக்கிறது. எனவே, வைட்டமின் D குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.
செயல்பாடு 6
உங்கள் உணவை சத்துள்ளதாக மாற்றுங்கள்.
உனக்கு என்ன தேவை?
பாசிப்பயிறு, நீர், மெல்லிய வடிகட்டும் துணி.
எப்படி செய்வாய்?
பாசிப்பயிரை இரவு முழுவதும் நீரில் ஊரவைக்கவும்.
நீரை வடிகட்டி பாசிப்பயிரை எடுக்கவும். ஈரமான, லேசான துணியில் பாசிப்பயிரை வைத்துக் கட்டவும்.
ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அப்படியே வைக்கவும்.
துணி காயும் போது தண்ணீர் தெளிக்கவும்.
நீ என்ன பார்க்கிறாய்?
பாசிப் பயிறிலிருந்து வெள்ளைநிற முளைக் குருத்துகள் வருவதைப் பார்க்கலாம்.
நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?
முளைகட்டிய பாசிப்பயிரில் குறைந்த கலோரி உள்ளது. இதில் நார்ச்சத்தும், வைட்டமின் B யும் உள்ளன. இதில் அதிக அளவு வைட்டமின் C மற்றும் வைட்டமின் K ஆகியவை உள்ளன.
உலகளவில் 80% முருங்கைக் கீரை உற்பத்தி இந்தியாவில்தான் உள்ளது. முருங்கைக் கீரையை சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன.
உண்மைக் கோப்பு
முருங்கைக் கீரையில்:
வைட்டமின் A
வைட்டமின் C
பொட்டாசியம்
கால்சியம்
இரும்புச் சத்து மற்றும்
புரதம்
ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் (Antioxidants) உள்ளது.
செயல்பாடு 7
12 வயது நிரம்பிய சிறுவன்/சிறுமி ஒருவருக்கு சரிவிகித உணவு அளிக்க ஒரு உணவு வரைபட அட்டை தயாரிக்கவும். அதில் விலைகள் குறைந்த மற்றும் உங்கள் பகுதியில் கிடைக்கக்கூடிய எளிமையான உணவு வகைகள் இடம் பெற வேண்டும்.
சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 14.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வகையில் இந்தியா, சீனாவிற்கு அடுத்ததாக, அதிக எண்ணிக்கையில் உடல் பருமன் உடையவர்களைக் கொண்ட நாடுகளுன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
செயல்பாடு 8
உனக்கு அருகாமையில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்திற்குச் சென்று, அதைப் பார்வையிட்டு ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கும், 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கும் கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டறிக.
செயல்பாடு 9
ஒரு நாள் ரகீம் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மூன்று முறை வாந்தி எடுத்தான். அதனால் அவன் சோர்வாகவும், நீர்ச்சத்து இழந்தும் காணப்பட்டான். செவிலியராகப் பணிபுரியும் ரகீமின் தாயார் ஒரு கரைசலைத் தயார் செய்து ரகீமைப் பருகச் சொன்னார். சிறிது நேரத்திற்குப் பின்னர் ரகீம் நன்றாக இருப்பதாக உணர்ந்து, தனது தாயாரிடம் என்ன கரைசல் எனக்குத் தந்தீர்கள் எனக் கேட்டான். அதற்கு அவர் வாய்வழி நீரேற்றக் கரைசல் (Oral Rehydration Solution - ORS) என்றார். ORS என்றால் என்னவென்று பார்ப்போமா?
வாந்தி எடுத்தாலோ அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலோ நம் உடலிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு உப்பின்சமநிலை சீரற்றுப் போகிறது. அதிக நீர் வெளியேறுவது (Dehydration), தீவிர உடல் பிரச்சினைகளை உருவாக்கும். ORS கரைசலை அடிக்கடி பருகுவதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம்.
❖ ஒரு லிட்டர் கொதிநீரை எடுத்து அதனைக் குளிர வைக்கவும்.
❖ அந்நீருடன் அரை தேக்கரண்டி உப்பும், ஆறு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்க்கவும்.
❖ தேவைக்கேற்ற சிறிதளவு எலுமிச்சைச் சாறைக் கலந்து கொள்ளலாம். கரைசலினை நன்கு கலக்கியபின் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர் சத்து இழப்பு ஏற்ப்பட்டவர்களுக்கு வழங்கலாம்.