நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பூஞ்சை | 8th Science : Chapter 16 : Microorganisms
பூஞ்சை
பூஞ்சைகள் யூகேரியோட்டிக் வகையைச் சேர்ந்தவை. அவற்றில் பச்சையம்
காணப்படுவதில்லை. இவை ஒளியற்ற சூழலில் வளர்கின்றன. பூஞ்சைகள் ஒரு செல் (எ.கா. ஈஸ்ட்)
அல்லது பல செல்களால் (எ.கா. பெனிசிலியம்) ஆனவை. இவை அனைத்து வாழிடங்களிலும் காணப்படுகின்றன.
வகைப்பாட்டில் இவை பூஞ்சைகள் உலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பூஞ்சைகளைப் பற்றிய பாடப்பிரிவு
'மைக்காலஜி' எனப்படும். அனைத்து பூஞ்சைகளும் நுண்ணியவை அல்ல (எ.கா. காளான்). பூஞ்சைகளில்
சுமாராக 70,000 சிற்றினங்கள் உள்ளன.
நாம் இப்பகுதியில் ஒரு செல் பூஞ்சையான ஈஸ்ட் பற்றி மட்டும் படிக்க
இருக்கிறோம். பல செல் பூஞ்சைகள் பற்றி அடுத்த பாடத்தில் விரிவாகக் காணலாம்.
1. பூஞ்சைகளின்
செல் அமைப்பு
ஈஸ்ட்கள் வளிமண்டலத்தில் தன்னிச்சையாகக் காணப்படுகின்றன. ஈஸ்ட்கள்
சர்க்கரை உள்ள அனைத்து ஊடகங்களிலும் வளர்கின்றன. இவற்றின் செல்கள் முட்டை வடிவமுடையவை.
அவை செல் சுவர் மற்றும் உட்கருவைப் பெற்றுள்ளன. இவற்றின் சைட்டோபிளாசம் துகள் போன்றது.
அதனுள் வாக்குவோல்கள், செல் நுண்ணுறுப்புகள், கிளைக்கோஜன் எனப்படும் எண்ணெய்த் துளிகள்
ஆகியவை காணப்படுகின்றன. சைமேஸ் எனும் நொதியின் உதவியினால் ஈஸ்ட்கள் நொதித்தலில் ஈடுபடுகின்றன.
இவை காற்றில்லா சூழலில் சுவாசிக்கின்றன. மொட்டு விடுதல் இனப்பெருக்கம் செய்கின்றன.