நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நுண்ணுயிரிகளின் பயன்பாடுகள் | 8th Science : Chapter 16 : Microorganisms
நுண்ணுயிரிகளின் பயன்பாடுகள்
மருத்துவம், விவசாயம், தொழிற்சாலைபோன்ற பல்வேறு துறைகளில் நுண்ணுயிரிகள்
பயன்படுகின்றன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. மருத்துவம்
நாம் நுண்ணுயிரிகளிலிருந்து எதிர் உயிர்க்கொல்லிகள் (ஆன்டிபயாட்டிக்)
மற்றும் தடுப்பூசிகளைப் பெறுகிறோம்.
எதிர்உயிர்க்கொல்லிகள்
(ஆன்டிபயாட்டிக்)
'ஆன்டி என்ற வார்த்தை 'எதிராக' என்று பொருள்படுகிறது. எதிர்
உயிர்க்கொல்லி என்பவை பிற உயிரினங்களுக்கு நச்சாக உள்ள உயிரினங்களால் உருவாக்கப்படும்
பொருள்களாகும். முதன் முதலில் எதிர் உயிர்க்கொல்லி மருந்தான பெனிசிலின் சர். அலெக்ஸாண்டர்
பிளம்மிங் என்பவரால் 1928 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
எதிர் உயிர்க்கொல்லியான இந்த பெனிசிலின், கிரைசோஜீனம் என்ற பூஞ்சையிலிருந்து
பெறப்பட்டது. இது டெட்டனஸ், டிப்தீரியா போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
ஸ்ட்ரெப்டோமைசின் எனும் எதிர் உயிர்க்கொல்லி ஸ்ரெப்டோமைசிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து
பெறப்படுகிறது. இது பல்வேறு வகையான பாக்டீரியத் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
எ.கா. பிளேக்.
தடுப்பூசிகள்
தடுப்பூசிகள் இறந்து போன பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து
தயாரிக்கப்படுகின்றன . எட்வர்ட் ஜென்னர், முதன் முதலில் பெரியம்மைக்கான தடுப்பூசியினைக்
கண்டறிந்தார். வாக்சினேஷன் என்ற சொல் இவரால் உருவாக்கப்பட்டது. நோயாளியின் உடலில் இத்தடுப்பூசியைச்
செலுத்தும்போது, உடலானது நோய் எதிர்ப்புப் பொருளை (ஆன்டிபாடிகள்)உற்பத்தி செய்கின்றது.
அது நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போரிடுகின்றது. இந்த நோய் எதிர்ப்புப் பொருள்கள்
உடலிலேயே தங்கியிருந்து, எதிர்காலத்தில் நோய்க்கிருமிகளின் தாக்குதலிலிருந்து உடலைப்
பாதுகாக்கின்றன. எனவே வாக்சினேஷன் என்பது நோய்த்தடுப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
எ.கா. தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா ஆகிய நோய்களுக்கு MMN தடுப்பூசியும் காசநோய்க்கு
BCG (Bacille Calmette Guerin) தடுப்பூசியும் வழங்கப்படுகின்றன
2. விவசாயம்
இயற்கை உரம்
நுண்ணுயிரிகள் கழிவுகளைச் சிதைவடையச் செய்வதால் அவை சிதைப்பவைகள்
என்று அழைக்கப்படுகின்றன. இந்நிகழ்வின் போது, நைட்ரேட்டுகள் மற்றும் கனிம ஊட்டப் பொருள்கள்
மட்கும் கழிவுகளிலிருந்து வெளியேறி, மண்ணை வளமுடையதாக்குகின்றன. இந்த உரம் இயற்கை உரம்
என்று அழைக்கப்படுகிறது.
நைட்ரஜன்
நிலைநிறுத்தம்
பயறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம்
பாக்டீரியங்கள், வளிமண்டல நைட்ரஜனை தாவரங்களின் மிகவும் அத்தியாவசியமான நைட்ரேட்டுகளாக
மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளப்படுத்துகின்றன. மண்ணில் தனித்து வாழும் பாக்டீரியங்களான,
சயனோ பாக்டீரியா நாஸ்டாக் போன்றவையும் உயிரியல் முறையில் நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன.
உயிரி-கட்டுப்பாட்டுக்
காரணிகள் (முகவர்கள்)
தீங்குயிரிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க நுண்ணுயிரிகள்
உதவுகின்றன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
. • பேசில்லஸ் துரின்ஞியன்ஸிஸ் (Bt பஞ்சு) பூச்சிகளைக்
கட்டுப்படுத்துகிறது.
• டிரைக்கோடெர்மா (பூஞ்சை) வேர்களுக்குப் பாதுகாப்பளித்து, தாவர
நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது.
• பாக்குலோ வைரஸ்கள் (வைரஸ்) பூச்சிகள் மற்றும் கணுக்காலிகளைத்
தாக்குகின்றன.
3. தொழிற்சாலை
கழிவுநீர் சுத்திகரிப்பு
கழிவுநீர் சுத்திகரிப்பின் இரண்டாம் நிலையில், காற்று சுவாச
நுண்ணுயிரிகள் முதன்மைக் கழிவுகளின் மீது வளரச் செய்யப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள்
கழிவுகளிலுள்ள பெரும் பகுதி கரிமப் பொருள்களை உட்கொள்கின்றன எ.கா. நைட்ரோபாக்டர் சிற்றினம்.
காற்றில்லா சூழ்நிலையில் நடைபெறும் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு மெத்தனோ பாக்டீரியங்கள்
பயன்படுத்தப்படுகின்றன.
உயிரி - வாயு உற்பத்தி
மனிதன் மற்றும் விலங்குகளின் மலக் கழிவுகள் மற்றும் தாவரங்களின்
கழிவுகள் ஆகியவை காற்றில்லா சுவாச பாக்டீரியங்களினால் சிதைக்கப்படும்போது மீத்தேனுடன்
(உயிரி - வாயு) சேர்ந்து கார்பன் டைஆக்சைடும், ஹைட்ரஜனும் உற்பத்தியாகின்றன. இந்த பாக்டீரியங்கள்
மெத்தனோஜென்கள் என்றழைக்கப்படுகின்றன.
ஆல்க ஹால் மற்றும் திராட்சை ரசம் தயாரிப்பு
ஆல்கஹால் பானங்கள் ஈஸ்ட்டின் உதவியினால் நொதித்தல் முறையில்
தயாரிக்கப்படுகின்றன. திராட்சையிலுள்ள சர்க்கரைகள் ஈஸ்ட்டினால் நொதிக்க வைக்கப்படுகின்றன.
அரிசி மற்றும் பார்லி தானியங்களிலுள்ள சர்க்கரையை நொதிக்க வைப்பதன்மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.
மிருதுவாக்குதல் மற்றும் தோல் பதனிடுதலில் நுண்ணுயிரிகள்
ஆளித் தாவரங்கள் கட்டுகளாகக் கட்டப்பட்டு நீரினுள் வைக்கப்படுகின்றன.
தண்டுப் பகுதியில் உள்ள திசுக்களின் மீது பாக்டீரியங்கள் செயல்பட்டு, அவற்றின் வலிமையான
ஆதரவு நார்களைத் தளர்த்துகின்றன. இது மிருதுவாக்குதல் எனப்படும். லினென் நூல் இழைகள்
இந்த நார்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. எ.கா. சூடோமோனாஸ் ஏருஜினோஸா
தோல் பதனிடும் தொழிற்சாலையில் பாக்டீரியங்கள் விலங்குகளின் தோலின்
மீது செயல்பட்டு அவற்றை மென்மையாக்குகின்றன. வளைந்துகொடுக்கும் அதனால், தோல் தன்மையுடையதாகிறது.
4. அன்றாட
வாழ்வில் பயன்பாடு
ரொட்டி தயாரிப்பு
அடுமனைகளில் ரொட்டி மற்றும் கேக் வகைகள் தயாரிக்க ஈஸ்ட் பயன்படுகிறது.
ரொட்டி மாவை மேலே கழும்பர் செய்யும் கார்பன் டை ஆக்சைடை உருவாக்குவதற்காக இவை மாவுடன்
சேர்க்கப்படுகின்றன. கார்பன் டைஆக்சைடினால் ரொட்டி மற்றும் கேக்குகள் மிருதுத் தன்மையடைகின்றன.
புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் குளோரெல்லாவானது அதிகம் நிறைந்த (பசும் ஆல்கா) மாவுடன்
சேர்க்கப்படும்போது ரொட்டியின் சத்து மேலும் அதிகரிக்கின்றது.
தயிர் மற்றும் பன்னீர் தயாரிப்பு
லேக்டோ பேசில்லஸ் பாக்டீரியத்தினால் பாலில் உள்ள லாக்டோஸ் லாக்டிக்
அமிலமாக மாறுகிறது. அதனால் பால் கெட்டியாகிறது (தயிர்). இது தயிர்க்கு புளிப்புச் சுவையைத
தருகிறது. தயிரைப் பதப்படுத்தும்போது பன்னீர் கிடைக்கிறது.
மனிதனின்
குடலில்
• மனிதனின் குடலில் வாழும் லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ் எனும்
பாக்டீரியா உணவு செரிமானத்தில் உதவுகிறது. மேலும், தீங்கு தரும் நோய்க் கிருமிகளுக்கு
எதிராகவும் செயல்படுகிறது.
• மனிதனின் குடலில் வாழும் எ.கோலை பாக்டீரியம் வைட்டமின் K மற்றும்
வைட்டமின் Bகூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் உதவுகிறது.
5. உணவு
தயாரிப்பில் நுண்ணுயிரிகள்
உணவு தயாரிப்பில், ஈஸ்ட், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்ற
பொதுவான நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணுயிரிகளாவ் நடையோரம் நொதித்தல்
நிகழ்வின்மூலம் கரிம அமிலங்கள், ஆல்கஹால் மற்றும் எஸ்டர்கள் உருவாகின்றன. இவை உணவுப்
பொருள்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும், தனித்துவம் வாய்ந்த, புதியரக உணவுப் பொருள்களை
உற்பத்தி செய்யவும் பயன்படுகின்றன.
அ. உணவு பதப்படுத்துதல்
உணவுப் பொருள்களைப் பதப்படுத்துவதற்கு இரண்டு வகையான தொழில்நுட்பங்கள்
பின்பற்றப்படுகின்றன. அவையாவன:
1. பாரம்பரிய நுட்பங்கள்
2. நவீன நுட்பங்கள்
1. பாரம்பரிய
நுட்பங்கள்
நொதித்தல், உறைய வைத்தல், கொதிக்க வைத்தல் மற்றும் இனிப்பிடுதல்
ஆகியவை உணவு பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய முறைகளாகும்.
நொதித்தல்
ஸ்டார்ச்மற்றும்சர்க்கரையை நுண்ணுயிரிகளின் உதவியால் ஆல்கஹாலாக
மாற்றுவது நொதித்தல் எனப்படும். இது உணவை மேலும் சத்துமிக்கதாகவும், சுவையுடையதாகவும்
மாற்றுகிறது.
ஊற வைத்தல்
நுண்ணுயிர்க்கொல்லிகள் உள்ள திரவத்தில் உணவைப் பராமரிக்கும்
முறை ஊற வைத்தல் எனப்படும். இது இரண்டு வகைப்படும். அவை: வேதியியல் முறை மற்றும் நொதித்தல்
முறை.
வேதியியல் முறையில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும்
திரவத்தில் வைத்து உணவுப் பொருள்கள் பராமரிக்கப்படுகின்றன. எ.கா. வினிகர், ஆல்கஹால்,
தாவர எண்ணெய் (ஊறை வைக்கும் காரணிகள்).
நொதித்தல் முறையில் ஒரு குறிப்பிட்ட வகை திரவத்தில் உள்ள பாக்டீரியங்கள்
உணவைப் பாதுகாக்கும் கரிம அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. அந்த அமிலங்கள் லாக்டோபேசில்லஸ்
பாக்டீரியா மூலம் லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறன்றன.
கொதிக்க வைத்தல்
திரவ நிலையிலுள்ள உணவுப் பொருள்களை கொதிக்க வைப்பதன் மூலம் அவற்றிலுள்ள
நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. எ.கா. பால், நீர்.
இனிப்பிடுதல்
ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம் போன்ற பழங்கள் சர்க்கரையைப்
பயன்படுத்தி தயாரிக்கப்படும் கெட்டியான திரவத்தில் (Syrup) பதப்படுத்தப்படுகின்றன அல்லது
படிகநிலையிலுள்ள சர்க்கரையை பழங்களுடன் சேர்ப்பதன்மூலம் அவை உலர்ந்த நிலையில் பாதுகாக்கப்படுகின்றன.
2. நவீன
நுட்பங்கள்
பதப்படுத்துதல் (Pasteurization)
இது திரவ நிலையிலுள்ள உணவுகளைப் பாதுகாக்கும் முறையாகும். இம்முறையானது
லூயிஸ் பாஸ்டர் என்பவரால் 1862 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இம்முறையில் பால் பதப்படுத்தப்படுகிறது.
பாலில் உள்ள பாக்டீரியாக்களைக் கொல்வதற்காக பால் 70°C. வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்டு,
பாக்டீரியாக்கள் மீண்டும் வளராமல் இருக்க 10°C வெப்பநிலைக்கு குளிரவைக்கப்படுகின்றன.
பின்பு, நுண்ணுயிர்கள் நீக்கம் செய்யப்பட்ட பாட்டில்களில் பால் அடைக்கப்பட்டு குளிர்ச்சியான
இடங்களில் சேமிக்கப்படுகிறது.
ஆ. உணவு
தயாரிப்பு
புரோபயாட்டிக்குகள்
தயிர் மற்றும் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிற பால் பொருள்களில்
பயன்படுத்தப்படும் கூடுதல் உயிருள்ள உணவுப் பொருள்கள் புரோபயாட்டிக்குகள் ஆகும்.
எ.கா. லாக்டோபேசில்லஸ்
அசிட்டோஃபிலஸ் மற்றும் பைபிடோபாக்டீரியம் பைபிடம். இந்த
பாக்டீரியங்கள் குடல்பகுதியிலுள்ள நன்மை செய்யும் பலவகையான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை
ஊக்குவித்து பின்வரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
• குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தினைக் குறைக்கின்றன.
• கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைக் குறைக்கின்றன.
• நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பன்மூலம் வயிற்றுப் போக்கு நோய்களைத்
தடுக்கின்றன.