மனித உறுப்பு மண்டலங்கள் | பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems
செயல்பாடு 1: அமைதியாக அமர்ந்து உங்களின் உடல் அசைவுகளை கவனிக்கவும். உங்களது இமைகளை நொடிக்கு, நொடி இமைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் சுவாசத்தின் போது நிகழும் உடல் அசைவுகளைக் கவனியுங்கள் அந்த அசைவுகளை உங்கள் குறிப்பேட்டில் எழுதுங்கள். நம் உடலில் உள்ள சில பகுதிகள் எளிதில் அசையும் திறன் கொண்டவை, சில உறுப்புகள் பல திசைகளில் அசையும் தன்மை கொண்டவை. சில உறுப்புகள் ஒரே ஒரு திசையில் மட்டும் அசையக்கூடியவை. சில உறுப்புக்களை எல்லாத் திசைகளிலும் அசைக்க முடியாது. அது ஏன்?
செயல்பாடு 2: நமது உடலில் எலும்புகள் இணையும் இடத்திலேயே அசைவுகள் ஏற்படுகிறது என்பதைக் காண்பித்தல்
தேவையான உபகரணங்கள் : மர அளவு கோல் மற்றும் நூல்
செயல்முறை : ஒரு மர அளவுகோலை எடுத்து உங்களுடைய மேற்கையினையும், முன்னங்கையினையும் சேர்த்துக் கட்டும்படி உங்கள் நண்பரிடம் கூறுங்கள். (படத்தில் காட்டியபடி) மர அளவுகோல் உங்களின் முன்னங்கையின் மத்தியில் இருக்கட்டும். இப்பொழுது நீங்கள் எவ்வளவு முறை முயன்றாலும் உங்களால் உங்களுடைய முழங்கையினை மடக்க இயலாது.
முடிவு : ஒரு தனி எலும்பு வளையாது, பல்வேறு எலும்புகள் முழங்கையில் இணைந்து கையை மடக்க உதவுகின்றன.
1. நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறியதுநமது உள்காதில் உள்ள அங்கவடி (stapes) எலும்பு ஆகும். இது 2.8 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது (சராசரி நீளம்). நமது உடலில் நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும்.
2. குழந்தைகள் பிறக்கும் பொழுது 300க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன. அவர்கள் வளரும் பொழுது சில எலும்புகள் இணைந்து ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆகையால் முதிர்ச்சியடைந்த மனிதனின் எலும்புக் கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.
செயல்பாடு 3: உங்களது முன்னங்கையை மெதுவாக மேலும் கீழும் அசையுங்கள். உங்கள் கையில் உள்ள இருதலைத் தசை மற்றும் முத்தலைத் தசை சுருங்கி விரிவதை உணருங்கள். இவற்றில் கையை மடக்கும்போது முன்புறம் உள்ள இருதலைத் தசைகள் சுருங்கி தடிமனாகிறது. பின்புறத்தில் உள்ள முத்தலைத் தசைகள் தளர்வு கொண்டு, நீண்டு மெல்லியதாகிறது. அதே நேரத்தில் மேற்புறத்தில் உள்ள இருதலைத் தசைகள் தடிமனாவதை நீங்கள் உணரலாம்.
கையினை நீட்டும் போது மேல்புறம் உள்ள இருதலைத் தசைகள் தளர்வடைவதையும் பின்புறம் உள்ள முத்தலைத் தசைகள் சுருங்குவதையும் உணரலாம்.
செயல்பாடு 5:
சுவாசிக்கும்போது வெளியேற்றப்படும் காற்றில் கார்பன் - டை - ஆக்சைடு (கரியமில வாயு) அதிகமாக உள்ளது என்பதை நிருபித்தல்.
தேவையான பொருள்கள் : மூடியுடன் கூடிய இரண்டு கண்ணாடி குவளைகள், உறிஞ்சி (straw) மற்றும் சுண்ணாம்பு நீர்.
செய்முறை: இரண்டு குவளைகளிலும் சுண்ணாம்பு நீரை ஊற்றி, மூடி கொண்டு மூடவும். முதல் குவளையை அப்படியே வைக்கவும், இரண்டாவது குவளையின் மூடியில் துளையிடவும் உறிஞ்சியைச் செருகி, பின்னர் அதனுள்ளே காற்றை ஊதிவிடவும்.
கண்டறிதல்: இரண்டாவது குவளையில் உள்ள சுண்ணாம்பு நீர் பால் போன்று மாறியுள்ளது. கரியமில வாயு மட்டுமே சுண்ணாம்பு நீரைப் பாலாக மாற்றும் தன்மையுடையது.
முடிவு: சுவாசிக்கும் போது வெளியேற்றப்பட்ட காற்றில் கார்பன்- டை- ஆக்சைடு அதிகமாக உள்ளது என அறிய முடிகிறது.
மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய 300 மில்லியன் நுண் காற்றுப்பைகள் உள்ளன. கொட்டாவி விடுதல் மூலம் நாம் அதிக அளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி அதிக அளவு வெளியிடுகிறோம். கார்பன்-டை-ஆக்சைடு
செயல்பாடு 6:
உங்கள் வலது கையில் உள்ள ஆள்காட்டி மற்றும் நடு விரலையும் உங்கள் இடது கை மணிக் கட்டின் உள்பக்கம் வைத்துக் கொள்ளவும். உங்களால் துடிப்பின் அசைவை உணர முடிகிறதா? ஏன் அவ்வாறு துடிக்கிறது? இந்தத் துடிப்பு நாடித் துடிப்பு எனப்படும். அது தமனியில் செல்லும் இரத்த ஓட்டத்தினால் ஏற்படுகிறது.
ஒரு நிமிடத்தில் எத்தனை நாடித்துடிப்புகள் ஏற்படுகிறது என்று எண்ணமுடிகிறதா? அதன் எண்ணிக்கையே நாடித் துடிப்பு விகிதம் எனப்படும். சாதாரணமாக ஓய்வு நிலையில் உள்ள ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்தில் 72 இல் இருந்து 80 வரை இருக்கும். உங்கள் உடலில் எங்கு நாடித்துடிப்பை உணர்கிறீர்களோ, அதைக் கண்டறியவும். உங்களுடைய நாடித் துடிப்பை பதிவு செய்து உங்கள் வகுப்புத் தோழர்களின் நாடித் துடிப்பையும் பதிவு செய்து அதை ஒப்பிடுக.
இரத்த தானம்
மருத்துவமனைககளில் நோயாளிகளின் தேவைக்காக இரத்தம் தற்காலிகமாக இரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகின்றது. 18 வயதுக்கு மேல், ஆரோக்கியமான ஒவ்வொருவரும் இரத்ததானம் செய்யலாம். அதன் மூலம் அவசரகால விபத்துக் காலங்களிலும், அறுவை சிகிச்சையின் போதும், இரத்தம் தேவைபடுபவர்களுக்கு உரிய காலத்தில் இரத்தம் கொடுக்கப்படுகிறது. இரத்ததானம் இவர்களின் உயிர்காக்க உதவுகிறது.