மனித உறுப்பு மண்டலங்கள் | பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - உணர் உறுப்புகள் | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems
உணர் உறுப்புகள்
உணர் உறுப்புகள் வெளி உலகின் சாளரங்கள் ஆகும். நமது உடலில் ஐந்து
உணர் உறுப்புகள் உள்ளன. அவை கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகும். உணர்
உறுப்புகள் நமது சுற்றுப்புறத்தை நாம் தெரிந்து கொள்ளவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
உதவுகின்றன. உணர் உறுப்புகளால் மட்டுமே நாம் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல்
மற்றும் உணர்தல் போன்ற செயல்களைச் செய்ய முடிகிறது.
கண்கள்
கண்கள் மூலம் நம்மைச் சுற்றி இருக்கும் பொருள்களை நாம் பார்க்க
முடிகிறது. அதன் நிறம், வடிவம், அளவு மற்றும் அது அருகில் உள்ளதா அல்லது தொலைவில் உள்ளதா,
அது நகர்கின்றதா, இல்லை நிலையாக உள்ளதா என்பது பற்றிக் காணமுடிகிறது. கண் இமைகள், மற்றும்
கண் புருவங்கள் கண்ணில் தூசியும், அழுக்கும் படியாமல் கண்களைப் பாதுகாக்கின்றன. கண்
மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி (பியூப்பில்).
செவிகள்
செவிகள் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு ஒலிகளைக் கேட்பதற்கு உதவுகின்றன.
அவை ஒலி மிகுந்தவையா, மென்மையானவையா, மகிழ்ச்சி தரும் ஒலியா, விரும்பத்தகாத ஒலியா அல்லது
மந்தமான ஒலியா என்று வேறுபடுத்தவும் முடிகிறது. மேலும் செவிகள் நாம் நடக்கும் போதும்,
ஓடும் போதும், மலையில் ஏறும் போதும் நமது உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
செவியானது புறச்செவி, நடுச்செவி மற்றும் உட்செவி போன்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
மனிதனின் புறச் செவியில் உள்ள மடல் புறச் செவி மடல் (Pinna) என்றழைக்கப்படுகிறது.
தோல்
உடல் முழுவதுமாக மூடியுள்ள, மிகப் பெரிய உணர் உறுப்பு தோல் ஆகும்.
நம்மைச் சுற்றியுள்ள பொருள்களை நமது தோல் தொடும்போது அப்பொருள் வெப்பமாக உள்ளதா அல்லது
குளிர்ச்சியாக உள்ளதா, வழவழப்பாக உள்ளதா அல்லது சொரசொரப்பாக உள்ளதா, அப்பொருள் காய்ந்துள்ளதா
அல்லது ஈரமாக உள்ளதா, கடினமாக உள்ளதா அல்லது மிருதுவாக உள்ளதா, என்பதைக் கண்டறிய உதவுகிறது.
தோல் உடலை மூடி இருப்பதால் நோய்க் கிருமிகளிடமிருந்து நமது உடலைப் பாதுகாக்கின்றது.
மேலும் இது நமது உடலை ஈரப்பசையோடு உடல் வைத்திருக்கின்றது. சரியான
வெப்பநிலையை ஒழுங்குபடுத்தி வைக்கிறது.
தோலின் பணிகள்
1. நுண்ணுயிரிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும் அரணாகத் தோல்
உள்ளது
2 தோல் சூரியஒளியைப் பயன்படுத்தி உடலுக்குத் தேவையான வைட்டமின்
D - ஐ உற்பத்தி செய்கிறது.
உங்கள்
உணர் உறுப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்.
❖ மிக அதிகமான ஒளியிலோ அல்லது
மிகக்குறைந்த ஒளியிலோ, மேலும் நகரும் வாகனத்தில் செல்லும் பொழுதோ படிக்க வேண்டாம்.
❖ தொலைக்காட்சி, கணினி, செல்பேசி,
மடிக்கணினி போன்ற ஒளித்திரைகளை அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
❖ உங்கள் கண்களை மிகக் கடினமாகத்
தேய்க்க வேண்டாம்.
❖ கண்ணில் உள்ள தூசிகளை அகற்ற
தினந்தோறும் 2 அல்லது 3 முறை தூய்மையான தண்ணீர் கொண்டு உங்கள் கண்களை மெதுவாக (மென்மையாக)
சுத்தம் செய்யவும். செவிகள் கடுமையான அடி அல்லது தாக்குதல் போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து
பாதுகாக்கப்பட வேண்டும்
❖ கொண்டை ஊசி, பல் குச்சி
இவற்றை வைத்து செவிகளைச் சுத்தம் செய்வது ஆபத்தான செயல், எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இதனால் காதுச் சவ்வு கிழிந்துவிடும் காது தொற்று ஏற்படும்.
❖ தினமும் தோலைச் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள தினமும் ஒரு முறையாவது குளிக்க வேண்டும்.