பண்டைய நாகரிகங்கள் | வரலாறு - பண்டைய நாகரிகங்கள் | 9th Social Science : History : Ancient Civilisations
பண்டைய நாகரிகங்கள்
நாகரிகம் என்பது ஒரு முன்னேறிய, முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை என்று கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப உருவான தகவமைப்பு என்று கருதத்தக்க வாழ்க்கை முறையை நோக்கி அது இட்டுச் செல்கிறது. அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் அருகருகே வாழ்வது அவசியமாகிற போது,
அவர்கள் திட்டமிடல், முறைப்படுத்துதல், தனித்தன்மை பேணுதல் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர். பின்பு, குடியிருப்புகளைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டியிருந்தது. ஒர் அரசியல் அமைப்பு உருவானது,
சமூகம் ஒழுங்குபடுத்தப்பட்டது, உணவு மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி முறைப்படுத்தப்பட்டது. நாகரிகங்கள் வடிவம் பெறத் தொடங்கியதும் மிகப் பெரிய கட்டடங்களை எழுப்பினர். எழுத்துக் கலையை உருவாக்கினர். அறிவியலும்,
தொழில்நுட்பமும் சமூக மேம்பாட்டிற்குப் பங்காற்றின.
எகிப்திய, மெசபடோமிய, சிந்துவெளி, சீன நாகரிகங்கள் பண்டைய நாகரிகங்களில் முக்கியமானவையாகும். இந்த நாகரிகங்கள் தழைத்த அதே காலகட்டத்தில்,
உலகின் மற்ற பகுதிகளில் வாழ்ந்தோர் வேட்டையாடுவோராகவும், உணவு சேகரிப்போராக, மேய்ச்சல்காரர்களாக வாழ்ந்தார்கள். வேட்டையாடுவோர் - உணவு சேகரிப்போரும்,
மேய்ச்சல் சமூகத்தினரும் இந்த நாகரிகங்களோடு ஊடாட்டங்கள் மூலம் உறவு பேணத் தொடங்கினர். அவர்களது வரலாறும் அதே அளவில் முக்கியமானதுதான். இந்த நாகரிகங்களின் சம காலத்தில் தென்னிந்தியாவில் புதிய கற்கால வேளாண்மை மேய்ச்சல் சமுதாயங்களும்,
நுண்கற்கருவிகள் பயன்படுத்தும் வேட்டையாடுவோர்- உணவு சேகரிப்போர் சமுதாயங்களும் வாழ்ந்தனர்.