Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | தென்னிந்தியாவில் தொடக்ககால புரட்சிகள்

மக்களின் புரட்சி | அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தென்னிந்தியாவில் தொடக்ககால புரட்சிகள் | 8th Social Science : History : Chapter 4 : People’s Revolt

   Posted On :  08.06.2023 08:40 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : மக்களின் புரட்சி

தென்னிந்தியாவில் தொடக்ககால புரட்சிகள்

17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் அரசியலில் பாளையக்காரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் தங்களை சுதந்திரமானவர்களாகக் கருதிக்கொண்டனர். பாளையக்காரர்களிடையே இரண்டு பாளையங்கள் (முகாம்கள்) இருந்தன.

தென்னிந்தியாவில் தொடக்ககால புரட்சிகள்

 

பாளையக்காரர்களின் புரட்சி

17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் அரசியலில் பாளையக்காரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் தங்களை சுதந்திரமானவர்களாகக் கருதிக்கொண்டனர். பாளையக்காரர்களிடையே இரண்டு பாளையங்கள் (முகாம்கள்) இருந்தன. அவை கிழக்கு பாளையம் (முகாம்), மேற்கு பாளையம் (முகாம்) என்பன ஆகும். கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர். மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் பூலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர். இந்த இரண்டு பாளையக்காரர்களும் ஆங்கிலேயருக்கு கப்பம்(kist) கட்ட மறுத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.


பாளையக்காரர்களுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்குமிடையே ஆரம்ப கால போராட்டங்கள் அரசியலில் ஒரு வலிமையான பரிணாமத்தைப் பெற்றன. 1792ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரம் பாளையக்காரர்களின் மீது செலுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையின் படி ஆங்கிலேயர்கள் வரிவசூல் செய்யும் உரிமையையும் பெற்றனர். அதன் விளைவாக பாளையக்காரர்களின் புரட்சி வெடித்தது.

 

பூலித்தேவர்

இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் பூலித்தேவர் ஆவார். அவர் திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரர் ஆவார். அவரது ஆட்சிக் காலத்தில் ஆற்காட்டு நவாபான முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்க்கத் தொடங்கினார். எனவே ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரைத் தாக்கின. ஆனால் அக்கூட்டுப் படைகள், திருநெல்வேலியில் பூலித்தேவரால் தோற்கடிக்கப்பட்டன. இந்தியாவில், ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் பூலித்தேவரே ஆவார். இந்த வெற்றிக்குப் பிறகு பூலித்தேவர் நவாப் மற்றும் ஆங்கிலேயரை எதிர்க்க பாளையக்காரர்களின் கூட்டமைப்பை உருவாக்க முயன்றார்.

1759இல் யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைத் தாக்கின. அந்தநல்லூரில் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார். 1761இல் ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும்செவ்வலைக் கைப்பற்றியது. பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து 1764இல் நெற்கட்டும் செவ்வலைக் மீண்டும் கைப்பற்றினார். பிறகு அவர் 1767இல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னாளில் பூலித்தேவர் தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து, தனது நோக்கம் நிறைவேறாமலேயே இறந்து போனார். இருந்தாலும் விடுதலைக்கான அவரது துணிச்சலான போராட்டம் தென்னிந்திய வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

 

வீரபாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். 11ஆம் நூற்றாண்டில் அவர்கள் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். பாண்டியர்களின் கீழ் நிலமானிய அடிப்படையில் பாஞ்சாலங்குறிச்சியைத் தலைநகராகக் கொண்டு ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன், வீரபாண்டியபுரத்தை ஆட்சி செய்தார். பின்னர் நாயக்கர்களின் ஆட்சியில் பாளையக்காரரானார். ஜெகவீர பாண்டியனுக்குப்பின் அவரது மகன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாளையக்காரரானார். அவரது மனைவி ஜக்கம்மாள், சகோதரர்கள் ஊமைத்துரை மற்றும் செவத்தையா ஆவர்.


ஆற்காடு நவாப்

விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குபின் முகலாயர்கள் தெற்கில் தங்கள் மேலாண்மையை நிறுவினர். கர்நாடகாவில் நவாப் முகலாயர்களின் பிரதிநிதியாக செயல்பட்டார். பாஞ்சாலங்குறிச்சி பாளையமும் நவாப்பின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. எனவே அது, நவாப்பிற்கு கப்பம் (வரி) கட்ட பணிக்கப்பட்டது. ஆனால் 1792இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கை அரசியல் நிலைமைகளை முற்றிலும் மாற்றியது. கம்பெனி, பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வரி வசூல் செய்யும் உரிமையையும் பெற்றது. கப்பம் வசூலித்ததே கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயருக்குமிடையேயான மோதலுக்கான முதன்மை காரணமானது.

கட்டபொம்மன்-ஜாக்சன் சந்திப்பு

இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சன் 1798இல் நிலுவைத் தொகையை செலுத்தச் சொல்லி கட்டபொம்மனுக்கு கடிதங்கள் எழுதினார். கட்டபொம்மனும் நாட்டின் பஞ்சத்தின் காரணமாக நிலுவையைச் செலுத்தும் சூழ்நிலையில்தான் இல்லை என்று பதில் எழுதினார். எனவே கோபமடைந்த ஜாக்சன் கட்டபொம்மனைத் தண்டிக்க ஒரு படையை அனுப்ப முடிவு செய்தார். இருப்பினும் சென்னை அரசாங்கம், கட்டபொம்மனுக்கு அழைப்பு அனுப்பி இராமநாதபுரத்தில் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யும் படி கலெக்டருக்கு வழிகாட்டியது.

1798இல் கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்பிரமணியத்துடன் இராமநாதபுரத்தில் கலெக்டரை சந்தித்தார். 1080 பகோடா பாக்கியை தவிர பெரும்பாலான வரியை கட்டபொம்மன் செலுத்திவிட்டதை கணக்குகள் சரிபார்த்தலுக்குப் பின் அறிந்த ஜாக்சன் சமாதானமடைந்தார். இந்த சந்திப்பின் பொழுது கட்டபொம்மனும் அவரது அமைச்சர் சிவசுப்பிரமணியமும் ஜாக்சனின் முன் மூன்று மணி நேரம் நிற்கவைக்கப்பட்டனர். கலெக்டர், கட்டபொம்மனையும், அவரது அமைச்சரையும் அவமானப்படுத்தி கைது செய்ய முயற்சி செய்தார். கட்டபொம்மன் தனது அமைச்சருடன் தப்பிக்க முயன்றார். உடனே ஊமைத்துரை, தனது வீரர்களுடன் கோட்டைக்குள் நுழைந்து கட்டபொம்மன் தப்பிக்க உதவி செய்தார். ஆனால் துரதிஷ்டவசமாக சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.

எட்வர்டு கிளைவ் மற்றும் கட்டபொம்மன்

பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய பின் கட்டபொம்மன் கலெக்டர் காலின் ஜாக்சன் அவரிடம் நடந்து கொண்டதை விவரித்து சென்னைக் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடித்தைக் கண்ட சென்னை கவுன்சிலின் கவர்னர் எட்வர்டு கிளைவ் கட்டபொம்மனை சரணடைய ஆணையிட்டார். சென்னை கவுன்சில், கட்டபொம்மனை ஒரு குழுவின் முன்னிலையில் வர கோரியது. இதற்கிடையில் சிவசுப்பிரமணியம் விடுதலை செய்யப்பட்டதுடன், கலெக்டர் ஜாக்சன் அவருடைய தவறான அணுகுமுறைக்காக பதவி நீக்கமும் செய்யப்பட்டார். அவருக்குப்பின் கலெக்டராக S.R. லூஷிங்டன் நியமிக்கப்பட்டார்.

பாளையக்காரர்களின் கூட்டமைப்பு

இச்சூழ்நிலையில் சிவகங்கையின் மருது பாண்டியர், அருகில் இருந்த பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்கினார். இந்த கூட்டமைப்பு ஓர் பிரகடனத்தை வெளியிட்டது. அது திருச்சிராப்பள்ளி அறிக்கை என அழைக்கப்பட்டது. கட்டபொம்மன் இந்த கூட்டமைப்பின் மீது ஆர்வத்துடன் இருந்தார். இந்த கிளர்ச்சி கூட்டமைப்பில் இணைய மறுத்த சிவகிரி பாளையத்தின் மீது கட்டபொம்மன் தனது செல்வாக்கை செலுத்த முயன்றார். கட்டபொம்மன் சிவகிரியை நோக்கி முன்னேறினார். சிவகிரி பாளையக்காரர், கம்பெனிக்கு கப்பம் கட்டுபவராக இருந்ததால் கம்பெனி, கட்டபொம்மனின் சிவகிரி மீதான படையெடுப்பு தங்கள் அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகக் கருதினர். எனவே கம்பெனியின் படைகள் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி செல்ல ஆணையிடப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சி வீழ்தல்

1799 செப்டம்பர் ஐந்தாம் நாள் மேஜர் பானர்மேன் தன்னுடைய படையை பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி நகர்த்தினார். ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் அனைத்து செய்தித்தொடர்புகளையும் துண்டித்தது. கள்ளர்பட்டியில் நடந்த சண்டையில் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் புதுக்கோட்டைக்குதப்பிச்சென்றார். களப்பூர் காடுகளில் மறைந்திருந்த கட்டபொம்மனை புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் கைது செய்து கம்பெனியிடம் ஒப்படைத்தார். பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்தபிறகு, பானர்மேன் கைதிகளை பாளையக்கரர்களின் அவைக்கு அழைத்து சென்று ஒரு விசாரணைக்குப்பிறகு அவர்களுக்கு மரணதண்டனை விதித்தார். நாகலாபுரத்தில் சிவசுப்பிரமணியம் தூக்கிலிடப்பட்டார். அக்டோபர் 16ஆம் நாள் பாளையக்காரர் அவையின் முன் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டார். அடுத்த நாள் அக்டோபர் 17, 1799 அன்று கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார். இவ்வாறான கட்டபொம்மனின் வீரம் பற்றி பல நாட்டுப்புற கதைப்பாடல்கள் இன்றும் பெருமையாக கூறுகின்றன. அவை அவருடைய நினைவை மக்களிடையே நீங்காமல் வைத்திருக்கின்றன.


வேலுநாச்சியார்

சிவகங்கையின் இராணி வேலுநாச்சியார் ஆவார். இவர் 16ஆம் வயதில் சிவகங்கையின் இராஜா முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். 1772இல் ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகள் சிவகங்கையின் மீது போர் தொடுத்தன. அப்படை, முத்துவடுகள் நாதரை காளையார்கோயில் போரில் கொன்றது. வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் தப்பித்து, திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாச்சியில் கோபால நாயக்கர் பாதுகாப்பில் வாழ்ந்தார். இந்த காலகட்டத்தில் அவர் ஒரு படையை அமைத்து, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆயுதங்களை எங்கு சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பதை தனது நுண்ண றிவு படைப்பிரிவின் உதவியுடன் கண்டறிந்தார். பின்னர், தனது நம்பிக்கைக்குரிய படைத்தளபதி மற்றும் தொண்டர், குயிலி என்பவரால் ஒரு தற்கொலை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தார். மருது சகோதரர்களின் உதவியுடன் சிவகங்கையைக் கைப்பற்றி மீண்டும் இராணியாக முடிசூட்டிக்கொண்டார். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் (இந்தியப்) பெண்ண ரசி ஆவார். இவர் தமிழர்களால் 'வீரமங்கை எனவும் 'தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்படுகிறார்.



மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள் பொன்னாத்தாள் மற்றும் மூக்கைய்யா பழனியப்பன் ஆகியோரின் மகன்கள் ஆவர். மூத்த சகோதரர் பெரிய மருது (வெள்ளை மருது) எனவும், இளைய சகோதரர் சின்ன மருது எனவும் அழைக்கப்பட்டனர். இவற்றில் மருது பாண்டியன் என்றழைக்கப்பட்ட சின்னமருது பிரபலமானவர். சின்ன மருது, சிவகங்கையின் மன்னர் முத்துவடுக நாத பெரிய உடையதேவரிடம் (1750-1772) பணிபுரிந்தார். 1772இல் ஆற்காடு நவாப்பின் படைகள் சிவகங்கையை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றியது. இப்போரின் போது முத்து வடுகநாத பெரிய உடையதேவர் போரில் இறந்தார். இருப்பினும் சில மாதங்களுக்குப் பிறகு, சிவகங்கை மருது சகோதரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டு பெரிய மருது, அரசராக பொறுப்பேற்றார். சின்னமருது அவரது ஆலோசகராக செயல்பட்டார். ஆங்கிலேயர்களுக்கெதிரான தீவிர நடவடிக்கைகளின் காரணமாக அவர் சிவகங்கை சிங்கம் என அழைக்கப்பட்டார். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னிந்தியாவில் மருது சகோதரர்களால் ஆங்கிலேயர்களுக்கெதிரான கிளர்ச்சி நடைபெற்றது.


மோதலுக்கான காரணங்கள்

கட்டபொம்மனின் இறப்பிற்கு பின், அவருடைய சகோதரர் ஊமைத்துரையும் மற்றவர்களும் சிவகங்கைக்குத் தப்பினர். அங்கு அவர்களுக்கு மருது சகோதரர்கள் பாதுகாப்பளித்தனர். மேலும் சிவகங்கை வியாபாரிகள், தங்களது உள்நாட்டு கொள்கையில் கம்பெனியின் தலையீட்டை விரும்பவில்லை. இந்த இரண்டு காரணங்களுக்காகவே, கம்பெனி சிவகங்கைக்கு எதிராக போர் புரிந்தது.

தென்னிந்திய கிளர்ச்சி (1800-1801)

பிப்ரவரி 1801இல் கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும் செவத்தையாவும் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்து கமுதியை வந்தடைந்தனர். அங்கிருந்து தனது தலைநகர் சிறுவயலுக்கு அவர்களை சின்னமருது அழைத்து சென்றார். கட்டபொம்மனின் சகோதரர்கள், மீண்டும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை புனரமைத்தனர். ஏப்ரலில் காலின் மெக்காலே தலைமையில் ஆங்கிலப் படைகள் மீண்டும் கோட்டையை தன் வசப்படுத்தியது. அத்துடன் பாளையக்காரச் சகோதரர்கள் சிவகங்கையில் தான் தஞ்சமடைந்திருக்க வேண்டும் என்று கருதியது. எனவே ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களிடம் தப்பித்தவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் இக்கோரிக்கை மருது சகோதரர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகையால் கர்னல் அக்னியூ மற்றும் கர்னல் இன்ஸ் ஆகியோர் மருது சகோதரர்களுக்கெதிராக படை நடத்திச் சென்றனர்.

இப்பாளையக்காரர் போர், அதற்கு முன் நடந்த போர்களை விடவும் மிகவும் பெரிய அளவில் நடைபெற்றது. சிவகங்கையின் மருது சகோதரர்கள், திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், மலபாரின் கேரளவர்மன், மைசூரின் கிருஷ்ணப்பநாயக்கர் மற்றும் துண்டாஜி உள்ளிட்டோர் அடங்கிய கூட்டமைப்பால் போர் தொடங்கப்பட்டது. இக்கூட்டமைப்பிற்கு எதிராக ஆங்கிலேயர் போரை அறிவித்தனர்.

திருச்சிராப்பள்ளி பிரகடனம் (1801)

ஜூன் 1801இல் மருது சகோதரர்கள் 'திருச்சிராப்பள்ளி பிரகடனம் என்றழைக்கப்பட்ட 'சுதந்திரப் பிரகடனம்' ஒன்றை வெளியிட்டனர். 1801 பிரகடனமே ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது. இந்த அறிவிப்பின் ஒரு நகல் ஆற்காடு நவாபின் அரண்மனையான, திருச்சி கோட்டை சுவரிலும், மற்றொரு நகல் ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது. இவ்வாறு மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களுக்கெதிரான எதிர்ப்புணர்ச்சியை நாடெங்கும் பரப்பினர். இதன் விளைவாக தமிழ்நாட்டின் பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட ஓர் அணியாக சேர்ந்தனர். சின்னமருது, ஆங்கில படைக்கு சவாலாக கிட்டத்தட்ட 20,000 வீரர்களை திரட்டினார்.  ஆனால் ஆங்கிலேய படைகளுக்கு மேலும் வலுவூட்ட, வங்காளம், இலங்கை, மலாயா (மலேசியா) போன்ற இடங்களிலிருந்து படைகள் வரவழைக்கப்பட்டன. புதுக்கோட்டை, எட்டயபுரம் மற்றும் தஞ்சாவூர் மன்னர்களும் ஆங்கிலேயருக்கு ஆதரவளித்தனர். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை பாளையக்காரர்களின் படைகளில் பிளவை ஏற்படுத்தியது.

ஆங்கிலேயர் சிவகங்கையை இணைத்தல்

மே 1801இல் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் கிளர்ச்சியாளர்களை ஆங்கிலேயர் தாக்கினர். எனவே கிளர்ச்சியாளர்கள் பிரான்மலை மற்றும் காளையார் கோயில் பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் மீண்டும் ஆங்கிலேயப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர். இறுதியில் சிறந்த இராணுவ வலிமை மற்றும் சிறந்த ஆங்கில இராணுவத் தளபதிகளால் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். கிளர்ச்சி தோல்வியுற்றதால், 1801இல் சிவகங்கையை ஆங்கிலேயர் இணைத்துக் கொண்டனர். 1801அக்டோபர் 24ஆம் நாள் மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர். 1801 நவம்பர் 16ஆம் நாள் ஊமைத்துரை மற்றும் செவத்தையா கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டனர். மேலும் 73 கிளர்ச்சியாளர்கள் மலாயாவின் பினாங்கிற்கு (பின்னர் வேல்ஸ் இளவரசர் தீவு என அழைக்கப்பட்டது) நாடு கடத்தப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயரிடம் தோல்வியுற்றாலும் தமிழ் மண்ணில் தேசியம் என்றவிதையைவிதைத்த முன்னோடிகளாவர்.

1800-1801ஆம் ஆண்டு கிளர்ச்சி ஆங்கில ஆவணங்களில் இரண்டாவது பாளையக்காரர் போர் என்று கூறப்பட்டாலும், இத்தென்னிந்திய புரட்சி தமிழக வரலாற்றில் ஓர் அடையாளமாகவே இருக்கிறது. 1801 ஜூலை 31இல் செய்துகொள்ளப்பட்ட கர்நாடக உடன்படிக்கைப்படி, தமிழ்நாட்டின் மீது ஆங்கிலேயர் நேரடி கட்டுப்பாட்டைப் பெற்றனர். இதனால் பாளையக்காரர் முறை நீக்கப்பட்டது.


தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் தீர்த்தகிரி. அவர், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கொங்கு நாட்டு பாளையக்காரர் ஆவார். கொங்கு நாடு என்பது சேலம், கோயம்புத்தூர், கரூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளை உள்ளடக்கிய மதுரை நாயக்க அரசின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பகுதி மைசூர் உடையார்களால் இணைக்கப்பட்டது. மைசூர் உடையார்கள் வீழ்ந்த பிறகு, இந்தப் பகுதிகள் மைசூர் சுல்தான்களால் கட்டுப்படுத்தப்பட்டது. மூன்று மற்றும் நான்காம் மைசூர் போர்களுக்குப் பிறகு கொங்குநாடு முழுவதும் ஆங்கிலேயரின் வசமானது

தீரன் சின்னமலை, பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்றிருந்தார். இவர் திப்புசுல்தான் பக்கம் இருந்து ஆங்கிலேயருக்கெதிராக போராடி வெற்றிபெற்றார். திப்புசுல்தான் இறந்த பிறகு, இவர் ஓடாநிலையில் தங்கி ஆங்கிலேயரைத் தொடர்ந்து எதிர்த்துப் போராட, அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். 1800இல் கோயம்புத்தூரில் ஆங்கிலேயரைத் தாக்க, அவர் மராத்தியர் மற்றும் மருதுசகோதரர்களின் உதவியைப் பெற முயன்றார். ஆனால் ஆங்கிலப்படைகள் அக்கூட்டுப்படைகளைத் தடுத்து நிறுத்தியதால், தீரன் சின்னமலை மட்டும் கோயம்புத்தூரை தாக்கும் நிலைக்கு உள்ளானார். அதனால் அவரது படை தோற்கடிக்கப்பட்டது. அவர் ஆங்கில படைகளிடமிருந்து தப்பித்து சின்னமலை காவேரி, ஓடாநிலை மற்றும் அரச்சலூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போர்களில் கொரில்லா போர் முறையில் ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார். இறுதி போரின் போது சின்னமலை தனது சமையற்காரர் நல்லப்பன் என்பவரால் காட்டிக் கொடுக்கப்பட்டதால் 1805இல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

Tags : People’s Revolt | Chapter 4 | History | 8th Social Science மக்களின் புரட்சி | அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 4 : People’s Revolt : Early revolts of South India People’s Revolt | Chapter 4 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : மக்களின் புரட்சி : தென்னிந்தியாவில் தொடக்ககால புரட்சிகள் - மக்களின் புரட்சி | அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : மக்களின் புரட்சி