காற்று | அலகு 11 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பசுமை இல்ல விளைவு மற்றும் உலக வெப்பமயமாதல் | 8th Science : Chapter 11 : Air
பசுமை இல்ல விளைவு மற்றும் உலக வெப்பமயமாதல்
சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நிலப்பரப்பு மற்றும் கடல்
பரப்பினால் உறிஞ்சப்படுகின்றன. இதன் தொடர்வினையாக இவை வெப்பம் அல்லது அகச் சிவப்புக்கதிர்களை
வளிமண்டலத்திற்குள் உமிழ்கின்றன. வளிமண்டலத்திலுள்ள சில வாயு மூலக்கூறுகள் இத்தகைய
அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சி மீண்டும் அவற்றை அனைத்துத் திசைகளிலும் அனுப்புகின்றன.
இவ்வாறு அவை பூமிமின் மேற்பரப்பு வெப்பநிலையை தொடர்ந்து ஒரே நிலையில் தக்கவைக்கின்றன.
அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சும் இவ்வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும். இந்நிகழ்வு
பசுமை இல்ல விளைவு எனப்படும். கார்பன் டைஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன், குளோரோபுளுரோ
கார்பன் (CFC) போன்றவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். இவ்வாயுக்களின் அளவு தொடர்ந்து
வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் பூமிமின் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து உயர்கிறது.
வளிமண்டலத்தில் காற்று மாசுபடுத்திகளின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதாலும் பசுமை இல்ல
விளைவு அதிகமாகி புவியின் வாயு மண்டல வெப்பநிலை சராசரியாக உயர்ந்து கொண்டே வருகிறது.
இது உலக வெப்பமயமாதல் எனப்படும்.
1. உலக வெப்பமயமாதலின் விளைவுகள்
உலக வெப்பமயமாதலால் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன.
• பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் உருகுகின்றன.
• அடிக்கடி வெள்ளம், மண் அரிப்பு உருவாதல் மற்றும் பருவகாலம்
சாராத மழை ஆகியவை அதிகரிக்கின்றன.
• பவளப்பாறைகள் மற்றும் முக்கிய உயிரினங்கள் அழிந்து உயிரிபல்வகைத்
தன்மை இழப்புக்குக் காரணமாகிறது.
• நீர் மற்றும் பூச்சிகளால் வரும் நோய்கள் பரவுகின்றன.
2. உலக
வெப்பமயமாதலைத் தடுக்கும் முறைகள்
பூமியையும் அதன் மூலங்களையும் பாதுகாக்கும் பொருட்டு நாம் சில
வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றுள் சில கொடுக்கப்பட்டுள்ளன.
• படிம் எரிபொருள்களை குறைவாகப் பயன்படுத்துதல்
• காடுகள் அழிவதைத் தடுத்தல்.
• CFC பயன்பாட்டைக் குறைத்தல்.
• அதிக எண்ணிக்கையில் மரங்களை நடுதல்.
• பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல்
மற்றும் மறுசுழற்சி செய்தல்.