குலசேகராழ்வார் | இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பெருமாள் திருமொழி | 10th Tamil : Chapter 4 : Naankam Tamil
தொழில்நுட்பம்
கவிதைப் பேழை
பெருமாள்
திருமொழி
- குலசேகராழ்வார்
நுழையும்முன்
தமிழர், பண்டைய
நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக
இருக்கிறார்கள். அதன்விளைவாக, சங்க இலக்கியத்தில் அறிவியல்
கருத்துகள் நிறைந்துள்ளன. அதற்கு இணையாகப் பக்தி இலக்கியங்களிலும் அறிவியல்
கருத்துகள் செறிந்திருக்கின்றன.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.*
பாசுர எண்: 691
பாடலின் பொருள்
மருத்துவர்
உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று
உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும்
அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும்
உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.
சொல்லும் பொருளும்
சுடினும் - சுட்டாலும், மாளாத -
தீராத, மாயம் - விளையாட்டு
வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள
மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான
உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.
நூல் வெளி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்
முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில்
கொடுக்கப்பட்டுள்ளது. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்
ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன.
இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். இவரின் காலம்
எட்டாம் நூற்றாண்டு.
கற்பவை கற்றபின்....
தமிழர்
மருத்துவமுறைக்கும் நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு
உருவாக்குக.