Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | உரைநடை: சிற்பக்கலை

இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: சிற்பக்கலை | 9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal

   Posted On :  19.08.2023 08:07 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்

உரைநடை: சிற்பக்கலை

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : உரைநடை: சிற்பக்கலை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலை – சு

உரைநடை உலகம் 

சிற்பக்கலை



நுழையும்முன்

கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன், அவற்றில் சிற்பமென்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான். மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக இதைக் கொள்ளலாம். உயிரற்ற கல்லிலும் உலோகத்திலும் தமிழர் மன உணர்வுகளையும் நிகழ்வுகளையும் செதுக்கிவைத்த சிற்பங்கள், இன்றும் வரலாற்றின் வாயில்களாக விளங்குகின்றன. தமிழர் அழகியலின் வெளிப்பாடுதான் நாம் காணும் சிற்பங்கள். தமிழ்ச் சிற்பிகள் கல்லில் வடித்த கவிதைகளே சிற்பங்கள்.



கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை எனலாம்.

"கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் 

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை

பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன" 

என்று திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது. மணிமேகலையிலும் இத்தகு குறிப்புகள் காணப்படுகின்றன.


சிற்பங்களின் வகைகள்

சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம். அவ்வாறின்றி முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம். இத்தகு சிற்பங்களை அரண்மனைகள், கோவில்கள் போன்ற இடங்களில் காணலாம். குறிப்பாகக் கோவிலின் தரைப் பகுதி, கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், சுவர்களின் வெளிப்புறங்கள் என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.

தெய்வ உருவங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், முழுவடிவ (பிரதிமை) உருவங்கள் என நான்கு நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன. சிற்ப இலக்கண மரபைப் பின்பற்றிக் கலை நயத்துடனும் மிகுந்த தேர்ச்சியடனும் சிற்பிகள் சிற்பங்களை வடிவமைக்கின்றனர். அதனால், அவர்களைக் "கற்கவிஞர்கள்" என்று சிறப்பிக்கின்றனர்.

பல்லவர் காலச் சிற்பங்கள்

பல்லவர் காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. கோவில் தூண்கள் சிற்பங்களால் அழகு பெற்றன. தூண்களில் யாளி, சிங்கம், தாமரை மலர், நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த வட்டங்கள் போன்றவை பொறிக்கப்பட்டன. பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்களின் கட்டடங்கள், கற்றூண்கள், சுற்றுச்சுவர்கள், நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் சிற்பங்கள் மிளிர்வதைக் காண முடியும்.

தெரியுமா?

தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக இதையும் குறிப்பிடலாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சிலைவடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை மணிமேகலை மூலம் அறிய முடிகிறது.

பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும். கடற்கரையில் காணப்பட்ட பெரும் பாறைகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு உருவாக்கப்பட்ட பஞ்ச பாண்டவர் இரதங்களில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் பல்வேறு உருவச் சிற்பங்களும் பல்லவர்களின் சிற்பக்கலைப் பெருமையை உலகுக்கு உணர்த்துகின்றன.

காஞ்சி கைலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் (முழுவதும்) சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வ உருவங்களும் பிற சிற்பங்களும் கோவிலின் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் காணப்படும் பல்லவர் காலச் சிற்பங்கள் சிறந்த கலைநுட்பத்துடன் அமைந்துள்ளன.

பாண்டியர் காலச் சிற்பங்கள்

பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட குகைக்கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. அவற்றைத் திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி , திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் காணலாம். கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும். 

சோழர்காலச் சிற்பங்கள்

கற்சிற்பங்கள் அமைக்கும் கலை, சோழர் காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது. முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில், முதலாம் இராசேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம், இரண்டாம் இராசராசன் எழுப்பிய தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில், மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அமைத்த திரிபுவன வீரேசுவரம் கோவில் போன்றவை சோழர் காலச் சிற்பக்கலையின் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

தஞ்சைப் பெரிய கோவி லி ல் காணப்படுகின்ற பதினான்கு அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப் பெரிய நந்தியும் வியப்பூட்டும் வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் சோழர்காலச் சிற்பத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன. கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுகக் கிணறும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்களும் குறிப்பிடத்தக்கன.


புதுக்கோட்டை மாவட்டம் , நார்த்தாமலையில் நடன முத்திரைகளுடன் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூரில் இரண்டாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோவில் சிற்பங்கள் அழகானவை. திருச்சிராப்பள்ளி மாவட்டம், சீனிவாசநல்லூரில் உள்ள குரங்கநாதர் கோவில் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. சோழர் கால இறுதியில் திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்ட சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள் சோழர்காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச்சிறந்த சான்றுகளாகும். சோழர்காலத்தில் மிகுதியான செப்புத் திருமேனிகள் உருவமைக்கப்பட்டன. கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலைநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டன. சோழர்காலம் செப்புத்திருமேனிகளின் 'பொற்காலம்' என்று அழைக்கப்படும் அளவிற்கு அவை அழகுற அமைந்துள்ளன.

தெரியுமா?

தமிழக அரசு, சிற்பக் கலைஞர்களைப் பரிசளித்துப் பாராட்டிச் சிற்பக்கலையை வளர்த்து வருகிறது. மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது. அக்கல்லூரியிலிருந்து ஆண்டுதோறும் சிற்பக் கலைஞர்கள் பலர் உருவாகின்றனர். சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன. சென்னையிலும் கும்பகோணத்திலும் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சிற்பக்கலையைப் பயிலலாம் . இக்கலைத்துறையில் மிகுதியான வேலைவாய்ப்புகள் உள்ளன. சிற்பக்கலை குறித்த செய்திகளை அனை வரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் "சிற்பச் செந்நூல்" என்ற நூலை வெளியிட்டுள்ளது.

விஜயநகர மன்னர் காலச் சிற்பங்கள்

விஜயநகர மன்னர்கள் காலத்தில் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப்பட்டன. அக்கோபுரங்களில் சுதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இவர்கள் தெலுங்கு, கன்னடப்பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் அந்நாட்டுச் சிற்பக் கலையின் தாக்கம் தமிழகச் சிற்பங்களில் ஏற்பட்டது. ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. கோவில் மண்டபங்களில் மிகுதியான சிற்பத்தூண்கள் அமைக்கப்பட்டன. குதிரையின் உருவங்களைச் சிற்பங்களில் இடம் பெறச் செய்தனர். வீரர்கள் அமர்ந்த நிலையில் குதிரைகள் முன்கால்களைத் தூக்கி நிற்பது போன்ற சிற்பங்களை மண்டபத் தூண்களில் அமைத்தனர். அத்துடன் பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் இவர்கள் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

நாயக்கர் காலச் சிற்பங்கள்

நாயக்க மன்னர் பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர். அம் மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்களைச் செதுக்கினர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில், திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோவில், பேரூர் சிவன் கோவில் போன்ற இடங்களில் கலைநயம் மிக்க சிற்பங்களைக் காணமுடியும்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன் குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் ஆடை, ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படுகின்றன. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலையும் அமைந்துள்ளது.

கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று கூறலாம். விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலைநயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன் குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

பௌத்த-சமணச் சிற்பங்கள்


பௌத்த மதத்தைத் தழுவிய தமிழர்கள், புத்தரின் உருவத்தை அமர்ந்த, நின்ற, படுத்த (கிடை) நிலைகளில் சிற்பங்களாகப் படைத்து வழிபட்டனர். சமண மதத்தினர் அருகக் கடவுளின் உருவத்தையும், இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களையும் சிற்பங்களாக்கியுள்ளனர். சமண மதத்தில் சில சிற்பங்கள் அளவுக்கு மீறிய உயரமும், பருமனும் உடையனவாக உள்ளன.

சான்றாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அண்மையில் உள்ள திருநாதர்குன்று என்னும் இடத்தில், ஒரு பாறையில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.


அது போலவே மதுரைக்கு அண்மையில் சமணர்களின் படுக்கைகள் செதுக்கப்பட்ட இடங்களிலும் மலைப்பாறைகளிலும் சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

தனிச்சிறப்புகள்

பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழகச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன. யோகக்கலை, நாட்டியக்கலைக் கூறுகளும் தமிழகச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.

இன்றைய சிற்பக்கலை

தமிழகத்தில் கட்டப்படும் கோவில்களில் இன்றும் சுதைச் சிற்பங்களும் கற்சிற்பங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. செங்கல், பைஞ்சுதை (சிமெண்ட்), கற்கள் ஆகியவற்றைக் கொண்டு கலைநயமிக்க சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. வெண்கலம் முதலான உலோகங்களாலும் செயற்கை இழைகளாலும் கடவுள் உருவங்களும் மனித உருவங்களும் உருவாக்கப்படுகின்றன. இன்றைய சிற்பக்கலை கோவில்களைக் கடந்தும் பலதுறைகளில் தன் இடத்தை நிறைவு செய்கிறது. பெரும் அரங்குகளில், காட்சிக்கூடங்களில், வரவேற்பறைகளில் காணப்படுகிற கலைநயம் மிக்க சிற்பங்கள், நினைவுப் பொருள்கள், பரிசுப் பொருள்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நேர்த்திமிகு சிற்பங்கள் முதலானவை தமிழர் சிற்பக்கலையின் மேன்மையை உலகுக்குப் பறை சாற்றுகின்றன.

சிற்பங்கள் என்பன தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும், ஏனைய உருவங்களாகக் கண்டு களிப்பதற்கும் மட்டுமல்ல! அவை வரலாற்றுப் பதிவுகளாகும்; மனித அறிவு வளர்ச்சியின் முதிர்ச்சியாகும்; அத்தகு சிறப்புமிக்க சிற்பக் கலையைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாகும்.


Tags : Chapter 6 | 9th Tamil இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal : Prose: Sirpakalai Chapter 6 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : உரைநடை: சிற்பக்கலை - இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்