ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மனிதரில் ஒலி உருவாதல் | 8th Science : Chapter 6 : Sound
மனிதரில் ஒலி உருவாதல்
மனிதரில் குரலானது தொண்டையிலுள்ள லாரிங்கிஸ் எனப்படும் குரல்
ஒலிப்பெட்டியில் உருவாகிறது. இது மூச்சுக்குழாயின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. குரல்
நாண்கள் எனப்படும் தசை நார்கள் குரல்வளையின் குறுக்கேகட்டப்பட்டுள்ளன. குரல் நாண்கள்
குறுகிய பிளவுகளைக் கொண்டுள்ளன. இதன் மூலம் காற்று உள்ளேயும் வெளியேயும் செல்கிறது.
நாம் பேசும்போது நுரையீரலில் இருந்து வரும் காற்று மூச்சுக்குழாய் வழியாக குரல்வளைக்குச்
செல்கிறது. காற்று குறுகிய பிளவுகளின் வழியே செல்லும்போது குரல் நாண்கள் அதிர்வடைந்து
ஒலியை உருவாக்குகின்றன. குரல் நாண்களின் தடிமனை மாற்றுவதன் மூலம் குறுகிய பிளவில் காற்றுத்
தம்பத்தின் நீளம் மாறுகிறது. இதன் மூலம் பல்வேறு சுருதியுடைய ஒலிகள் உருவாகிறது. ஆண்களின்
குரல் நாண் நீளமாகவும், தடித்ததாகவும் இருப்பதால் அவர்களது குரலானது பெண்களின் குரலைவிட
கனமானதாக இருக்கிறது.