மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மின் மூலங்கள் | 6th Science : Term 2 Unit 2 : Electricity
மின் மூலங்கள்
செல்வனும், செல்வியும் இரட்டையர்கள். அவர்கள் ஆறாம் வகுப்பு
பயில்கின்றனர். கோடை விடுமுறையைக் கழிக்க, தங்கள் தாத்தாவின் கிராமத்துக்குச் சென்றனர்.
அங்கு அவர்களின் தாத்தா மாலை ஆறு மணிக்கு மின்விளக்கு போட்டார். அதை கவனித்துக்கொண்டிருந்த
செல்வன் தனது தாத்தாவிடம் மின்பொத்தனை அழுத்தியவுடன் எவ்வாறு மின்விளக்கு ஒளிர்கிறது
எனக்கேட்டான். தாத்தா அவனை அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு நடைபெற்ற உரையாடலைக் கீழே காண்போம்.
செல்வன் : ஐயா, எவ்வாறு நாம் மின் பொத்தானை அழுத்தும்போது
மின்விளக்கு ஒளிர்கிறது?
பொறியாளர் : மின்சாரம் தான் காரணம்.
செல்வன் : நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது?
பொறியாளர் : நாம் அனல்மின்நிலையம், நீர்மின்நிலையம், கடலலை,
காற்றாலை மற்றும் சூரியஒளி போன்றவற்றிலிருந்தும் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம்.
செல்வன் : இந்நிலையங்கள் எல்லா இடங்களிலும் உள்ளனவா,
ஐயா?
பொறியாளர் : இல்லை. இடத்தின்தன்மையைப் பொறுத்தே நாம் மின்நிலையங்களை
அமைக்கிறோம்.எடுத்துக்காட்டாக, தமிழகத்தின் நெய்வேலியில் அதிக அளவு பழுப்பு நிலக்கரி
கிடைப்பதால் அங்கு அனல் மின்நிலையம் உருவாக்கப்பட்டுள்ளளது.
செல்வன் : ஆம். நான் திருநெல்வேலிக்கு அருகில் காற்றாலைகளைப்
பார்த்திருக்கிறேன். ஏனெனில் அங்கு மலைப்பகுதியில் காற்று தொடர்ந்து வீசும். தங்களின்
மேலான தகவலுக்கு நன்றி ஐயா!
தாத்தா : (வீட்டிற்குச் செல்லும் வழியில்) இம்மூலங்களிலிருந்து
மட்டும்தான் மின்சாரம் கிடைக்கிறது என நீ நினைக்கிறாயா?
செல்வன் : (வீட்டில் நுழையும்பொழுது சுவர்க்கடிகாரத்தைப்
பார்த்து) தாத்தா! அக்கடிகாரத்தைப் பாருங்கள். அது எவ்வாறு இயங்குகிறது?
தாத்தா : ஆம். அது இயங்குவதற்கு மின்னாற்றல்
தேவைப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட மின்னாற்றலை மூலங்களைத்தவிர, நாம் மின்கலன்கள் மற்றும் மின்கல அடுக்குகளிலுருந்தும்
பெறுகிறோம்.
செல்வன் : ஆம், தாத்தா, நான் இன்று தெரிந்து கொண்டவற்றை
செல்வியிடம் விவாதிக்கப் போகிறேன்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உரையாடலில் இருந்து நீங்கள் என்ன தெரிந்து
கொண்டீர்கள். மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள்
மின் மூலங்கள் எனப்படும். பலவகையான மின் மூலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய மின்நிலையங்கள்:
அனல்மின் நிலையங்கள் (கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி திருவள்ளூர்
மாவட்டத்தில் எண்ணுர்), நீர்மின் நிலையங்கள் (சேலம் மாவட்டத்தில் மேட்டூர், திருநெல்வேலி
மாவட்டத்தில் பாபநாசம்), அணுமின்நிலையங்கள் (காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம்,
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம்), காற்றாலைகள் (கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி
மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு). இவற்றைத் தவிரப் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள
சூரியஒளித் தகடுகள் பரவலாக மின்சாரம் மூலமும் பெறப்படுகிறது.
மின் உற்பத்தி நிலையங்கள் எவ்வாறு மின் உற்பத்தி செய்கின்றன.
எனச் சுருக்கமாகக் காண்போம்.
1. அனல்மின் நிலையங்கள்
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி, டீசல் அல்லது வாயுக்களை எரிப்பதன்
மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலால் நீராவி உருவாக்கப்படுகிறது. இந்த நீராவியால் டர்பைன்
இயங்குகிறது. டர்பைன் இயங்கும் பொழுது இரு மின்காந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள
கம்பிச்சுருள் சுழல்வதால் உருவாகும் மின்காந்தத் தூண்டலால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
இங்கு வெட்ப ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
2. நீர்மின் நிலையங்கள்
நீர்மின் நிலையங்களில் அணைக் கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன்
சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
நீர்மின் நிலையங்கள் அதிக காலம் இயங்கக்கூடியவை மற்றும் சிக்கனமானவை.
3. அணுமின் நிலையங்கள்
அணுமின் நிலையங்களில் அணுக்கரு ஆற்றலைக் கொண்டு நீரானது கொதிக்க
வைக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நீராவியைக் கொண்டு டர்பைன் இயக்கப்படுகிறது. டர்பைனின்
இயக்கத்தால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு அணுக்கரு ஆற்றலானது இயக்க ஆற்றலாகவும்
பின் மின்னாற்றலாகவும் மாற்றப்படுகிறது.
4. காற்றாலை நிலையங்கள்
காற்றாலைகளில், காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்படுகிறது.
இதன்மூலம் மின்சாரம் உருவாகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.