அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மரக்கட்டை தரும் தாவரங்கள் | 6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life
மரக்கட்டை தரும் தாவரங்கள்
வீடு கட்டுவதற்கும், மரப்பொருள்கள் தயாரிப்பதற்குமான மரக்கட்டைகள்
தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன. மரக்கட்டைகளின் நீடித்தத்தன்மை, அழகு மற்றும்
வெப்பத்தினைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு நாம் மரக்கட்டைகளைப்
பயன்படுத்துகிறோம்.
வணிகரீதியாகப் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை மற்றும் அடர்த்தியின்
அடிப்படையில் வன்கட்டைகள் மற்றும் மென்கட்டைகள் என் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
வன்கட்டைகள்
நிலவாழ் பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்ம் என்னும் மிகப்
பெரும் பிரிவினைச் சார்ந்த தாவரங்களிலிருந்து வன்கட்டைகள் பெறப்படுகின்றன.
உயர்தர மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் மரக்கட்டுமானங்கள்
வன்கட்டையினைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. (எ.கா) தேக்கு, பலா
மென்கட்டைகள்
இவை பொதுவாகப் பூவாத்தாவரங்களான ஜிம்னோஸ்பெர்ம் வகை தாவரங்களில்
இருந்து பெறப்படுகின்றன. ஒரு சில ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களும் மென்கட்டைகளைத் தருகின்றன.
இவை பொதுவாக ஒட்டுப்பலகைகள், மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. (எ.கா) கடம்பு, பைன்
மரக்கட்டைகளிலிருந்து
மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக
ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை (Ply wood) ஆகும். இது ஒருவகைக் கூட்டு மரப்
(composite wood) பலகை ஆகும்.