இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 10th Tamil : Chapter 3 : Kutaanchoru
பண்பாடு
வாழ்வியல்
இலக்கியம்
திருக்குறள்
ஒழுக்கமுடைமை (14)
1.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
பொருள்: ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால்
அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.
2.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
பொருள்: ஒழுக்கமாக வாழும் எல்லாரும் மேன்மை அடைவர்.
ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளை அடைவர்.
3.
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
பொருள்: உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார், பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே (எனக் கருதப்படுவார்).
மெய் உணர்தல் (36)
4. எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.*
பொருள்: எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத்
தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
5.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
பொருள்: ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பமும் அழியும்.
பெரியாரைத் துணைக்கோடல் (45)
6.
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பொருள்: கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம்
பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்.
7.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
பொருள்: குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும்
பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர்
இன்றியும் தானே கெடுவான்.
8.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.*
பொருள்: தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக்
காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.
கொடுங்கோன்மை (56)
9.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
பொருள்: ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன்
அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது, வேல் போன்ற
ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாகும்.
அணி: உவமையணி
10.
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்
பொருள்: தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை
ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னவன், தன்
நாட்டை நாள்தோறும் இழக்க நேரிடுவான்.
கண்ணோட்டம் (58)
11.
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.*
பொருள்: பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன
பயன்?
அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?
அணி: எடுத்துக்காட்டு
உவமையணி
12.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு.
பொருள்: நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம்
காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.
13.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
பொருள்: விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக்
கொண்டவர்கள், பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக்
கொடுத்தாலும் அதனை உண்ணும் பண்பாளர் ஆவார்.
ஆள்வினை உடைமை (62)
14.
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். *
பொருள்: ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று
எண்ணிச் சோர்வு அடையாதிருக்க வேண்டும். அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை
தரும்.
15. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.
பொருள்: விடாமுயற்சி என்ற உயர்பண்பு
கொண்டவர்களால்தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.
16.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.*
பொருள்: முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம்
பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.
17.
பொறி இன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி.
பொருள்: ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பினும்
அது இழிவன்று. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.
18.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
பொருள்: சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற
செயலுக்கு இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவர்.
நன்றிஇல் செல்வம் (101)
19.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்
கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.
பொருள்: பிறருக்குக் கொடுக்காமலும் தானும்
அனுபவிக்காமலும் இருப்பவர் அடுக்கடுக்காய்ப் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும்
அதனால் பயன் இல்லை.
20.
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
பொருள்: பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும்
விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சுமரம்
பழுத்தது போன்றதாகும்.
அணி: உவமையணி
கற்பவை கற்றபின்...
1. படங்கள் உணர்த்தும் குறளின்
கருத்தினை மையமிட்டு வகுப்பில் கலந்துரையாடுக.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
2. கதைக்குப் பொருத்தமான குறளைத்
தேர்வு செய்து காரணத்தை எழுதுக.
"சின்னச்சாமி... யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க..... யாராய்
இருக்கும்...." மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.
"தெரியலப்பா ..."
"இறங்கி யாருன்னு பாரு...."
வாட்டசாட்டமாய், கண்ணாடியும்
அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்..
"ஐயா..நீங்க..."
"வெளியூருப்பா.. வண்டி நின்னு போச்சு....!"
"அப்படியா... வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு
வாங்க. மழை வர்ற மாதிரியிருக்கு.. ஊரு ரொம்ப தூரம்.. வேற வண்டியும் வராது..."
அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும்
பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில இருந்தோம்.. சிறிது
தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு... நாங்க வீட்டுக்குப்
போயிட்டோம்.
இரவுல தூங்கப் போறப்ப... அப்பா சொன்னார். தம்பி.... அந்த
சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு... வேற
யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில.. கட்டுப் போட்டுக்கிட்டு
இருந்தாங்க... பாவம் படிச்சவரா இருக்காரு... சூழ்நிலை புரியாம... வரமாட்டேன்னு
சொன்னாரு, இப்ப வேதனைப்பட்டாரே...
அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்.
ஆ) பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
இ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்.
குறுவினா
1. ‘நச்சப்படாதவன்’ செல்வம் - இத்தொடரில் வண்ணம் இட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாதவன். ஆகையில், எவராலும் விரும்பப்படாதவர்.
2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் - இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் - இன்னிசை அளபெடை
3. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
உயிரைவிடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும் : உயிரினும் ஓம்பப் படும்
ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது : நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று
ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் : ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
4. எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
(அ) கூவிளம் - தேமா - மலர்
(ஆ) கூவிளம் - புளிமா - நாள்
(இ) தேமா - புளிமா - காசு
(ஈ) புளிமா - தேமா - பிறப்பு
[விடை: கூவிளம் - தேமா – மலர்]
சிறுவினா
1. வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு''
- இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
அணி சுட்டல் :
இக்குறளில் உவமையணி இடம் பெற்றுள்ளது.
இலக்கணம்
உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் (பொருள்) ஒரு வாக்கியமாகவும் அமைந்து இடையில் உவம உருபு வெளிப்பட்டு வருவது உவமையணி எனப்படும்.
விளக்கம் :
வழிப்பறி செய்பவன் வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வான். அதுபோல, ஓர் அரசன் தன் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்கு அதிகமான வரியை விதிக்கின்றான்.
பொருத்தம்
உவமை - வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்தல் உவமேயம் - ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மன்னன் வரி விதித்தல் உவம உருபு - போல்
இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து, உவம உருபு வெளிப்பட்டு வந்துள்ளதால் இது உவமையணியாகும்.
2. கவிதையைத் தொடர்க.
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
இதைப் பார்த்து என் நெஞ்சும் பதறுதடி
இரக்கம் இல்லா மனிதர்கள்
உண்மை அறியாத மனிதர்கள்
தங்களுக்கும் இந்நிலை வரும் என அறியாமல்
முகநூலில் போட அலைகிறதே!
மனிதநேயம் செத்துப் போச்சே
திருக்குறள் பற்றிய கவிதை
உரை (றை) ஊற்றி ஊற்றிப்
பார்த்தாலும்
புளிக்காத பால்!
தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்
- அறிவுமதி