முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்கள் - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | 9th Social Science : History: State and Society in Medieval India
பாடம் 7
இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
கற்றல் நோக்கங்கள்
❖ சோழர்கள் முதல் மொகலாயர் வரையிலான அரச வம்சாவளியினரும் அவர்களால் ஏற்பட்ட அரசியல் விளைவுகளும்
❖ மக்களின் சமூகப் பண்பாட்டு வாழ்வில் இஸ்லாமும், இஸ்லாமிய அரசின் செல்வாக்கும்
❖ தெற்கில் சோழ பாண்டிய விஜயநகர அரசர்கள் காலத்தில் ஏற்பட்ட நிறுவன, நிர்வாக மாற்றங்கள்
❖ கால ஓட்டத்தில் இலக்கியம், கலை, கட்டடக்கலை ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி
❖ வேளாண்மை, உற்பத்தித் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்
❖ கடல் வணிகம், வர்த்தகம், நகரமயமாதல் ஆகியவற்றின் முன்னேற்றம்
அறிமுகம்
இந்திய வரலாற்றின் இடைக்காலம் கி.பி.
(பொ.ஆ.) 7ஆம் நூற்றாண்டு முதல் (ஹர்ஷசாளுக்கியப் பேரரசுகளின் காலம்) 16ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசின் தொடக்கம் வரை எனவும் கி.பி.
(பொ.ஆ.) 16ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
(பொ.ஆ.) 18ஆம் நூற்றாண்டு வரை நவீன காலத்தின் தொடக்கம் எனவும் வரையறை செய்யப்படுகிறது . இக்காலப் பகுதியில் இந்தியாவின் பலபகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்த,
உறுதியான அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாயின. இம்மாற்றங்கள் சமூகபொருளாதார அடிக்கட்டுமானங்களையும் நாட்டின் வளர்ச்சியையும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாற்றியமைத்தது.
● முதலாம் இராஜராஜன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசின் விரிவாக்கம் பாண்டிய பல்லவ அரசுகளை மறையச் செய்து வடக்கே ஒரிசா வரை பரவியது.
● பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து பல நூற்றாண்டு காலம் நீடித்த முஸ்லிம்களின் ஆட்சி டெல்லியில் தொடங்கி வட இந்தியா முழுவதும் பரவியது. இஸ்லாம் மதம் இந்தியா முழுவதும் பரவியது.
●
13ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசின் மறைவைத் தொடர்ந்து அதன் விளைவாக தென்னிந்தியாவில் பல சமயம் சார்ந்த அரசுகள் தோன்றின. இறுதியில் தென்னிந்தியா முழுவதிலும் தனது ஆட்சி அதிகாரத்தை நிறுவிய விஜயநகரப் பேரரசு எழுச்சி பெற்றது. அது தென்னிந்தியாவில் சமயம் சார்ந்த ஆட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டது.
● கி.பி. (பொ.ஆ.) 1526இல் பாபர் இப்ராஹிம் லோடியை தோற்கடித்ததிலிருந்து வட இந்தியாவில் மொகலாயர் தலைமையில் முஸ்லிம்களின் ஆட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தும் பணி துவங்கியது. மொகலாயப் பேரரசு அதன் புகழின் உச்சத்தில் காபூலிலிருந்து குஜராத் மற்றும் வங்காளம் வரையிலும் காஷ்மீரத்திலிருந்து தென்னிந்தியா வரையிலும் பரவியிருந்தது.
● கி.பி. (பொ.ஆ.) 1498இல் மேலைக்கடற்கரையில் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து ஏனைய ஐரோப்பியரும் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.