Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | சுல்தானிய ஆட்சி நிர்வாகம்

வரலாறு - சுல்தானிய ஆட்சி நிர்வாகம் | 11th History : Chapter 10 : Advent of Arabs and turks

   Posted On :  18.05.2022 05:39 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 10 : அரபியர், துருக்கியரின் வருகை

சுல்தானிய ஆட்சி நிர்வாகம்

சுல்தானிய அரசு முறையானதோர் இஸ்லாமிய அரசாகக் கருதப்பட்டது.

சுல்தானிய ஆட்சி நிர்வாகம்

 

அரசும் சமூகமும்

சுல்தானிய அரசு முறையானதோர் இஸ்லாமிய அரசாகக் கருதப்பட்டது. சுல்தான்கள் பலரும், கலிபாவின் தலைமையைத் தாங்கள் ஏற்பதாகக் கூறினாலும் அவர்கள் முழு அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக விளங்கினர். இராணுவத் தலைவர் என்ற வகையில் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைமைத் தளபதி எனும் அதிகாரம் அவர்களிடமிருந்தது. நீதி நிர்வாகத் தலைவர் என்ற முறையில் மேல்முறையீட்டு உச்சநீதிமன்றமும் அவர்கள்தான். பூமியில் கடவுளின் பிரதிநிதியாகத் தாம் ஆட்சி செய்வதாக பால்பன் கூறினார். மதத்தின் பரிந்துரைகள் குறித்துத் தாம் கவலைப்படவில்லை என்று கூறிக்கொண்டு அலாவுதீன் கில்ஜி முழு அதிகாரத்தைக் கோரினார். இருப்பினும் அரசு மக்கள் நலனுக்கு இன்றியமையாதவற்றையே செய்தார்.

தில்லி சுல்தான் ஆட்சி, ஓர் அனைத்திந்தியப் பேரரசாகக் கருதப்பட வேண்டிய தகுதி கொண்டது. முகமது பின் துக்ளக் ஆட்சியின் முடிவுக் காலத்தில் ஒரு சில சிறிய பகுதிகளைத் தவிர, எதிரெதிர் முனைகளிலுள்ள காஷ்மீரத்தையும் கேரளத்தையும் உள்ளடக்கிய இந்தியா முழுவதும் தில்லியின் நேரடி ஆட்சிக்குள் வந்தது. அரச வாரிசுரிமை தொடர்பாக நன்கு வரையறுக்கப்பட்ட, ஒப்புக்கொண்ட விதிகள் இல்லை. எனவே, சுல்தானிய காலத்தில் வாரிசுரிமைப் போட்டி எழுவது வழக்கமாக நடந்தது. இக்தா (முக்திகள் அல்லது வாலிகள்) உரிமையாளர்கள் வரிகள் வசூலித்தனர்; அரச சேவைக்குப் படைக் குழுக்களைப் பராமரிப்பதற்கு சுல்தான்களுக்கு அவர்கள் தேவைப்பட்டனர். சுல்தான்கள், குறிப்பிட்ட சில பகுதிகளைத் தங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் (கலிஸா) வைத்துக்கொண்டனர். இத்தகைய பகுதிகளில் வசூலிக்கும் வருவாயிலிருந்தே சுல்தான்களின் சொந்த படைக்குழுக்களின் (ஹஷ்ம்-இ-கால்ப்) அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டது.

பிரதேச விரிவாக்கத்திற்கு ஏற்றாற்போல் நிதி ஆதாரமும் பெருகியது. உற்பத்தி பொருளில் பாதி என்ற அடிப்படையில் நிலவரி கடுமையாக விதிக்கப்பட்டது. பரம்பரையாக வரி வசூலித்து வந்தோர் (சௌத்ரிகள்), கிராமத் தலைவர் (கோட்கள்) ஆகியோரின் நிதித் தேவைகள் கடுமையாகக் குறைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டன. தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட வரி வசூல் ஒரு கடுமையான விவசாயக் கிளர்ச்சியை, குறிப்பாக தில்லி அருகே தோ-ஆப்-இல், தூண்டிவிட்டது (1332-34). இதுவும், தொடர்ந்து வந்த பஞ்சமும் தில்லிப் பகுதியிலும் தோ-ஆப்-இலும் உழவர்களுக்குக் கடன் வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண் வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வருமாறு முகமது-பின் -துக்ளக்கை நிர்ப்பந்தித்தன.

இராணுவப் படையெடுப்புகள், பதுக்கிய செல்வத்தை வெளிக்கொண்டு வந்தன, காடுகளை அழித்து நிலமாக்கியது, பிரதேசங்களுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான வணிகம் போன்றவை மக்கள் இடப்பெயர்ச்சியை ஊக்குவித்தது. அறிவாளிகளையும் மதப்பற்றுள்ளவர்களையும் ஒருங்கிணைத்தது. சுல்தானிய ஆட்சியின் படையரண் நகரங்களிலும் அவர்களின் வலுவான பிடியிலிருந்த பகுதிகளிலும் சமூகப் படிநிலை, குடியமர்வு ஆகியவற்றில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் நிர்வாகச் சிக்கல்களை உண்டாக்கின, பதினான்காம் நூற்றாண்டு முழுவதும் சுல்தான் ஆட்சி, அதிகரித்து வந்த அதன் வேறுபட்ட மக்கள்தொகையை, முக்தி (muqthi) எனும் மாகாண ஆளுநர்கள் மூலம் கட்டுப்படுத்த விரும்பியது. ஆனால், அவர்களது வல்லமையும் நிதி ஆதாரமும், இருப்பிடத்தில் இருந்த அரசியல் குழுக்களுடன் அணி சேர்வதற்கான சந்தர்ப்பமும் முகமது பின் துக்ளக் போன்ற கடுமையான, எதேச்சாதிகாரப் பேரரசர்களால் கூட அவர்களை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கின.

துருக்கிய – ஆஃப்கானிய அரசியல் வெற்றிகளைத் தொடர்ந்து மத்திய ஆசியாவிலிருந்து பெரிய அளவுக்கு இஸ்லாமிய சமூகங்கள் குடிபெயர்ந்தன. இந்தியா வாய்ப்புகளின் நாடாக கருதப்பட்டது. அனைத்து நிலைகளிலும் சமூகம், சிறப்புரிமைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. மதத்திற்கு அப்பாற்பட்டு பிரபுக்கள் வகுப்பினர் அனைவரும் செழிப்பான சமூக - பொருளாதார வாழ்க்கையை அனுபவித்தனர். சமகாலத்தில் உலகம் முழுவதும் இருந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிடுகிற போது சுல்தான்களும் பிரபுக்களும் சிறப்புரிமைகளுடன் வளமான வாழ்க்கையை அனுபவித்தனர். தொடக்கத்தில் துருக்கியர் மட்டுமே பிரபுக்களாக இருந்தனர். நீண்ட காலத்திற்கு ஆஃப்கானியரும் ஈரானியரும் இந்திய இஸ்லாமியரும் பிரபுக்கள் வகுப்பிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். இஸ்லாத்தில் ஒரு தனிநபரின் தனிப்பட்ட தகுதிநிலை, பிறப்பின் அடிப்படையில்லாமல் திறமைகளையும் செயல்களையும் மட்டுமே சார்ந்திருந்ததால் இஸ்லாமுக்கு மதம் மாறியவர்கள் சமூகத்தில் சமமாகவே பாவிக்கப்பட்டனர்

சமயம்

பல கடவுளர்களை வழிபட்ட இந்துக்களைப் போலன்றி, இஸ்லாமியர் ஓர் இறை வழிபாட்டைப் பின்பற்றினர். நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களின் ஓர் அடிப்படைத் தொகுப்பையும் அவர்கள் கடைப்பிடித்தனர். பகவத் கீதை குறிப்பிடுவதைப் போல, இந்துமதத்தில் வெகு நீண்ட காலமாக ஓரிறைப் போக்கு இருந்துவந்தது. இருப்பினும், அல்பெருனி சுட்டியதைப் போல, ஓரிறைக் கொள்கைக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள நெருக்கம், இக்கோட்பாட்டை ஓரத்திலிருந்து மையத்திற்குக் கொண்டுவர உதவியது.

பதிமூன்றாம் நூற்றாண்டில், கர்நாடகத்தில் பசவண்ணர் நிறுவிய லிங்காயத் பிரிவு ஒரு கடவுளையே (பரமசிவன்) நம்பியது. அப்பிரிவு சாதிப் பாரபட்சங்களை நிராகரித்தது, பெண்களுக்கு உயர் நிலையை அளித்தது, கூடவே பூசாரி பிராமணர்களின் ஏகபோகம் என்பதை இல்லாமல் ஆக்கியது. இதற்கு இணையாகத் தமிழ் நாட்டில் சித்தர்கள் விளங்கினர். ஒரு கடவுளைப்பாடிய அவர்கள், சாதியை, வைதீகத்தை மறுபிறப்பைச் சாடினர். தென் இந்திய பக்தி இயக்கத்தையும் ஓரிறைக் கொள்கையையும் வட இந்தியாவுக்குக் கொண்டு சென்றதில் இரண்டு பேர் முக்கியமான பங்கு வகித்தனர். அதிகம் அறியப்படாதவர்கள் : மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நாமதேவர் ஒருவர்; உருவ வழிபாட்டையும் சாதிப் பாகுபாடுகளையும் இவர் எதிர்த்தார், ஓரிறைக் கொள்கையைக் கடுமையாகப் பின்பற்றினார். இரண்டாமவர் இராமானுஜரைப் பின்பற்றிய இராமானந்தர்.


 

பொருளாதாரம்

தில்லி சுல்தானியம், சில முக்கியப் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. இதில் ஒன்று நில வரியைப் பணமாக வசூலித்தது. இதன் காரணமாக, உணவு தானியங்களும் இதர கிராமப்புறத் உற்பத்திப் பொருள்களும் நகரங்களை நோக்கி நகர்ந்தன; இதன் மூலம் நகர வளர்ச்சி ஒரு புதிய கட்டத்தை எட்டியது. பதினான்காம் நூற்றாண்டில், தில்லியும் தௌலதாபாத்தும் (தேவகிரி) உலகின் மாபெரும் நகரங்களாக விளங்கின. முல்தான், காரா, அவத், கௌர், கேம்பே (கம்பயத்), குல்பர்கா போன்ற இதர பெரிய நகரங்களும் இருந்தன.

 

இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் முக்கியத்துவம் என்னவென்றால், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சூறையாடல்கள், அபகரிப்புகள் இருந்தாலும், நீண்ட காலம் இந்து மதத்துடன் சக வாழ்வு வாழ்வதற்கான மன ஏற்பு தொடக்க காலம் முதல் காணப்படுவதே. இந்தியாவை வென்றடக்கிய முகமது கோரி, தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார். 1325இல் முகமது-பின்- துக்ளக், சமணத்துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வெளியிட்டார். அவரேகூட ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.

'பல கடவுள் வழிபாட்டாளர்களையும், இந்துக்களையும், மங்கோலியர்களையும், நாத்திகர்களையும் பஞ்சணையில் அமர வைத்து சகல மரியாதைகளும் செய்கிறார்கள்’ என்று இஸ்லாமிய ஆட்சியாளர்கள் குறித்து பரணி வெறுப்புடன் எழுதுகிறார். மேலும், இந்துக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கோவில்கள் கட்டிக்கொள்ளவும், திருவிழாக்கள் நடத்தவும், இஸ்லாமிய வேலையாட்களை வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, தாகூர், ஷா, மஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்படுகின்றன என்றும் பரணி எழுதுகிறார்.

பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே செப்புக் காசுகளோடு தங்க, வெள்ளிக் காசுகளையும் தில்லி சுல்தான்கள் வெளியிடத் தொடங்கினர்; இது வணிகம் விறுவிறுப்பாக நடந்ததை குறிக்கிறது. மேற்கு எல்லைப்பகுதிகளில் மங்கோலியப் படையெடுப்புகள் வெற்றிபெற்றபோதிலும், தரை வழியிலும் கடல் வழியிலும் நிகழ்ந்த இந்தியாவின் அயல் வணிகம், இக்காலத்தில் கணிசமாக வளர்ச்சி பெற்றது என்கிறார் இர்ஃபான் ஹபீப்

வணிகமும் நகர்மயமாக்கமும்

சுல்தான்களும் பிரபுக்களும் ஆடம்பரப் பொருள்களை மிகவும் விரும்பியதால் உள்நாட்டு வணிகம் புத்துயிர் பெற்றது. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் அரிதாக வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சியைக் குறிக்கும் விதத்தில் மீண்டும் வெளிவரத் தொடங்கின. ஆயினும் பண்டைக் காலத்தில் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்த வணிகக் குழுக்கள் சுல்தான்கள் காலத்தில் இருந்ததற்குச் சான்று இல்லை. சுல்தான்கள் ஆட்சி, பல முக்கியமான நகரங்களையும் பெருநகரங்களையும் உள்ளடக்கிய ஒரு நகர்ப்புறப் பொருளாதாரத்தால் இயங்கியது. தில்லி, லாகூர், முல்தான், காரா, லக்னோ, அன்ஹில்வாரா, கேம்பே, தௌலதாபாத் ஆகிய நகரங்கள் சமண மார்வாரிகள், இந்து முல்தானிகள், முஸ்லிம் போராக்கள், குரசானியர், ஆஃப்கானியர், ஈரானியர் ஆகியோரின் வணிக நடவடிக்கைகளால் செழித்திருந்தன. ஏற்றுமதி - இறக்குமதி வணிகம், தரை வழி, கடல் வழி என இரண்டின் மூலமும் நன்கு செழித்திருந்தது. குஜராத்திகளும் தமிழர்களும் கடல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். அதே நேரத்தில் இந்து முல்தானிகளும் முஸ்லிம் குரசானியரும் ஆஃப்கானியரும் ஈரானியரும் மத்திய ஆசியாவுடன் தரை வழி வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.

தொழில்துறை வல்லமை

சீனர் கண்டுபிடித்து அரபியர் கற்றுக்கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம், தில்லி சுல்தானியர் காலத்தில் இந்தியாவில் அறிமுகமானது. சீனர் கண்டுபிடித்த நூற்புச் சக்கரம், பதினான்காம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவுக்கு வந்தது; இது நூற்பவர்களின் உற்பத்தித் திறனை ஆறு மடங்கு அதிகரிக்க உதவியது; நூல் உற்பத்தியை மாபெரும் அளவுக்குப் பெருக்கியது. அதைத் தொடர்ந்து தறிகளில் மிதிப்பொறிகள் அறிமுகம் செய்யப்பட்டன. நூலுற்பத்தி பெருகியது போலவே நெசவு வேலையை விரைவுபடுத்த இது உதவியது. பதினைந்தாம் நூற்றாண்டில் வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவப்பட்டன. அதிகமாக செங்கல், கலவை பயன்படுத்தி நிலவறைத் தொழில்நுட்பத்தோடு கூடிய கட்டட நடவடிக்கைகள் ஓர் புதிய உச்சத்தை எட்டின.

கல்வி

இஸ்லாமிய உலகக் கல்வி மரபுகள் அறிமுகமாயின. அடிப்படையாக இருந்தது மக்தப்; இங்கே ஒரு பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்குப் படிக்கவும் எழுதவும் கற்றுத்தந்தார். மேலும் உயர் நிலையில், பல்வேறு பாடங்களிலுள்ள முக்கியமான பிரதிகளைக் கற்க அறிஞர்களிடத்தில் தனி மாணவர்கள் படித்தனர். உயர் கல்வியின் மேலும் ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவம் மதரஸா (நேர்ப் பொருள்: கற்றுக்கொள்கிற இடம்). பதினோறாம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலும் ஈரானிலும் இது பரவலாக நிறுவப்பட்டது. மேலும் அங்கிருந்து இதர இஸ்லாமிய நாடுகளுக்குப் பரவியது. வழக்கமாக மதரஸாவுக்கு ஒரு கட்டடம் இருந்தது; தனி ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர். அங்கே மாணவர்கள் தங்கி இருக்கவும் நூலகத்துக்கும் தொழுகைக்கும் எனச் சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஃபெரோஸ் துக்ளக், தில்லியில் ஒரு பெரிய மதரஸாவைக் கட்டினார்; அந்த அற்புதமான கட்டடம் இன்றும் இருக்கிறது; முதன்மையாக அங்கே “குர்ஆன் உரை, இறைதூதரின் வாக்குகள், இஸ்லாமியச் சட்டங்கள் (ஃபிக்)” கற்பிக்கப்பட்டன என்று பரணியின் விவரணையிலிருந்து தெரிகிறது. சிக்கந்தர் லோடி (1489-1517), தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்தப்களிலும் மதரஸாக்களிலும் ஆசிரியர்களை நியமித்தார். அவர்களுக்கு நிலமும் மானியமும் ஒதுக்கினார் என்பது திட்டவட்டமாக தெரிகிறது.

வரலாற்றியல்

அரபு பாரசீகக் கல்வியறிவுடன் மதம் - சாரா அறிவியல்களும் இந்தியாவுக்கு வந்தன. கூடுதலாக வந்த இன்னுமொரு குறிப்பிடத்தக்க விடயம் முறையான வரலாறெழுதுதலாகும். அரபியரின் சிந்துப் படையெடுப்பு குறித்து எழுதப்பட்ட நூல் சச்நாமா (ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரபிய மூல நூலின் பதிமூன்றாம் நூற்றாண்டுப் பாரசீக மொழிபெயர்ப்பு). தில்லியில் சுமார் 1260இல் எழுதப்பட்ட மின்ஹஜ் சிராஜின் தபகத்-இ-நசிரியைப் போன்று பிற்கால வரலாறெழுதுதலின் ஒத்திசைவும் தர்க்க ஒழுங்கும் இல்லாமல் இருக்கிற போதிலும் அது வரலாற்று ஆராய்ச்சியில் முன்னேற்றத்தை காட்டுவதாக உள்ளது.

சூஃபியிசம்

பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் சூஃபிகள் மத்தியில் செல்வாக்கு மிக்க இரு பிரிவுகள் தோன்றின : முல்தானை மையமாகக் கொண்ட சுஹ்ரவார்தி, தில்லியிலும் பிற இடங்களிலும் கோலோச்சியசிஸ்டி ஆகியன. மிகப்பிரபலமான சிஸ்டி துறவி ஷெய்க் நிசாமுதீன், தமது உரையாடல்களில் (1307-1322) இறை நம்பிக்கைக்கு முற்பட்ட கட்டத்திலிருந்த சூஃபியிசம் பற்றிச் செம்மையான ஒரு விளக்கமளித்தார். ஜலாலுதீன் ரூமி (1207-1273), அப்துர் ரஹ்மான் ஜமி (1414-1492) ஆகியோரின் பாரசீகக் கவிதைகள் வழியாகவும், பிறகு இந்தியாவில் அஷ்ரஃப் ஜஹாங்கிர் சிம்நனி (பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) மேற்கொண்ட முயற்சிகள் வழியாக (1240இல் இறந்த) இப்ன் அல்அரபியின் கருத்துக்கள் செல்வாக்கு பெறத் தொடங்கிய போது சூபிசம் இறை நம்பிக்கை கொண்டதாக மாறியது. குறிப்பாக, ஏற்கப்பட்ட இறை நம்பிக்கை இந்திய இஸ்லாமிய சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய அதே காலத்தில் ஆதி சங்கரின் இறை நம்பிக்கை கோட்பாடு வைதீக சிந்தனைக்குள் கூடுதல் செல்வாக்கை பெற்றுக் கொண்டிருந்தது.

கலீபா

முகமது நபியின் வாரிசாகக் கருதப்படும் கலீபாக்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தின் குடிமை, மதம் தொடர்பான விவகாரங்களின் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர். 1258 இல் பாக்தாத் நகரை மங்கோலியர் கைப்பற்றும்வரை கலீபா அந்நகரை ஆட்சி செய்தார். பின்னர் எகிப்தில் 1516-17ஆம் ஆண்டுகளில் ஆட்டோமானியர் வெற்றி பெரும்வரை ஆட்சி செய்தார். இதன் பின்னர் ஆட்டோமானிய சுல்தான்களே இப்பதவியை வகித்து வந்தனர். ஆட்டோமானியப் பேரரசு நீக்கப்பட்டு (1920) முஸ்தபா கமால் அத்தாதுர்கின் தலைமையில் துருக்கியக் குடியரசு உருவானபோது இக்கலீபா பதவி ஒழிக்கப்பட்டது.

 

சாதியும் பெண்களும்

“இந்திய நிலப்பிரபுத்துவ”த்திலிருந்து சுவீகரித்துக்கொண்ட சமூக நிறுவனங்கள் பலவற்றை சுல்தான்கள் மாற்றி அமைக்கவில்லை. அடிமை முறை ஏற்கெனவே இந்தியாவில் நிலவியது. இருப்பினும், பதிமூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் அடிமைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. போர், வரி செலுத்தத் தவறுதல் ஆகிய இரு நேர்வுகளாலும் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். வீட்டுவேலை செய்வதிலும் கூடவே கைத்தொழிலிலும் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர். கிராம சமுதாயமும் சாதி அமைப்பும் மாற்றமின்றி நீடித்தன. பாலினச் சமத்துவமின்மை, தடையின்றி நடைமுறையில் நீடித்தது. மத்திய கால இந்தியப் பெண்களிடம் கல்வியின்மை பரவலாகக் காணப்பட்டது. மேலும் சில இந்து சாதிகளில், உயர்குடிப் பெண்கள் கல்வியறிவு பெறுவது அவமானத்திற்கு உரியதாகவும் கருதப்பட்டது. மேல் தட்டு இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது; மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர் தவிர வேறெந்த ஆண்களோடும் எவ்விதத் தொடர்புமின்றி ஸெனானாவில் (பெண்கள் வசிப்பிடத்தில்) ஒதுக்கி வைக்கப்பட்டனர். செல்வப் பெண்கள் மூடு பல்லக்கில் பயணம் செய்தனர்.

பர்தா அணிந்திருந்தபோதிலும் சில விஷயங்களில் இஸ்லாமியப் பெண்களுக்கு, பெரும்பாலான இந்துப் பெண்களைக் காட்டிலும் ஒப்பிட்டளவில் சமூகத்தில் உயர்ந்த தகுதியும் அதிக சுதந்திரமும் இருந்தன. அவர்கள் தங்களின் பெற்றோரிடமிருந்து சொத்துரிமை பெறவும், மண விலக்கு பெறவும் உரிமை இருந்தது; இந்தச் உரிமைகள் இந்துப் பெண்களுக்கு இல்லை. ராஜபுத்திரர்களிடையே இருந்ததைப் போல், பல இந்து சமுதாயங்களில் பெண் குழந்தை பிறப்பது, ஒரு கெடுவாய்ப்பாகக் கருதப்பட்டது. இஸ்லாமிய மரபில், விதவைகள் உடன்கட்டை ஏறும் (சதி) வழக்கம் அறியப்பட்டிருக்கவில்லை. பெண்கள் படிக்கவும் எழுதவும் கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. அதே நேரத்தில் அது பலதார மணத்திற்கு ஏற்பளித்தது.

கலப்புப் பண்பாட்டின் பரிணாமம்

இந்தியருடனான துருக்கியரின் பரஸ்பரத் தொடர்பு, கட்டடக்கலையிலும் நுண்கலையிலும் இலக்கியத்திலும் அதன் தாக்கத்தைக் ஏற்படுத்தியது.

 

சுல்தான் ஃபெரோஸ் துக்ளக், 1,80,000 அடிமைகள் வைத்திருந்ததற்காகப்புகழ்பெற்றவர். இதில் 12,000 பேர் கைவினைஞர்களாகப் பணிபுரிந்தனர். அவரது முதன்மை அமைச்சர் கான் ஜஹன் மக்பூல் 2000த்துக்கும் அதிகமான பெண் அடிமைகளை வைத்திருந்தார்.

கட்டடக் கலை

வளைவு, கவிகை, நிலவறைகள், சுண்ணாம்புக் கலவைப் பயன்பாடு, சாராசெனிய அம்சங்கள் ஆகியவை இந்தியாவில் அறிமுகமாயின. பளிங்குக்கல், சிகப்பு, சாம்பல் மஞ்சள் நிற மணற்கல் பயன்பாடு கட்டடங்களுக்குப் பேரழகூட்டின. சுல்தான்கள், ஏற்கெனவே இருந்த கட்டடங்களைத் தம் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டனர். இதற்கு, தில்லியில் குதுப் மினாருக்குப் பக்கத்தில் அமைந்துள்ள குத்புதீன் ஐபக்கின் குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியும் அஜ்மீரிலுள்ள அத்ஹை- தின்-க ஜோப்ராவும் சிறப்பான எடுத்துக்காட்டுகள். ஒரு சமண மடாலயத்தின் மீது கட்டப்பட்ட ஒரு இந்துக் கோவில், குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியாக மாற்றி அமைக்கப்பட்டது; ஒரு மசூதியாக மாற்றப்படுவதற்கு முன்பு அத்ஹை-தின்-க-ஜோப்ரா, ஒரு சமண மடாலயமாக இருந்திருக்கிறது.



இல்துமிஷ் கட்டி முடித்த போது 72.5 மீட்டர் உயரமிருந்த குதுப் மினார், ஃபெரோஸ் ஷா துக்ளக் மேற்கொண்ட பழுதுநீக்கும் பணிகளால் 74 மீட்டராக உயர்ந்தது. 379 படிகள் கொண்ட மினார், அதன் உயரத்துக்காகவும், -மாடிகளை அடையாளப்படுத்துகிற துருத்தி நிற்கிற உப்பரிகைகளுக்காகவும், படிப்படியான கோபுரச் சரிவுக்காகவும், கோபுரத்தைச் சுற்றிலுமுள்ள சரிவான விளிம்பு அலங்கரிப்புகள் ஒரு வளைவு தோற்றத்தைத் தருவதற்காகவும் சிறப்புடையது.

மேற்காசியாவிலிருந்து கைவினைஞர்கள் வந்து சேர்ந்ததும் வளைவுகளும் கவிகைகளும் துல்லியமும் முழுமையும் அடைந்தன. படிப்படியாக உள்ளூர் கைவினைஞர்களும் இதில் பயிற்சி பெற்றனர். முதல் மெய்யான வளைவால் அலங்கரிக்கப்பட்டது பால்பனின் கல்லறை. குவ்வாத் உல் இஸ்லாம் மசூதிக்கு ஒரு நுழைவாயிலாக அலாவுதீன் கில்ஜி கட்டிய அலாய் தர்வாஸா, முதல் உண்மையான கவிகையாகும். கியாசுதீன் துக்ளக்கும், முகமது பின் துக்ளக்கும் தலைநகர் தில்லியின் துக்ளகாபாத்தில் யமுனை நதியைத் தடுத்து செயற்கை ஏரி ஒன்றை உருவாக்கி அதன் நடுவில் அமைந்திருந்த கோட்டை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கியாசுதீன் துக்ளகின் கல்லறை, ஓர் உயர்ந்த மேடையின் மீது கவிகைகளைக் கொண்ட சாய்வுச் சுவர் அமைப்பை அறிமுகப்படுத்தியது. ஃபெரோஸ் துக்ளகின் கட்டடங்கள், குறிப்பாக அவரது உல்லாச விடுதியான ஹவுஸ் காஸ், இந்திய, சாராசெனிய அம்சங்களை ஒன்று விட்டு ஒன்றான அடுக்குகளில் இணைத்திருப்பது, ஓர் ஒருங்கிணைப்பு உணர்வைக் காட்டுகிறது.



சிற்பமும் ஓவியமும்

கட்டடங்களை விலங்கு மற்றும் மனிதச் சித்திரங்கள் கொண்டு அலங்கரிப்பது இஸ்லாமிய விரோதம் என்று மரபான இஸ்லாமிய இறையியல் கருதியது. எனவே இஸ்லாத்துக்கு முந்தைய கட்டடங்களில் காணப்பட்ட நன்கு செதுக்கப்பட்ட உயிரோட்டம் கொண்ட உருவங்களுக்குப் பதிலாக பூ மற்றும் இதர வடிவ வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. தனிச்சிறப்பான கையெழுத்துப் பாணியில் பொறிக்கப்பட்ட குர்ஆன் வாசகங்களைக் கொண்டு கட்டடங்களை அழகுப்படுத்தும் கலையான அரபிய சித்திர எழுத்து வேலை, கட்டடங்களுக்கு எழிலூட்டியது.

இசையும் நடனமும்

இசை என்பது கூட்டிணைவுப் போக்குகள் தெளிவாக வெளிப்படுகிற ஒரு துறையாகும். ரபாப், சாரங்கி போன்ற இசைக்கருவிகளை இஸ்லாமியர் கொண்டுவந்தனர். இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார். சூஃபிகளின் மனனப்பயிற்சி, இசையோடு சேர்ந்து காதல் கவிதைகளைப் பாடுதல் போன்றவை இசையைப் பரவலாக்க உதவியது. சூஃபி துறவி பிர் போதன் இக்காலத்தின் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார். இசையின் வளர்ச்சிக்கு அரச ஆதரவும் இருந்தது. ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ராக்தர்பன் என்ற இந்திய சமஸ்கிருத இசை நூலைப் பாரசீக மொழிக்குப் பெயர்த்ததன் மூலம் ஒத்திசைவுக்கு இட்டுச்சென்றது. நடனமும் அரசவையில் ஒரு உந்துதலைப் பெற்றது. இசைஞர் நுஸ்ரத் காட்டன் நடனக்காரர் மிர் அஃப்ரோஸ், ஜலாலுதீன் கில்ஜி அரசவையில் இருந்ததை ஜியாவுத்தீன் பரனி பட்டியலிடுகிறார்.

இலக்கியம்

பாரசீக உரைநடையிலும் கவிதையிலும் ஒரு முக்கியமான நபராக விளங்குபவர் அமிர் குஸ்ரு. தமது “ஒன்பது வானங்கள்” (Nu Siphr) நூலில் தம்மை ஓர் இந்தியன் என்று அழைத்துக்கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார். இந்நூலில், அவர் இந்தியாவின் வானிலையை, அதன் மொழிகளை குறிப்பாக சமஸ்கிருதத்தை; அதன் கலைகளை, அதன் இசையை, அதன் மக்களை, அதன் விலங்குகளையும் கூடப் போற்றுகிறார். இஸ்லாமிய சூஃபி துறவிகள், இலக்கியத்தில் ஆழ்ந்த தாக்கம் செலுத்தினர். சூஃபி துறவி நிசாமுதீன் அவுலியாவின் உரையாடல்களைக் கொண்ட "ஃபவாய் துல் ஃபவாத்" என்ற ஒரு நூலை அமிர் ஹாஸ்ஸன் தொகுத்தார். ஜியவுத்தீன் பரனி, சம்சுதீன் சிராஜ் அஃபிஃப், அப்துல் மாலிக் இஸ்லாமி ஆகியோரின் எழுத்துக்களுடன் சேர்ந்து ஒரு வலுவான வரலாறு எழுதுகிற சிந்தனைப் போக்கு உதித்தது. பாரசீக உரைநடையின் ஆசானாக ஜியாவுத்தீன் பரனி தோன்றினார். ஃபுதூ உஸ் சலாதின் என்ற தனது கவிதைத் தொகுப்பில் அப்துல் மாலிக் இஸ்லாமி, கஜனவிய காலம் தொடங்கி முகமது-பின்-துக்ளக் ஆட்சி வரையிலுமான இஸ்லாமியர் ஆட்சியின் வரலாற்றைப் பதிவு செய்தார்.


சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்ததன் மூலம் பாரசீக இலக்கியம் வளமடைந்தது. பாரசீகச் சொற்களுக்கு நிகரான ஹிந்தாவி சொற்களைக் கொண்ட அகராதிகள் தொகுக்கப்பட்டன. இவற்றுள் மிகவும் முக்கியமானவை: ஃபக்ருத்தின் கவ்வாஸ் இயற்றிய ஃபரங்-இ-கவாஸ் முகம்மத் ஷதியாபடி இயற்றிய மிஃப்தஜூ-உல்-ஃபுவாஜாலா ஆகியனவாகும். கிளி நூல் எனும் துதிநமஹ என்பது ஜியா நக்ஷபி, பாரசீக மொழியில் மொழிபெயர்த்த சமஸ்கிருதக் கதைகளின் தொகுப்பாகும். மகாபாரதமும் ராஜதரங்கிணியும் கூடப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

சமஸ்கிருத இலக்கியத்தின் முன்னேற்றத்தை தில்லி சுல்தானிய ஆட்சி தடுக்கவில்லை. உயர் அறிவுபூர்வ சிந்தனை மொழியாக சமஸ்கிருதம் தொடர்ந்தது. பேரரசின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சமஸ்கிருதப் பள்ளிகளும் கல்வி நிலையங்களும் தொடர்ந்து செழித்தன. தில்லியிலுள்ள 1276ஆம் ஆண்டுக்குரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு (பாலம் பவோலி), சுல்தான் பால்பனின் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணு பகவான், எந்தக் கவலைகளுமின்றிப் பாற்கடலில் துயில்கிறார் என்கிறது. சமஸ்கிருத இலக்கியத்தில் அரபு, பாரசீக மொழிகளின் தாக்கத்தை, மொழிபெயர்ப்புகள் வழி உணரலாம். ஸ்ரீவரா, கதாகௌடுக என்ற தமது நூலில், யூசுஃப் ஜுலைகாவின் கதையை ஒரு சமஸ்கிருதக் காதல் பாடலாகச் சேர்த்திருக்கிறார். காஷ்மீர அரசர்களின் வரலாறான ஜைனவிலாஸ் நூலை இயற்றுவதற்கு பட்டவதார, ஷா நாமா எனும் ஃபிர்தௌசியின் நூலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ளார்.

Tags : History வரலாறு.
11th History : Chapter 10 : Advent of Arabs and turks : Administration of the Sultanate History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 10 : அரபியர், துருக்கியரின் வருகை : சுல்தானிய ஆட்சி நிர்வாகம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 10 : அரபியர், துருக்கியரின் வருகை