பணம் மற்றும் கடன் | பொருளியல் - பண்டமாற்று முறை | 9th Social Science : Economics: Money and Credit
பண்டமாற்று முறை
மனிதர்கள் எப்போதுமே பணத்தினைப் பயன்படுத்தி வந்தார்களா என்று கேட்டால், இல்லை என்பதே பதில் ஆகும். அப்படியானால் மனித வாழ்வில் பணம் எப்போது எந்த வடிவில் அறிமுகமானது? அது எவ்வாறு காலப்போக்கில் புதிய வடிவங்கள் பெற்றது? என்பன குறித்து இப்படத்தில் அறிந்து கொள்ளலாம்.
பண்டைக் காலத்தில் மனிதர்கள் வேட்டையாடுபவர்களாகவும் உணவு சேகரிப்பவர்களாகவும் தமக்கான உணவைப் பெற்றனர். அவர்கள் குகைகள்,
காடுகளில் வாழ்ந்தனர். படிப்படியாக வேட்டையாடுவதற்காகவும் உணவு சேகரிப்பதற்காகவும் கருவிகளைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நெருப்பின் பயனையும் வேளண்மை செய்யவும் கற்றுக்கொண்டனர்.
மண்ணைப் பயன்படுத்தித் தமக்கான வீடுகளைக் கட்டிக்கொண்டு, ஒரே இடத்தில் வாழத் தொடங்கினர். மேலும் மண்ணைப் பயன்படுத்தி மட்பாண்டங்களையும் தயாரித்தனர்.
வேளாண்மை மூலம் உற்பத்தி அதிகரித்ததால் கைவினைப் பொருள் தயாரிப்பதிலும் ஈடுபட்டனர். இவ்வாறு உபரியாக மீதமாகும் உணவுப்பொருள்களையும் தாங்கள் தயாரித்த மண்பாண்டம் போன்ற பொருள்களையும் அவை தேவைப்படும் மனிதர்களுக்குப் பரிமாற்றம் செய்தனர். எடுத்துக்காட்டாக, ஒரு சமுதாயத்திடம் அதிக உணவுப்பொருட்கள் இருந்தால் அவற்றை மண்பாண்டங்கள் உபரியாக வைத்திருப்பவர்களிடம் பண்ட மாற்றம் செய்தனர். அதேபோல, ஒரு பகுதியில் அதிகம் உற்பத்தியாகும் தானியம் இன்னொருபகுதியில் அதிகம் காணப்படும் விளைபொருளுக்குப் பண்டமாற்றம் செய்யப்பட்டது இவ்வாறு பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்களே வணிகத்தின் முதல் வடிவம் என்று கூறலாம்.