பொருளியல் - பணம் மற்றும் கடன் | 9th Social Science : Economics: Money and Credit
அலகு 3
பணம் மற்றும் கடன்
கற்றல் நோக்கங்கள்
❖ பண்டமாற்று முறையைப் பற்றி அறிந்து கொள்ளல்
❖ பணத்தைப் பற்றியும் பணப்பரிமாற்றம் பற்றியும் புரிந்து கொள்ளல்
❖ இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கினைப் பற்றித் தெரிந்து கொள்ளல்.
❖ பல்வேறு கடனுதவி பற்றியும் அதன் பயனாளர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளல்.
அறிமுகம்
இப்பாடம் பணத்தின் வரலாறு பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் கூறுகிறது. நம் நாட்டின் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கினைப் பற்றி எடுத்துரைக்கிறது. அந்நியச் செலாவணி,
பண விநியோகம், பல்வகையான கடனுதவிகள் போன்றவற்றையும் விளக்குகிறது. இவை மட்டுமின்றி, இக்காலத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்,
வங்கிச் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் நடைபெற எவ்வாறு துணைபுரிகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
மனிதர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் பெரும்பான்மையான பொருள்கள் பணத்தால் மதிப்பிடப்படுகின்றன. மக்களின் உழைப்பிற்கான ஊதியம்,
கூலி சேவைக் கட்டணங்கள் முதலியன பணத்தின் மதிப்பில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நாம் செலுத்தும் வரிகள்,
தீர்வைகள் ஆகியவையும் பணத்தின் மதிப்பிலேயே செலுத்தப்படுகின்றன. நம் வீட்டில் ஒவ்வொரு மாதமும் நமது பெற்றோர் அந்த மாதத்துக்கான செலவுகளை மதிப்பிடுவதைப் பார்த்திருப்போம். அப்போது இந்த மாத வருமானம் எவ்வளவு?
எதிர்பார்க்கப்படும் செலவுகள் எவை?
சேமிப்பு வட்டி செலுத்த வேண்டியது எவ்வளவு? என்பதைப் பணத்தின் அடிப்படையில் கணக்கிடுவதைக் காணலாம்.
வீடுமட்டுமல்லாமல் ஒருநாட்டின், மாநிலத்தின் நிதிநிலை அறிக்கைகள்கூட பணத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்படுகின்றன. அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகூட தமது நிதிநிலையைப் பணத்தின் அடிப்படையில் கணக்கிடுகின்றன. இவ்வாறு பணம் என்பது நமது வாழ்வில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.