நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு - காரணமாக இருந்த அம்சங்கள் | 9th Social Science : History: The Beginning of the Modern Age
காரணமாக இருந்த அம்சங்கள்
நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து,
ஐரோப்பா படிப்படியாக நகரமயமாக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இந்தச் செயல்முறை முதலில் இத்தாலியில் தொடங்கியது. காரணம், அதன் வளம்கொழிக்கும் மத்தியதரைக்கடல் வர்த்தகமே. அராபியர்கள் கிழக்கிலிருந்து நறுமணப் பொருட்களைக் கொண்டு வந்தனர். பிறகு அவற்றை மத்தியதரைக்கடல் பகுதிகளிலிருந்த துறைமுகங்களுக்கு நிலவழிப்பாதைகள் வழியாக அனுப்பி வைத்தனர். இந்த வணிகத்தின் மூலம் வெனிஸ்,
ஜெனோவோ போன்ற இத்தாலிய நகர அரசுகள் அளவற்ற ஆதாயத்தை அடைந்தன, வணிகத்தின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து,
இத்தாலியில் வங்கி மற்றும் நிதிநிறுவனங்களின் வலிமைமிக்கதோர் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில்,
மறுமலர்ச்சி, மதச்சீர்திருத்தம், கடல் ஆய்வுப் பயணங்கள் போன்றவற்றிற்கான புதிய சிந்தனைகள் பிறந்தன.
அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு நவீன மயமாதலை வேகப்படுத்தியது. முன்னதாக,
"வெல்லும்" (Vellum) என அழைக்கப்பட்ட, விலங்குத் தோலின் மீது கையினால் எழுதப்பட்ட எழுத்துப்பிரதிகளே பயன்பாட்டில் இருந்தன. அவற்றை,
சிறப்புரிமை பெற்ற ஒரு சிலர் மட்டுமே பெற்றுப் படிக்க முடியும். பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜோஹன்னஸ் கூட்டென்பர்க் (கி.பி.
(பொ. ஆ.) 1394 - 1468] என்பவர் ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். ஒரு கையெழுத்துப் பிரதியின் பல மறுபிரதிகளின் உற்பத்தியை அச்சு இயந்திரம் சாத்தியமாக்கியது;
மேலும், மேற்கு ஐரோப்பா முழுவதிலும் அவை பரவுவதற்கும் வழி வகுத்தது. கூட்டென்பர்க் அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு நிகழ்ந்ததற்குப் பின், ஐம்பது ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதிக்குள் சுமார் ஆறு மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விட்டன. அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு,
அறிவைப் பரந்து விரிந்ததாக ஆக்கியதோடு மட்டும் நிற்கவில்லை; அதோடு கூட விமர்சனரீதியான சிந்தனையையும் முன்னெடுத்துச் சென்றது.
உதுமானியத் துருக்கியரால், பைஸாண்டியப் பேரரசின் தலைநகரான கான்ஸ்டாண்டி நோபிள், கி.பி. (பொ. ஆ.) 1453 ஆண்டு கைப்பற்றப்பட்டது. இந்நிகழ்வு மறுமலர்ச்சி ஏற்பட முக்கிய காரணமாகவும். புதிய நிலவழிகளின் கண்டுபிடிப்புகளுக்கும் இட்டுச் சென்றது. துருக்கியர் கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றியதற்குப் பின், மேற்கத்திய உலகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாகப் பல நூற்றாண்டுகளாகத் திகழ்ந்து வந்திருந்த அந்த நகரத்தை விட்டு கணிசமான எண்ணிக்கையிலான அறிவாளிகள், கலைஞர்கள், கைவினை வல்லுநர்கள் இத்தாலிய நகர அரசுகளுக்கு இடம் பெயர்ந்து சென்றனர்.