வரலாறு - வட இந்தியாவில் இரும்புக்காலம் | 11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures
வட இந்தியாவில் இரும்புக்காலம்
வட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 1100 முதல் பொ.ஆ.மு. 800 வரையாகும். வட இந்தியாவில் ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் கிடைப்பதாக 1000க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் அதிகமானவை கங்கை - யமுனை சமவெளிப் பகுதிகளில் உள்ளன. மத்திய இந்தியாவிலும் கிழக்கு கங்கைப் பகுதியிலும் கருப்பு - சிவப்பு மட்பாண்டப் பண்பாட்டிற்குப் பின்னர் இம்மட்பாண்டப் பண்பாடு தோன்றியது எனலாம்.
இக்கால மட்பாண்டங்களில் நேர்த்தியான சாம்பல் நிறத்தில் வடிவியல் வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் தொடக்க கால அரசியல் உருவாக்க காலத்தைச் சேர்ந்தவை. வேத நூல்கள் மூலம் அறியப்படும் குருபாஞ்சால அரசுகளோடு இவை தொடர்பு கொண்டவையாகும். ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டைத் தொடர்ந்து வட இந்தியாவில் மெருகேற்றப்பட்ட கருப்பு நிற மட்பாண்டப் பண்பாடு தோன்றியது. இது மௌரியர் காலத்து மகாஜனபதங்களோடு தொடர்புடையதாகும்.
ஓவியம் தீட்டிய சாம்பல்நிற மட்பாண்டங்கள் கிடைக்கின்ற இடங்கள் நாட்டுப்புற வாழ்வையும் வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. இக்காலகட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரிதானவை. அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகின்றன. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்ட பண்பாடு வட இந்தியாவின் இரும்புக் காலப் பண்பாடாக கணக்கிடப்படுகிறது. தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன் கூடிய பெருங்கற்காலப் பண்பாடாக உள்ளது.