இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு - காலனி ஆதிக்க அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் | 12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement
காலனி ஆதிக்க அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள்
காங்கிரசை ஒத்த தளத்தில் வன்முறையைக் கையில்
எடுத்து ஆங்கிலேய ஆட்சியை அப்புறப்படுத்த முயற்சி செய்த புரட்சிகர குழுக்களும் உருவாகின.
விடுதலைப் போரில் புரட்சிகர இயக்கங்கள் முக்கியப்பங்கு வகித்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின்
இறுதியில் தொடங்கி வங்கப்பிரிவினையின் காலகட்டம் வரை அது முடுக்கத்தைப் பிடித்தது.
முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கையை புரட்சிகர அமைப்புகளின்
அங்கத்தினர்கள் எழுப்பினர். மகாராஷ்டிரா, வங்காளம், பஞ்சாப் ஆகியன புரட்சிகர செயல்பாட்டின்
தீவிரக் களமாக அமைந்தன. குறுகிய காலத்திலேயே சென்னை மாகாணமும் புரட்சிகர நடவடிக்கையின்
ஒரு தீவிர களமாக இருந்தது.
வளர்ந்துவந்த தேசிய இயக்கத்தைக் கட்டுப்படுத்தும்
வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றியத்
தகவல்களை இரகசியமாகச் சேகரிப்பதற்காக 1903இல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை
(CID) உருவாக்கினார். பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் (1908), வெடிபொருட்கள்
சட்டம் (1908), அதன்பிறகு இந்திய பத்திரிகைகள் சட்டம் (1910), தேசத்துரோக கூட்டங்கள்
தடுப்புச் சட்டம் (1911) ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன. வெளிநாடுகளில் இருந்த சில புரட்சியாளர்களின்
தொடர்பில் சில இந்திய தேசியவாதிகள் இருந்ததாக பிரிட்டிஷார் சந்தேகப்பட்டனர். வெளிநாட்டினரின்
நுழைவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினர் அவசரச்சட்டம் 1914இல் இயற்றப்பட்டது.
புரட்சிகர இயக்கங்களின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கும் நோக்கில் இவற்றில் பெரும்பான்மையான
சட்டங்கள் இயற்றப்பட்டன. கூட்டங்கள், தேசத்துரோக பிரசுரங்களைப் பிரச்சாரத்துக்காக அச்சிடுவது
மற்றும் சுற்றுக்கு விடுவது ஆகியவற்றைத் தடுப்பது, சந்தேகத்துக்கிடமானவர்களைக் கைது
செய்வது என காலனி ஆதிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.