வரலாறு - இரண்டாம் உலகப்போர் | 10th Social Science : History : Chapter 3 : World War II
இரண்டாம் உலகப்போர்
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்
• முதல் உலப்போருக்குப் பிந்தைய அரசியல், பொருளாதார வளர்ச்சிகளை
அறிமுகப்படுத்திக்கொள்ளுதல். அவையே இறுதியில் இரண்டாம் உலகப்போருக்கு
இட்டுச்சென்றதை அறிந்துகொள்ளுதல்
• பொதுவாகப்
போரின் போக்கைப் புரிந்துகொள்ளுதல். குறிப்பாகப் போரின் திருப்பு முனைகளாய் அமைந்த
முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ளுதல்
• இரண்டாம்
உலகப் போரின் விளைவுகளை அறிந்துகொள்ளுதல்
• பேரழிவு
(Holocaust) என்பதையும்,
நாசிச ஜெர்மனியில் யூதர்கள் பெரும் எண்ணிக்கையில்
கொல்லப்பட்டதையும் புரிந்துகொள்ளுதல்
• இரண்டாம்
உலகப்போருக்குப் பின்னர் ஒரு புதிய பன்னாட்டு அமைப்பு முறையை உருவாக்குவதற்காக
அமைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த அறிவைப் பெறுதல்
அறிமுகம்
இருபதாம்
நூற்றாண்டின் முதல் பாதி இவ்வுலகை நிலைகுலையச் செய்து,
பெரும்
சேதங்களை ஏற்படுத்திய இரண்டு மாபெரும் போர்களைச் சந்தித்தது. முதல் உலகப்போர் 1914இல்
தொடங்கி 1918வரையும் இரண்டாம் உலகப்போர் 1939இல்
தொடங்கி 1945 வரையும் நடைபெற்றது. உலகம்
ஏற்கனவே பல போர்களைச் சந்தித்திருந்தாலும் இவ்விரு போர்கள் மட்டுமே உலகப்போர்கள்
எனக் குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில் இவ்விரு போர்களிலும் மோதல்கள் நடைபெற்ற
பகுதிகள் பரந்துவிரிந்ததாக இருந்தன. மேலும் இப்போர்களினால் உயிரிழந்த ஆயுதம்
ஏந்திப் போரிட்டோர், பொதுமக்கள் ஆகியோரின் இறப்பு எண்ணிக்கை மிக
அதிகமாக இருந்தது. மேலும் இவ்விரு போர்களும் ஐரோப்பிய,
ஆசிய,
ஆப்பிரிக்கக்
கண்டங்களில் பல முனைகளில் நடைபெற்றன.
இவ்விரு
போர்களிலும் பிரிட்டன், பிரான்ஸ்,
ரஷ்யா,
அமெரிக்கா
ஆகிய நேச, நட்பு நாடுகளின் கூட்டுப்படைகள் ஜெர்மனியின்
தலைமையிலான மைய, அச்சு நாடுகளுக்கு எதிராகப் போரிட்டன. இரண்டாம்
உலகப்போரில் ஜெர்மனியின் நட்பு நாடுகளாக இத்தாலி மற்றும் ஜப்பான் விளங்கின.