வரலாறு - ஐரோப்பியரின் வருகை | 11th History : Chapter 16 : The Coming of the Europeans
ஐரோப்பியரின் வருகை
கற்றல் நோக்கங்கள்
கீழ்கண்டவை பற்றி அறிதல்
I
•
1600 முதல்
1750 வரையிலான காலகட்டத்தில் இந்திய அரசுகள் மற்றும் சமுதாயத்துடனான ஐரோப்பியரின் தொடர்பு
• இந்தியாவில் அன்றைய நவீனகாலத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த அமைப்புகள்
• இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் இந்தியத் துறைமுகங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
• ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகையினால் இந்திய வணிகர்களிடமும் வணிகத்திலும் ஏற்பட்ட தாக்கங்கள்
II
• இந்தியாவுடனான வணிகத்தை வளர்ப்பதில் போர்த்துகீசியர்களின் பங்களிப்பு
• இந்தியாவில் போர்த்துகீசியர், டச்சுக்காரர் வருகையினால் ஏற்பட்ட தாக்கங்கள்
• பிரெஞ்சுக்காரருக்கும், டச்சுக்காரருக்குமான பகைமையும் போர்களும்
• டென்மார்க் காலனிப் பகுதிகளும் அவற்றின் முக்கியத்துவமும்
• கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட ஏகபோக வணிகத்திற்கான மோதல்கள்
• மூன்று கர்நாடகப் போர்களுக்குப் பிறகு மறுக்க முடியாத சக்தியாக இங்கிலாந்து எழுச்சி பெறுதல்
அறிமுகம்
1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நாவாப்பை ஆங்கிலேயர் வெற்றி கொண்ட பிறகு அந்த ஆண்டை இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. ஆனால் ஐரோப்பியர் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு வந்துவிட்டனர். அவர்களின் நோக்கம் ஐரோப்பியச் சந்தைக்குத் தேவையான மிளகு, இலவங்கம், கிராம்பு முதலான நறுமணப் பொருட்களைக் கொள்முதல் செய்வதும் இந்தியப் பெருங்கடல் பகுதி வணிகத்தில் ஈடுபடுவதுமாகும்.
இந்தியாவில் முதலாவதாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட ஐரோப்பியர் போர்த்துகீசியரே. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவிற்கு நேரடிக் கடல்வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா ஆவார். பிறகு மேற்குக் கடற்கரைப் பகுதியில் போர்த்துகீசியர் கோவாவை 1510இல் கைப்பற்றினர். இதனால் இந்தியாவிலிருந்த போர்த்துகீசியருக்கும் கிழக்கே மலாக்கா, ஜாவா பகுதிகளுக்கும் கோவா அரசியல் தலைமையிடமானது. போர்த்துகீசியர் தங்களுடைய அரசியல் ஆக்கிரமிப்பு, வலுவான கப்பற்படை ஆகியவை மூலம் இந்தியப் பெருங்கடல் பகுதி வணிகத்தைத் தங்களின் முறையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். டையூ, டாமனிலிருந்த கோட்டைகள், கப்பற்படை வலிமை ஆகியவற்றின் துணைகொண்டு அரபிக்கடலின் கப்பல் போக்குவரத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. ஒரு நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயரும் டச்சுக்காரரும் தங்களின் நடவடிக்கைகளைப் போர்த்துகீசியரின் செயல்திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைத்துக் கொண்டனர். ஆகவே ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகையானது இந்திய அரசியல் அதிகார சக்திகளோடும், உள்ளூர் வணிகர்கள் மற்றும் சமூகத்தோடும் தொடர்ந்து கொண்டிருந்த தொடர்பின் உச்சமே 1757இல் வங்காளத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்பாடம் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி இந்திய அரசியல் வரலாற்றையும், 1600க்குப் பின்னர் அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கிறது. இரண்டாம் பகுதி ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகையையும் அவை ஒவ்வொன்றும் இந்தியச் சமுதாயத்தில் ஏற்படுத்தியத் தாக்கத்தினையும் விவாதிக்கிறது.