வரலாறு | சமூக அறிவியல் - காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்
• ஆங்கிலேயருக்கு எதிரான பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின்
போராட்டங்களின் தன்மை
• 1857 இல் பெரும் கலகம்
வெடிப்பதற்கான காரணிகளும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் தங்கள்
அணுகுமுறையில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்களும்
• இந்திய
தேசிய காங்கிரஸ் உருவாக்கத்துக்கான காரணிகளும் தொடக்ககால தேசியவாதிகளின்
கண்ணோட்டமும்
• 1905 இல் வங்கப்பிரிவினைக்கு
பின்னாலிருந்த ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையும் வங்காளத்தில் சுதேசி
இயக்கத்தின் தோற்றமும்
• தன்னாட்சி
(ஹோம் ரூல்) இயக்கத் தோற்றத்துக்கானப் பின்னணி
1757 ஜூன் 23இல் நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நவாபான சிராஜ்உத்-தௌலா ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்டார். ஆங்கிலேயப் படையின் தலைமைத் தளபதியான ராபர்ட் கிளைவ், வங்காளத்தின் நவாப் படைக்கு தலைமையேற்றிருந்தவரும் சிராஜ்-உத்தௌலாவின் சித்தப்பாவுமான மீர் ஜாபரின் இரகசிய ஆதரவைப் பெற்று, பிளாசிப் போருக்கு வித்திட்டார். சிராஜ்-உத்-தௌலாவின் அடக்குமுறைக் கொள்கைகளால் அவதிப்பட்ட ஜகத் சேத்துகள் (வங்காளத்திலிருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர்) கிளைவுக்கு உதவினார்கள். வங்காளத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்ட மீர் ஜாபரிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி 2 கோடியே 25 லட்சம் ரூபாயை 1757 மற்றும் 1760-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பெற்றது. இந்தத் தொகை பின்னர் ஆங்கிலேயர்களின் ஜவுளித்துறையை அதிவேகமாக இயந்திரமயமாக்க உதவிய பிரிட்டனின் தொழில் புரட்சிக்கு பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவில் தொழில்கள் முடங்கவும் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான சந்தையை இந்தியாவில் உருவாக்கவும் வழிவகுத்தது. இந்தியா, கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையடிக்கப்படும் செயலானது மேலும் 190 ஆண்டுகளுக்கு நீடித்தது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் மற்றும் மத்தியிலும் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த பல்வேறு போராட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகளை விளக்குவதாக இந்தப் பாடம் அமைந்துள்ளது.