அரசியல் அறிவியல் - மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் | 11th Political Science : Chapter 2 : State
மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் (Concept of Welfare State)
இந்திய அரசமைப்பின் 'அரசு வழிகாட்டி நெறிமுறைகள்', மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மக்கள் நல அரசு பற்றிய சிந்தனையை பிரதிபலிப்பதை கவனித்து இருக்கிறீர்களா? குடிமை உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த அம்சங்கள் அரசமைப்பின் அடிப்படை உரிமைகளில் வைக்கப்பட்டுள்ளபோது, சமூக, பொருளாதார மேம்பாட்டினை வலியுறுத்தும் வழிமுறைகள் நான்காம் பகுதியில் 'அரசு வழிகாட்டி நெறிமுறைகள்' எனும் தலைப்பின் கீழ் அமைந்துள்ளது எதனால் என்று அறிவீர்களா? அதன் காரணமென்ன? அரசமைப்பில் உள்ள அடிப்படை உரிமையின் பகுதியாக பொருளாதார உரிமைகள் ஏன் இல்லை?
குறைந்தபட்ச மக்கள்தொகை மற்றும் அதே நேரத்தில் வளங்கள் மிகுதியாக இருப்பது, மக்கள் நல அரசு மாதிரியின் (Welfare State Model) வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணமாகும். ஸ்கேண்டிநேவியா நாடுகள் மக்கள் நல அரசிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன. இந்தியாவின் அரசமைப்பு ஒர் நல அரசினை நிறுவ முயல்கிறபோதிலும், வளங்கள் போதாமை, அதே சமயம் பெருகும் மக்கள்தொகை ஆகியவை மக்கள் நல அரசின் இலக்குகளை எட்ட தடையாக உள்ளது.
'மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்டதாகும். மக்கள் நல அரசில், அரசாங்கத்தினுடைய முதன்மை சிந்தனை என்பது மனித வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றவேண்டும் என்பதாகும்.
குடிமக்களின் நல்வாழ்விற்கான பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டினை பேணுதல் நல அரசின் பங்காகும். குடிமக்களின் பொருளாதார மற்றும் சமூக நலன் பின்வருவனவற்றின் அடிப்படையிலானதாகும்.
(1) வாய்ப்புகளில் சமத்துவம் எனும் கொள்கை
(2) பொருளாதார வளங்களை சமமாக வழங்குவதற்கான கொள்கை
(3) குறைந்தபட்ச நல் வாழ்க்கையை தங்களால் ஏற்படுத்திக்கொள்ள இயலாதவர்களுக்கு, அவ்வாறான வாழ்க்கையினை ஏற்படுத்தித் தருதல் ஆகியனவாகும். சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஒரு காலனித்துவ அரசாக இருந்தது. இந்தியர்கள் ஆங்கிலேய முடியாட்சியின் கீழ் இருந்தனர். நம் நாடு சுதந்திரம் அடைந்ததும், நாம் நமது அரசமைப்பினை உருவாக்கினோம். நமது அரசமைப்பானது மேற்கத்திய மக்கள் நல அரசின் சிந்தனைகளை உள்வாங்கியதாகும்.
செயல்பாடு