அரசியல் அறிவியல் - காலனியாதிக்க காலத்துக்கு பிந்தைய அரசு என்ற கருத்தாக்கம் | 11th Political Science : Chapter 2 : State
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டு உருவான புதிய தேசிய அரசுகள் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகள் என அழைக்கப்படுகின்றன. மேம்பாட்டு அரசுகள் எனவும் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகள் எனவும் இவை அழைக்கப்படுகின்றன. அரசின் கட்டமைப்பை பொறுத்தவரை காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகளில் காலனியாதிக்க கால அரசுகளின் இயல்புகள் அப்படியே உள்ளன. ஆனால் தற்பொழுது அரசின் கட்டமைப்புகளுடைய குறிக்கோள்கள் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிவிட்டதைக் காணலாம். பொதுவாக, காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகளில் அதிக அளவிலான வறுமை, அரசியல் நிலையற்றத்தன்மை, மற்றும் ஆளுகையில் திறனின்மை போன்றவை காணப்படுகிறது. நவீன அரசுக்கும், மரபுசார் அதிகாரத்தை தன்னகத்தே கொண்டுள்ள சமுதாயத்திற்கும் உள்ள முரண்பாடுகளே இதற்கு காரணம் எனலாம்.
உலகின் புதிய பகுதிகளுக்குள் நுழைந்த காலனியாதிக்கச் சக்திகள், அங்கே நிலவிய பாரம்பரிய மரபுகள் மற்றும் பண்பாட்டினை அழித்ததுடன் தங்கள் மரபுகளையும் பண்பாட்டினையும் தொடர்ந்து திணித்தவாறு இருந்தனர். இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட மரபுகள் மற்றும் பண்பாடுகளுடன் மாற்றத்திற்கு உள்ளான மக்கள், தங்கள் நாடு விடுதலை அடைந்தவுடன், காலனியாதிக்க அடையாளங்களை துறந்து தங்களுக்கென சுய அடையாளங்களை ஏற்படுத்தும் உடனடி கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைந்து அவர்கள் தன்னம்பிக்கையுடன் தங்களின் புதிய தேசிய அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.) காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகளில் ஆள்வோருக்கும், ஆளப்படுவோருக்கும் இடைவெளி ஏற்பட ஒருமுக்கிய காரணமானது. இன்றளவும் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகளில் ஆள்வோர் அன்னிச்சையாக நடந்து கொள்வதைக் காணலாம்.