அணு இயற்பியல் - கதிரியக்கம்: பீட்டா சிதைவு (Beta decay) | 12th Physics : UNIT 9 : Atomic and Nuclear Physics
பீட்டா சிதைவு (Beta decay)
பீட்டா சிதைவின் போது, கதிரியக்க அணுக்கரு
எலக்ட்ரான் அல்லது பாசிட்ரானை வெளிவிடுகிறது. எலக்ட்ரான் (e-) வெளியிடப்பட்டால்
β- சிதைவு
என்றும், பாசிட்ரான் (e+) வெளியிடப்பட்டால் β+ சிதைவு என்றும் அழைக்கப்படும். பாசிட்ரான்
என்பது எலக்ட்ரான் நிறையும் மற்றும் +e மின்னூட்டமும் கொண்ட எலக்ட்ரானின் எதிர்த்துக்கள்
ஆகும். பாசிட்ரான் மற்றும் எலக்ட்ரான் இவ்விரண்டுமே பீட்டா துகள்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
β சிதைவு
β - சிதைவில் அணுக்கருவின்
நிறையெண் மதிப்பு மாறாத நிலையில் அதன் அணு எண் மதிப்பு ஒன்று அதிகரிக்கும். இச்சிதைவினை
பின்வருமாறு குறிப்பிடலாம் :
அணுக்கரு X ஒரு எலக்ட்ரானையும் ஒரு எதிர் நியூட்ரினோவையும்
(anti-neutrino) வெளியிடுவதனால் Y ஆக மாறுகின்றது. அதாவது, ஒவ்வொரு β சிதைவிலும்
அணுக்கரு X - இல் உள்ள நியூட்ரான் ஒன்று ஒரு எலக்ட்ரான் மற்றும் ஒரு எதிர் நியூட்ரினோவை
வெளிவிடுவதால் புரோட்டானாக மாறுகின்றது. இது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
n → p + e− +
இங்கு p-புரோட்டான், எதிர்நியூட்ரினோ.
எடுத்துக்காட்டு: β- சிதைவின்
மூலம் கார்பன் 146C நைட்ரஜனாக 147N மாறுகின்றது.
146C → 147N + e− +
β+ சிதைவு:
β+
சிதைவில் அணு எண் மதிப்பு ஒன்று குறையும், ஆனால்
நிறை எண் மாறாமல் இருக்கும். இச்சிதைவினைப் பின்வருமாறு குறிப்பிடலாம்:
அணுக்கரு X ஒரு பாசிட்ரானையும் ஒரு நியூட்ரினோவையும்
வெளிவிட்டு Y ஆக மாறுகின்றது. அதாவது, ஒவ்வொரு β+ சிதைவிலும் அணுக்கரு X-ல் உள்ள
புரேட்டான் ஒன்று ஒரு பாசிட்ரான் (e’) மற்றும் ஒரு நியூட்ரினோவை வெளிவிடுவதனால் நியூட்ரானாக
மாறுகின்றது. இதை நாம் பின்வருமாறு குறிக்கிறோம்.
p → n + e+ + υ
ஆனால் தனித்த ஒரு புரோட்டான் (எந்தவொரு அணுக்கருவிற்கும்
உள்ளே இல்லையெனில்) β+ சிதைவுக்கு உட்படாது. ஏனென்றால் நியூட்ரானின் நிறையானது,
புரோட்டானின் நிறையை விட அதிகமாக உள்ளதால், ஆற்றல் மாறா விதியின்படி, இந்த நிகழ்வு
சாத்தியப்படாது. ஆனால் தனித்த ஒரு நியூட்ரான் (எந்தவொரு அணுக்கருவிற்கும் உள்ளே இல்லையென்றாலும்)
β+ சிதைவுக்கு உட்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
ஆல்பா சிதைவின் ஒரு முக்கியமான பயன்பாடு, ஆபத்து நிறைந்த எவ்வகைத்
தீயிலிருந்தும் நம்மைக் காத்திடும் தீயுணர் (smoke detector) கருவியாகும்.
தீயுணர் கருவியானது, கிட்டத்தட்ட 0.2 mg அளவுள்ள, அமெரிசியம்
(24195Am) என்றழைக்கப்படும் மிகக்குறைந்த கதிரியக்கத் தன்மை
கொண்ட ஒரு செயற்கைக் கதிரியக்க ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது. எதிரெதிர் மின்னேற்றம்
செய்யப்பட்ட இரு உலோகத் தட்டுகளுக்கு இடையில் இந்த கதிரியக்க மூலம் வைக்கப்படுகின்றது.
தட்டுகளுக்கிடையே காற்றிலுள்ள நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் (24195Am)
இலிருந்து வெளிவிடப்படும் a-கதிர் வீச்சினால் தொடர்ந்து அயனியாக்கம் செய்யப்படுகின்றன.
இதன் விளைவாக, சிறிய அளவு நிலையான மின்னோட்டம் தொடர்ந்து மின்சுற்றில் செல்கின்றது.
இந்நிலையில், புகை உட்சென்றால் காற்று மூலக்கூறுகளுக்குப் பதிலாக புகைத் துகள்களால்
கதிர்வீச்சு உட்கவரப்படும். இதன் விளைவாக, குறைவான அளவே அயனியாக்கம் நடைபெறுவதால் உருவாகும்
மின்னோட்டமும் குறையும். மின்னோட்டத்தின் இந்த சரிவு மின்சுற்றால் உணரப்பட்டு எச்சரிக்கை
மணியும் ஒலிக்கப்படுகின்றது. அமெரிசியத்தால் வெளிவிடப்படும் கதிர்வீச்சு அளவு பாதுகாப்பான
அளவை விடவும் மிக குறைவானதாகவே இருப்பதால் அது நமது உடலுக்கு தீங்கற்றது.
எடுத்துக்காட்டு: சோடியம் ( 2211Na)
β+ சிதைவின்
மூலம் நியானாக ( 2210Ne) மாறுகிறது.
2211Na → 2210Ne + e+ + υ
பீட்டா சிதைவின் போது அணுக்கருவிலிருந்து வெளியேறும்
எலக்ட்ரானோ, பாசிட்ரானோ அணுக்கருவினுள் எப்போதுமே இருந்ததில்லை என்பதைப் புரிந்து கொள்வது
அவசியம். மாறாக, நியூட்ரான் புரோட்டானாகவோ அல்லது புரோட்டான் நியூட்ரானாகவோ அணுக்கருவினுள்ளேயே
மாறும் போது அவை உருவாகி, வெளியேறுகின்றன.
நியூட்ரினோ
(v)
பீட்டா சிதைவின் போது, தாய் அணுக்கருவிலுள்ள
நியூட்ரான் ஒன்று எலக்ட்ரானை வெளிவிட்டு சேய் அணுக்கருவாக மாறுகின்றது என்றே முதலில்
கருதப்பட்டது.
ஆனால் அணுக்கருவிலிருந்து வெளியேறும் எலக்ட்ரானின்
இயக்க ஆற்றல் மதிப்பு ஆய்வுகளின் முடிவுகளுடன் பொருந்தவில்லை . ஆல்பா சிதைவில், ஆல்பா
துகள்கள் குறிப்பிட்ட சில அனுமதிக்கப்பட்ட, தனித்தனியான (discrete) குறிப்பிட்ட ஆற்றல்
மதிப்புகளை மட்டுமே பெற்றுள்ளன. ஆனால் பீட்டா சிதைவில், பீட்டா துகள்கள் (எலக்ட்ரான்கள்)
தொடர்ச்சியான ஆற்றல் மதிப்புகளைப் பெற்று விளங்குகின்றன. ஆற்றல் மாறாவிதி மற்றும் உந்தம்
மாறா விதியின் அடிப்படையில் எலக்ட்ரான் ஆற்றல் மற்றும் சேய் அணுக்கரு Y ஆகியவை குறிப்பிட்ட
தனித்த மதிப்புகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆற்றல் மாறா விதியும், உந்தம் மாறா விதியும்
இங்கு மீறப்பட்டுள்ளன போல் தெரிகின்றது. மேலும், பீட்டா துகளின் ஆற்றல் ஏன் தொடர்ச்சியான
மதிப்புகளைப் பெற்றுள்ளது என்பதையும் விளக்க இயலவில்லை . எனவே பீட்டா சிதைவானது, பல
வருடங்களுக்கு ஒரு புதிராகவே இருந்து வந்தது.
விடுபட்ட ஆற்றல் மற்றும் உந்தம் ஆகியவற்றை
விளக்குவதற்கு, பீட்டா சிதைவில் மூன்றாவதாக இன்னுமொரு துகள் இருக்க வேண்டும் என்று
கொள்கை மற்றும் சோதனைகளின் அடிப்படையில் பவுலி (W. Pauli) என்பார் 1931 ஆம் ஆண்டு எடுத்துரைத்தார்.
மின்னூட்டமற்ற, மிகச்சிறிய நிறை கொண்ட இத்துக்களுக்கு நியூட்ரினோ (சிறிய நடுநிலையான
ஒன்று) என்ற பெயரை பெர்மி என்பவர் சூட்டினார். பல ஆண்டுகளுக்கு நியூட்ரினோ (V என்பது
கிரேக்கக் குறியீடு. இதை நியூ என்று உச்சரிக்க வேண்டும்) கொள்கை அளவிலான துகளாகவும்
ஆய்வினால் நிரூபிக்கப்பட முடியாமலும் இருந்து வந்தது. இறுதியில் 1956ஆம் ஆண்டு பிரடெரிக்
ரெயின்ஸ் மற்றும் கிளைடு கோவன் ஆகியோர் சோதனைகளின் மூலம் நியூட்ரினோவைக் கண்டுபிடித்தனர்.
இந்தக் கண்டுபிடிப்புக்காக 1995ஆம் ஆண்டு ரெயின்ஸ் நோபல் பரிசினைப் பெற்றார்.
நியூட்ரினோ பின்வரும் பண்புகளைப் பெற்றுள்ளது
:
• அதன் மின்னூட்டம் சுழி ஆகும்
• அது எதிர் நியூட்ரினோ என்ற எதிர்த்துக்களை
பெற்றுள்ளது.
• அண்மைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் மிகச்சிறிய
நிறையை நியூட்ரினோ பெற்றுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
• பருப்பொருளுடன் நியூட்ரினோமிகமிகக்குறைந்த அளவே இடைவினை
புரிகிறது. எனவே அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். உண்மையில், ஒவ்வொரு வினாடியும்
சூரியனிலிருந்து வரும் டிரில்லியன் கணக்கிலான நியூட்ரினோக்கள் நம் உடலினூடே புகுந்து
செல்கின்றன. எந்த இடைவினையும் இல்லாததால் நம்மால் அவற்றை அறிய இயலவில்லை