அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | 8th Social Science : History : Chapter 7 : Urban changes during the British period
அலகு - 7
ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள்
கற்றலின்
நோக்கங்கள்
>பண்டைய மற்றும் இடைக்காலங்களில் நகரங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப்
புரிந்து கொள்ளுதல்
>ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நகரமயமாக்கலின் தன்மை மற்றும் அம்சத்தைப்
பகுப்பாய்வு செய்தல்
>புதிய மையங்களான இராணுவ குடியிருப்புக்கள், மலைவாழிடங்கள் மற்றும்
துறைமுக நகரங்கள் பற்றி அறிந்து கொள்ளுதல்
அறிமுகம்
பண்டைய கால நகரங்கள்
பண்டைய
காலங்களில் மன்னரின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்
நகரங்கள் தோன்றியதோடு, அவற்றின் அமைப்பு வர்த்தகத்திற்கு ஏற்றார்போல் கடல் மற்றும்
ஆறுகளை அடைவதற்கு ஏற்றதாக இருந்தது. பெரும்பாலானவை நிர்வாக, சமய மற்றும் பண்பாட்டு
மையங்களாக வளர்ந்தன. ஹரப்பா, மொகஞ்சதாரோ, வாரணாசி, அலகாபாத் மற்றும் மதுரை ஆகியவை புகழ்பெற்ற
பண்டைய கால நகரங்கள் ஆகும்.
இடைக்கால நகரங்கள்
இடைக்காலத்தில்
பெரும்பாலான நகரங்கள் பிராந்திய மற்றும் மாகாணங்களில் தலைநகரங்களாக வளர்ந்தன. அவை கோட்டை
நகரமாகவோ அல்லது துறைமுக நகரமாகவோ செயல்பட்டன. அவற்றில் முக்கியமானவை டெல்லி, ஹைதராபாத்,
ஜெய்பூர், லக்னோ, ஆக்ரா மற்றும் நாக்பூர்.
நவீன கால நகரங்கள்
ஐரோப்பியர்களின் வருகை நகரங்களின் வளர்ச்சியில் புதிய
மாற்றங்களைக் கொண்டு வந்தது. அவர்கள் முதலில் சூரத், டாமன், கோவா மற்றும் பாண்டிச்சேரி
போன்ற சில கடலோர நகரங்களை உருவாக்கினர். இந்தியாவில் தங்களை நன்கு நிலைநிறுத்திக் கொண்ட
பிரிட்டிஷார் மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களை நிர்வாகத் தலைநகராகவும்
வணிக மையங்களாகவும் வளர்த்தனர். ஆளுமையின் பரப்பு விரிவடைய, பல புதிய நகரங்களை அதன்
அமைவிடத்திற்காகவும் தேவைக்காகவும் வளங்களுக்காகவும் உருவாக்கினர். புதியதாக வளர்ச்சிபெற்ற
நகரங்கள், மலை நகரங்கள், தொழில் நகரங்கள், நீதிமன்ற நகரங்கள், இருப்புப்பாதை நகரங்கள்,
இராணுவ குடியிருப்புகள் மற்றும் நிர்வாக நகரங்களாக விளங்கின.